Tuesday, April 12, 2016

நந்தவனத்தில் பல ஆண்டிகள்!


தேர்தல் குறித்த செய்திகளுக்கு நடுவே திடீரென்று காண நேர்ந்த அந்த ஒரு வரி, சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கூட்டணி பற்றி பாஜக - தமாகா இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அந்தச் செய்தி கூறியது. பல கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த தமாகா, கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் சங்கமமாகிவிட்டது. என்றாலும், பாஜகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது இந்தத் தேர்தலின் விசித்திரங்களில் ஒன்று. தமாகாவுக்கும் அதன் தாய்க் கட்சியான காங்கிரஸுக்கும் கொள்கை ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்நிலையில், தமாகாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் பேச்சுவார்த்தையை நாட்டில் எங்கும் இல்லாத அதிசயமாக, காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாகவே கருத வேண்டியிருக்கிறது.
 
கேலிக்கூத்துகளின் அரங்கம்

விசித்திரங்களுக்குக் குறைவில்லாத தேர்தல் இது. மநகூவில் சேரும் கட்சிகள் சேர்வதற்கு முன்பு மேற்கொண்ட பயணங்கள் தேர்தல் கூட்டணி என்பது பண்டிகைக் காலத் தள்ளுபடி வியாபாரமாகவே மாறிவிட்டதைக் காட்டுகின்றன. திமுகவின் பாத்திரத்தில் விழ வேண்டிய பழம் மநகூவின் கிண்ணத்தில் விழுந்ததையும், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுடனும் பேரம்பேசி அது படியாமல் மநகூவிற்கு தமாகா வந்து சேர்ந்ததையும் மட்டும் வைத்து இந்த முடிவுக்கு நாம் வர வேண்டியதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திமுகவைத் தோற்கடிப்பதையே தன் லட்சியமாக முழங்கிவரும் வைகோவின் மதிமுகவும் திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய நிலை எட்டு மாதங்களுக்கு முன்புவரை இருந்தது. ஆளுமை மோதல்களும் தந்திரமான ஓரங்கட்டல்களும் சேர்ந்துதான் இந்தக் கட்சிகளைக் கரை ஒதுக்கின என்பது பகிரங்க ரகசியம். பல சமயங்களில் அதிமுகவுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் அதிமுகவில் தங்களுக்கான இடம் கிடைக்காமல், திமுகவுடனும் சேர இயலாமல் தனிமரமாய் நின்றன.

மநகூவில் இருக்கும் கட்சிகளுக்குத் தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது அவற்றின் முதல் தேர்வு அல்ல. நிர்க்கதியானவர்கள் சேர்ந்து அமைத்த கூட்டு இது. மாற்றுச் சக்தி என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும்போது அது கேலிக்கூத்தாகத் தோற்றமளிப்பது இதனால்தான். இந்தக் கட்சிகள் திமுக, அதிமுகவின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘அப்படியானால் அவர்களோடு கூட்டணி சேர நீங்கள் ஏன் முயன்றீர்கள்?’ என்ற கேள்வி மக்கள் மனதில் எழும் அல்லவா? அந்தக் கேள்விக்கெல்லாம் பொருள் இல்லை என்னும் அளவுக்கு கேலிக்கூத்துகளின் அரங்கமாக மாறியிருக்கிறது இந்தத் தேர்தல் களம்.

கேலிக்கூத்துகள் ஒருபுறம் இருக்க, அரசியலில் பெரிய ஆளுமைகளாக வலம்வந்த பலர் சிறுத்துப்போய் நிற்கிறார்கள். பல ஆண்டுகளாக ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் கட்டுடைகின்றன. திராவிட இயக்கத்தின் போர்வாளாகப் புறப்பட்ட வைகோ, கூட்டணி பேரத்துக்காக லஞ்சம் வாங்கினீர்களா என்னும் நேரடியான கேள்வியை எதிர்கொள்ள அநாகரிக வார்த்தைகளையும் சாதி ஆணவப் பேச்சையும் நாடுகிறார். எந்தப் பதற்றமும் இல்லாமல் தெளிவாக அவர் முன்வைத்த மோசமான வசைகளுக்கு உலகமே கண்டனம் தெரிவித்த பிறகு, வாழ்நாளில் நான் செய்த பெரிய குற்றம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் புரட்சிப் புயல். உலகையே புரட்டிப்போடும் ஆவேசத்துடன் புறப்பட்ட புயலின் ஆவேசம் தேநீர்க் கோப்பைக்குள் சலனத்தை ஏற்படுத்திவிட்டு அடங்கிவிடுமோ என்று தோன்றுகிறது. விஜயகாந்தை முதல்வராக்குவதைத் தனது லட்சியமாக அறிவிக்கும் இந்த திராவிட மறுமலர்ச்சிச் சிங்கம், விஜயகாந்த் எந்த வகையில் மாற்றுச் சக்தியாக இருப்பார் என்பதைத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

வைகோவின் மன்னிப்பால் கருணாநிதியின் மனதில் பட்ட காயம் மறையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மீது இழிவான சொற்களைப் பயன்படுத்தும் காடுவெட்டி குரு போன்றவர்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருப்பவர்தான் இவர். வைகோவாவது மன்னிப்புக் கேட்டார். அதைக் கூடச் செய்ய இவரோ இவரது கட்சியினரோ தயாராக இல்லாத நிலையில், காடுவெட்டிகளின் பேச்சால் தலித் மக்களின் மனங்களில் சுட்ட வடுக்கள் எப்படி நீங்கும்?
 
சிதையும் பிம்பங்கள்

எல்லாக் கட்சிகளுமே உடலை விறைத்துக்கொண்டு வீராவேசமாகப் பேசினாலும் அவற்றின் கால்கள் நடுங்குவதை உணர முடிகிறது. இந்தத் தேர்தல் எல்லாத் தலைவர்களின் பிம்பங்களையும் கட்டுடைத்து, அவர்களை அம்பலப்படுத்திவருகிறது. கட்சிகள் தமக்கான குழிகளைத் தாமே வெட்டிக்கொள்கின்றன. பாடுபட்டுப் பெற்றுவந்த பொருளைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைக்கும் ஆண்டியை நினைவுறுத்தும் அபத்தத்தின் திருவுருக்களாக நிற்கிறார்கள் அரசியல்வாதிகள். புறக்கணிக்கப்பட்ட உதிரி அமைப்புகள் மாற்றுச் சக்தியாக வேடமிட்டு உலவுகின்றன. வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்பை திமுக இழந்ததற்கு அக்கட்சியே காரணம். அந்தக் கட்சியை உள்ளூர அரித்துவரும் குடும்ப ஆதிக்க அரசியலே ‘அந்நியர்’களை விரட்டியடித்திருக்கிறது. தமிழகத்தின் மகத்தான ராஜதந்திரி தனது அஸ்திரங்களை இழந்து களத்தில் பலவீனப்பட்டு நிற்கிறார். எட்டாக் கனிகளை எண்ணிக் குமைந்துகொண்டிருக்கிறார். யாருமே சீந்தாமல் புறக்கணித்துவிட்ட ஒரு தேசியக் கட்சி, கோட்டையில் தாமரை மலரும் என்று முழங்கி, சுய பரிகாசத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

ஒப்பீட்டளவில் உறுதியான தலைவராகத் தோற்றமளிக்கும் ஜெயலலிதாவின் பிம்பமும் கட்டுடைந் திருக்கிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டுக் கணக்கற்ற முறைகள் அதை மாற்றிக்கொண்டிருப்பது தலைமையின் தடுமாற்றமன்றி வேறென்ன? ஒவ்வொரு மாற்றமும் அதற்கு முந்தைய அறிவிப்பைப் பரிகசிக்கிறது. அப்படியானால், அந்த மாற்றங்களைச் செய்பவர், தன்னைத் தானே பரிகசிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். மதுவிலக்கு கோரி மாநிலமே கதறிக்கொண்டிருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவதும் தன்னைத் தானே பரிகசித்துக்கொள்ளும் செயல்தான்.
ஒவ்வொரு தேர்தலிலும் வலுவான கூட்டணி, தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய பிரச்சினை முதலானவை தேர்தலுக்கு முன்பே அடையாளம் காணப்படும். இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் தெரியவில்லை. சகல அம்சங்களிலும் அடைந்துவரும் ஏமாற்றங்களால் விளைந்த கோபங்களைத் தாண்டி விசுவாச வாக்காளர்கள் பழக்கம் சார்ந்த தெளிவை அடைந்துவிடுவார்கள். ஆனால், புதிய வாக்காளர்களான இளைஞர்களின் கோபம் அப்படியல்ல. எந்த அளவுக்குப் பிம்பங்களை ஆவேசமாகப் பின்பற்றுகிறார்களோ அதே அளவுக்கு விரைவாக அந்தப் பிம்பங்களை உடைத்தெறியும் உத்வேகமும் கொண்ட இளைஞர்கள் எடுக்கும் முடிவு, இந்தத் தேர்தலின் ஆகப் பெரிய வியப்பாக அமையக்கூடும். பழம் பெருமைகளின் பீற்றல்கள், காலாவதியான முழக்கங்கள், பொய்கள், பசப்பல்கள் ஆகியவற்றை நம்பாத தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் உலகத்தில் எந்தப் பிம்பமும் புனிதப் பிம்பம் அல்ல. எல்லாமே பரிகசிப்புக்குரியவை. அரசியல் தலைவர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பங்கள் உண்மையில் மாய பிம்பங்கள் என்பதை மெய்நிகர் உலகில் இவர்கள் நிரூபித்துவருகிறார்கள்.

நாள்தோறும் சிதைந்துவரும் பிம்பங்களே இந்தத் தேர்தலின் மகத்தான சாட்சி. தேர்தல் செய்திகளும் முழக்கங்களும் பிம்ப உருவாக்கங்களும் வழிபாடுகளும் நகைச்சுவை விருந்தாகவே பார்க்கப்படும் இந்தத் தேர்தலின் முடிவுகள் வருங்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். குழப்பத்தின் உச்சியில் தெளிவு பிறந்தே ஆக வேண்டும். ஆகப் பெரிய குழப்பமான 2016 சட்டமன்றத் தேர்தல் தெளிவுக்கான முன்னோட்டமாக விளங்கினால் இந்தக் குழப்பங்களையும் ஆளுமைச் சிதைவுகளையும் வரலாற்றின் வரப்பிரசாதமாக நாம் கருதிக்கொள்ளலாம். ஆண்டிகளின் பானைகள் உடையலாம். ஆனால், நந்தவனம் சீரழிந்துவிடக் கூடாது என்பதுதான் வாக்காளர்களின் ஆகப் பெரிய பொறுப்பு.

No comments:

Post a Comment