Friday, April 1, 2016

கையிலிருந்து நழுவியது கோப்பை


லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கினார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

அஜிங்க்ய ரஹானேக்கும் இந்தத் தொடரில் இதுதான் முதல் ஆட்டம். இதே மும்பை ஆடுகளத்தில் பலமுறை களம் கண்ட அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. 35 பந்துகளில் 40 ரன் எடுத்த அவர், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அணியின் ரன் விகிதத்தைக் கூட்ட வேண்டியதன் தேவையை உணர்ந்து ஆடியதாகத் தெரியவில்லை. இன்னொரு மும்பை ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 43 ரன் எடுத்து அணி பெரிய இலக்கை எட்டுவதற்கு ஓரளவு உதவினார். ஆனால் 8-வது ஓவரில் இவர் ஆட்டமிழக்க, பொறுப்பு மீண்டும் விராட் கோலியின் மீது விழுந்தது.

விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் சேர்ந்து 192 ரன்களை இந்தியா எட்டுவதற்கு உதவினார்கள். இது பெரிய ஸ்கோர்தான். ஆனால், மட்டை வீச்சுக்குச் சாதகமான மும்பை ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுவதே சாதகமானது. இரண்டாவதாகப் பந்து வீசும்போது பனிப்பொழிவால் ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதம் பந்து வீச்சாளர்களுக்குப் பந்தின் மீதான இறுக்கமான பிடியைப் பாதிக்கும். எனவே இரவு நேர ஆட்டத்தில் இந்தக் களத்தில் இரண்டாவதாகப் பந்து வீசுவது கடினம். ஆடுகளத்தின் தன்மையைத் துல்லியமாகக் கணித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி 192-ஐக் கண்டு அஞ்சவில்லை. இந்தியா தேவையை விடப் பத்து ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது என்று தன் அணியினரிடம் சொன்னார். அவர் சொன்னதை அவரது மட்டையாளர்கள் நிரூபித்தார்கள்.

பெரிய இலக்குகளைக் கேலிக்கூத்தாக மாற்றக்கூடிய வலிமையும் வல்லமையும் படைத்த கெய்ல் ஆட்டமிழந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்கள் அஞ்சவில்லை. ஒவ்வொருவரும் தனக்கான பொறுப்பை உணர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திய அணியினர் செய்த தவறுகளும் அவர்களுக்கு உதவின. ரவிச்சந்திரன் அஸ்வினும் ஹர்திக் பாண்டியாவும் வீசிய நோ பால்களால் தப்பிப் பிழைத்த சிம்மன்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தில் அவர் கொடுத்த கடினமான கேட்சை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார். இந்த பந்து பிடிக்கப்பட்டிருந்தாலும் ஆட்டம் திசைமாறியிருக்கலாம்.

நோ பால்களும் எல்லைக் கோட்டுக்கு அருகே நழுவவிடப் பட்ட கேட்சும் ஆட்டம் இந்தியாவை விட்டுக் கைநழுவிப் போன தற்கு முக்கியமான காரணங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியில் அதிக ரன் குவித்த கோலியும் இரண்டு முறை ரன் அவுட் ஆகாமல் தப்பிப் பிழைத்தார். இந்தியா இன்னும் பத்து ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 35 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே தன் ஆட்டத்தில் இன்னும் வேகம் காட்டியிருக்க வேண்டும். இந்தியா இந்தத் தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை எடுக்கவில்லை. முதல் முறையாக ரோஹித்தின் மட்டை உரக்கப் பேசியது. ஆனால், பெரிய ஷாட்களை அனாயாசமாக ஆடும் ரோஹித், சுழல் பந்தைக் கணிக்க முடியாமல் ஆட்டமிழந்தது அவரது ஆட்டத்தில் உள்ள போதாமையையே காட்டுகிறது. நன்கு பழக்கமான ஆடுகளத்தில் அவர் மேலும் அதிக நேரம் நின்று பெரிய இலக்கை எட்ட உதவியிருக்க வேண்டும்.

47 பந்துகளில் 89 ரன் அடித்த கோலி, ரன் விகிதத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்காவிட்டால் அணி யின் நிலை என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது. கோலி ரன் அவுட் ஆகியிருந்தால் மற்றவர்களால் இந்த அளவுக்கு அணியைக் கொண்டுவந்திருக்க முடியாது என்று நினைக்கும் நிலையிலேயே இன்றைய மட்டை வலு இருக்கிறது. மாறாக, மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தபோதும் பிறர் அசராமல் நின்று ஆடினார்கள்.

இரண்டாவதாக பந்து வீசும் போது மைதானத்தில் இருந்த ஈரப்பதமும் இந்தியா தோற்ற தற்கு ஒரு முக்கியமான காரணம். இந்தக் களத்தில் இரண்டா வதாகப் பந்து வீசுவது சுலபமல்ல. பந்தைக் கையில் இறுக்கமாகப் பிடிக்க முடியாது. நழுவிக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஆட்டமும் நழுவியது என்று சொல்லலாம். எனினும் தோனி தன் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலும் பிரச்சினை இருந்தது. இருப்பதிலேயே மோசமாக வீசிய ஜடேஜாவுக்கு 19-வது ஓவர் வீசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வின் இரண்டே இரண்டு ஓவர்கள்தான் வீசினார்.

கோலியின் முதல் ஓவரில் விக்கெட் விழுந்திருந்தாலும் பந்து வீச்சில் அனுபவமற்ற அவரைக் கடைசி ஓவர் வீசச் சொன்னது நல்ல யோசனை அல்ல. மிகச் சிறப்பாகப் பந்து வீசிய ஆஷிஷ் நெஹ்ராவைக் கடைசி ஓவருக்குப் பயன்படுத்தி யிருந்திருக்கலாம். நெஹ்ரா வீசிய 17-வது ஓவரை அல்லது ஜடேஜா வீசிய 19-வது ஓவரை அஸ்வின் வீசியிருக்கலாம்.

ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்த நெஹ்ராவைத் தவிர வழக்கமான பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்குப் பத்து ரன்களுக்கு மேல் கொடுத்த நிலையில் கேப்டனின் தேர்வுகள் சுருங்கிவிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அனைவரிலும் அதிகமாக ஓவருக்கு 12 ரன்களைக் கொடுத்திருந்த ஜடேஜாவுக்குப் பதில் அஸ்வினைப் பயன்படுத்தியிருக்கலாம். ஜடேஜாவின் பந்துகளை மட்டையாளர்கள் கஷ்டப்பட்டெல் லாம் அடிக்கவில்லை. அடிப்ப தற்குத் தோதான பந்துக ளையே அவர் வீசிக்கொண்டி ருந்தார். இந்நிலையில் அவர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்தது ஏன்?

கோலி கடைசி ஓவர் வீச வந்தபோது 1993-ல் தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் வீசிய கடைசி ஓவர் பலரது நினைவுகளிலும் நிழலாடியிருக்கும். அந்தப் போட்டியில் இந்தியா நம்ப முடியாத வகையில் வென்றது. கோலியும் அப்படிப்பட்ட வரலாற்றை நிகழ்த்துவார் என்ற எண்ணம் பலர் மனதிலும் தோன்றியிருக்கலாம். மட்டை வீச்சில் டெண்டுல்கரின் வழித்தோன்றலாகப் பிரகாசிக்கும் கோலி பந்து வீச்சிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. சச்சின் மட்டையாளர்தான் என்றாலும் அவர் வழக்கமாகப் பந்து வீசியும் வந்தார். ஆனால் கோலி அப்படி அல்ல. அனைத்துப் பந்து வீச்சாளர்களும் தடுமாறும்போது திடீர் திருப்பமாக கோலியை 14-வது ஓவர் வீச வைத்தது நல்ல உத்தி. அதற்குக் கை மேல் பலனும் கிடைத்தது. 4 ரன்களை மட்டுமே கொடுத்து சார்லஸின் விக்கெட்டை எடுத்தார். ஆனால் அவரையே கடைசி ஓவர் வீச வைத்தது தேவையற்ற சாகசமாகவே படுகிறது.

கெய்லை மட்டும் நம்பி இல்லை என்பதை இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் காட்டிவிட்டார்கள். கோலியை மட்டும் நம்பியில்லை என்பதை இந்திய மட்டையாளர்கள் எப்போது உணர்த்தப்போகிறார்கள்? ஜடேஜா போன்றவர்களுக்கு அளிக்கப்படும் அளவுக்கதிகமான வாய்ப்புகளுக்கு யார் விளக்க மளிக்கப்போகிறார்கள்? ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆட்டத்தையும் உத்திகளையும் தகவமைத்துக்கொள்ளும் திறனை இந்திய அணியினர் எப்போது வளர்த்துக்கொள்ளப் போகிறார்கள்?

No comments:

Post a Comment