Wednesday, January 13, 2010

சச்சின் 20 ஒரு தலைமுறையின் கனவு

கிரிக்கெட் வாழ்வில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரிடம் அப்படி என்ன சிறப்பு? அவர் ஏன் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுகிறார்? ஆட்ட நுணுக்கங்கள் அதிகம் தெரியாத சாமானிய மக்கள் மட்டுமல்ல, ஆழமான கிரிக்கெட் அறிவு கொண்ட பீட்டர் ரூபோக் போன்ற விமர்சகர்கள், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், ஸ்டீவ் வா, வாசிம் அக்ரம் போன்ற சம காலத்துத் திறமையாளர்கள் ஆகியோரும் அவரை ஆராதிக்கிறார்கள். டெண்டுல்கரைப் போல இன்னொருவர் பிறப்பது அரிது என்கிறார் உலகிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்திய முத்தையா முரளீதரன்.

அப்படி என்ன சிறப்பு அவரிடம்? அவர் அடித்த சதங்களா? குவித்த ரன்களா? பெற்றுத் தந்த வெற்றிகளா? வென்ற ஆட்ட நாயகன் விருதுகளா? இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவதா? எத்தனையோ விழுப்புண்களைத் தாண்டித் தன் உடல் திறனைப் பேணிவருவதா? காலத்துக்கும் காயங்களுக்கும் மதிப்புக் கொடுத்துத் தன் பேட்டிங் முறையில் நுட்பமான மாற்றங்களைச் செய்துவருவதா? இன்றைக்கும் பந்து வீச்சாளர்களின் பிரதான சவாலாக இருப்பதா? இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதா? கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கும் ஆராதனைக்கும் உரியவராக இருப்பதா? வீரேந்திர சேவக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்ற புதிய நட்சத்திரங்கள் மத்தியில் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பதா? ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற மூத்த வீரர்களும் மதிக்கும் அளவில் ஆடிவருவதா? இவ்வளவு திறமை இருந்தும் தன்னடக்கத்தின் வடிவமாகத் திகழுவதா?

இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம். சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 16 வயதில் வாயில் அடிபட்டுப் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டிய பிறகும் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களை உறுதியுடன் எதிர்கொண்டு இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியவர் சச்சின். அதற்குச் சில மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் சொற்ப ரன்னுக்கு மூன்று விக்கெட்கள் விழுந்த நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்தின் வலுவான பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடிச் சதம் அடித்து இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டவர்.

இன்னும் பல சம்பவங்களைச் சொல்லலாம். ஷார்ஜாவில் மணல் புயலுக்கு நடுவில் பிரகாசித்த சம்பவத்தை நினைவுகூரலாம். இந்தப் பையன் ஆடுவதைப் பார்க்கும்போது நானே ஆடுவதுபோல இருக்கிறது என்று கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேன் கூறியதைச் சுட்டிக்காட்டலாம். உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னைத் துவம்சம் செய்ததைக் காவியமாகப் பாடலாம்.

சிறந்த ஆட்டக்காரர்கள் எல்லோரது வாழ்விலும் இதுபோன்ற கதைகள் இருக்கும். சச்சினின் சிறப்பு என்னவென்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை நெடுகிலும் இத்தகைய கதைகள் நிரம்பியிருப்பதுதான். தன் ஆட்ட வாழ்வின் பெரும் பகுதியில் அவ்வளவு வலுவில்லாத ஒரு அணியின் உறுப்பினராக இருந்து ஆடும் நிலை சச்சினுக்கு வாய்த்ததுபோல வேறு யாருக்கும் வாய்த்ததில்லை. மார்க் வா, இன்சமாம் உல் ஹக், ரிக்கி பாண்டிங், ஆகியோர் சிறந்த பந்து வீச்சு என்னும் பக்க பலத்தோடு களம் இறங்கினார்கள். பிரயன் லாராவின் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரது அணியின் பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால் முதல் பத்து ஆண்டுகளில் வால்ஷ், அம்புரோஸ், போன்ற சிறந்த வீச்சாளர்கள் இருந்தார்கள். அந்த வாய்ப்பு சச்சினுக்குப் பெரும்பாலும் கிடைக்கவில்லை. அது அவர் சுமையை இன்னமும் கூட்டியது.

பந்து வீச்சில் மட்டுமின்றி, மட்டையிலும் இந்தியாவின் வலிமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 2000ஆவது ஆண்டுக்குப் பிறகுதான் லட்சுமணன், திராவிட், சேவாக் போன்றோர் அவரது சுமையைக் குறைத்தார்கள். அதுவரை இந்தியாவை சச்சின் என்னும் ஒரு நபர் கொண்ட படை என்று சற்றே மிகைப்படுத்திச் சொல்லிவிடலாம். “சச்சினை அவுட் ஆக்கிவிட்டால் மேட்சை வென்றுவிடலாம் என்பதே எங்கள் கணக்கு” என்று வாசிம் அக்ரம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இன்றும்கூட எல்லாப் பந்து வீச்சாளர்களும் பிரதானமாகக் குறிவைப்பது சச்சினின் விக்கெட்டுக்குத்தான்.

நெருக்கடி, எதிர்பார்ப்பு, திறமையான எதிரணி ஆகியவற்றுக்கு மத்தியில் ஆடிப் பழகிய சச்சினுக்கு சவால்கள் அதோடு முடிந்துவிடவில்லை. காலில், முதுகில், முழங்கையில், தோள் பட்டையில் என்று அடுக்கடுக்காய்க் காயங்கள். பெரும் பொறுப்பைச் சுமந்து போராடியதன் அடையாளங்களாகப் பல விழுப்புண்கள். வேறொருவராக இருந்திருந்தால் எப்போதோ காணாமல் போயிருக்கக்கூடிய நெருக்கடிகள் இவை. ஆனால் சச்சின் இவற்றையும் தாண்டிவந்தார். ஒவ்வொரு காயத்துக்குப் பிறகும் புதிய உத்வேகத்துடன் மீண்டு வந்தார். ஆட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்துகொண்டு தொடர்ந்து சீராக ஆடிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றிய விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. இன்னும் அவர் டெஸ்ட் போட்டிகளில் போதிய அளவு சதிக்கவில்லை. பாண்டிங், லாரா, இன்சமாம் அளவுக்கு அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித் தரவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில், குறிப்பாக, சேஸிங் செய்யும்போது, அவரது மட்டை அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை என்றெல்லாம் குற்றம் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன நெருக்கடிகளின் பின்னணியில் பார்க்கும்போது இந்தக் குறைகள் மங்கிவிடுகின்றன. தவிர, சச்சின் முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆட்டமே பல சமயங்களில் ஆட்டத்தின் முடிவை இந்தியாவுக்குச் சாதகமாகத் திருப்பியிருக்கிறது. மேலும் அவர் சிறப்பாக ஆடியும் பிறர் செய்த தவறுகளால் போட்டி கைவிட்டுப் போகும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, சச்சின் களத்தில் இருக்கும்வரை நெருக்கடி எதுவும் இருக்காது. அவர் அவுட் ஆன பிறகுதான் நெருக்கடி உருவாகும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியில் சச்சின் ஆடிவருகிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இவையெல்லாம் அற்புதமான அம்சங்கள்தான். ஆனால் டெண்டுல்கரின் பங்களிப்பு இவற்றைக் கடந்தது. எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் இந்தியக் கிரிக்கெட் அணியின் போராட்ட முகத்தின் அடையாளங்களாக முறையே கவாஸ்கர், கபில்தேவ் போன்றவர்கள் இருந்தார்கள். கபில்தேவின் வேகம் ஒரு புதிய கலாச்சாரத்தை இந்தியக் கிரிக்கெட்டில் தொடங்கிவைத்தது. இவர்களது பங்களிப்பு முக்கியமாந்துதான். ஆனால் உலகிற்குச் சவால் விடுமளவுக்கு இவர்களது திறமை விகசிக்கவில்லை. 1983 உலகக் கோப்பைப் போட்டியைத் தவிர வேறு எந்தச் சமயத்திலும் இந்திய அணியோ இந்திய ஆட்டக்காரரோ எந்த அணிக்கும் சிம்ம சொப்பனமாக இல்லை. அப்படிப்பட்ட நிலை வராதா என்று எணபதுகளின் இறுதியில் ரசிகர்கள் ஏங்கினார்கள்.

அப்போதுதான் சச்சின் என்னும் அதிசயப் பிறவி களத்தில் பிரவேசித்தது. கவாஸ்கரின் உறுதி, கபில்தேவின் போர்க்குணம் ஆகியவற்ரை ஒன்று திரட்டிய உருவமக அந்தப் பிரவேசம் நிகழ்ந்தது. உத்வேகத்துடனும் பன்முகத் திறமையுடனும் இந்திய அணியின் வேகத்தை வளர்த்தெடுத்து இந்திய அணியின் அடையாளமாகவே மாற்றியது இந்தப் பிரவேசம். இந்தியாவின் சராசரிக் குடிமக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாக சச்சினின் ஆட்டம் விளங்கியது. பெரிய பேட்ஸ்மேன்களே கவனமாக ஆடும் அப்துல் காதிரின் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்து விரட்டிய 16 வயதுப் பையன் ஒரு தலைமுறையின் கனவுக்கு உயிர் கொடுத்தான். பல மட்டையாளர்களும் சந்திக்க அஞ்சிய ஷேன் வார்னின் பந்துகளை அடித்துத் துவைத்தபோது தேசம் ஆனந்தக் கூத்தாடியது. நெடுங்காலமாக அவர்கள் காண விரும்பிய காட்சி அது. புயல் வேக ஷோயிப் அக்தர்களோ பிரட் லீகளோ அவரை அசைக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான ஆவேசத்துக்குத் தக்க பதிலடி கொடுத்ததும் மக்களின் விருப்பத்துக்கு வடிவம் கொடுத்த செயலாக அமைந்தது. போன மாதம் ஹைதராபாதில் அதிரடியாக எடுத்த 175 ரன்கள் மீண்டும் அந்தக் கனவைப் புதுப்பித்தன. சச்சின் மக்கள் நாயகனாக இருப்பதற்குக் காரணம், மக்கள் எதைப் பார்க்க ஏங்குகிறார்களோ அதை அவர் நிகழ்த்திக் காட்டுவதுதான்.

இந்த வயதிலும், இத்தனை காயங்களுக்குப் பிறகும் வேகப் பந்து வீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஆட அவரால் முடிகிறது. வேகப் பந்தை எதிர்த்து ஆடி லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முடிகிறது. பவுன்சர் பந்துகளை ஹூக் செய்யும் துணிச்சலும் அப்பர் கட் அடிக்கும் துல்லியமும் அவருக்கு இப்போதும் வசப்படுகின்றன. லெக் ஸ்பின்னரின் பந்துகளில் இன்சைட் அவுட் ஷாட்டை அவர் அளவுக்குக் கச்சிதமாக யாரும் ஆடுவதில்லை. அவருக்கு முன்னால் நான் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி சொல்லுமளவுக்கு சச்சினின் ஆட்டத் திறன் இப்போதும் மிளிர்கிறது. வாராது வந்த இந்த மாமணி இன்னும் எவ்வளவு நாள் பிரகாசிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சச்சின் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய வரலாற்றின் வரிகளாக அமையும். அவர் எடுக்கும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு அரை சதமும் இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்குப் போடப்படும் உரமாக அமையும். நவீன கிரிக்கெட் வரலாற்ற்றின் நாயகனான சச்சின் டெண்டுல்கர் வரலாற்றின் பக்கங்களை மேலும் மேலும் அலங்கரிக்கட்டும்.

*

மகாத்மா காந்தி ஏன் உப்பை எடுத்தார்?

உப்பு. அறுசுவைகளில் ஒன்று. உணவில் இன்றியமையாதது. என்றாலும் மிகக் குறைவாகச் சேர்க்கப்படுவது. இதை வைத்துக்கொண்டு ஒரு தேசத்தையே எழுச்சி பெறச் செய்ய முடியுமா? ஒரு சாம்ராஜ்யத்தையே அசைத்துப் பார்க்க முடியுமா?

நேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அந்த உப்புக்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய் விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்திய வரலாற்றில் அலாதியானதொரு நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.

1930 மார்ச் 12ஆம் தேதி மாதம் மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்தில் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கினார். மிகச் சிலர்தான் அவருடன் கிளம்பினார்கள். காந்தியடிகள் நடைப் பயணமாகத் தண்டி என்னும் இடத்தை நோக்கிச் சென்றார். அவரது பயணம் ஏப்ரல் 6 அன்று தண்டி கடற்கரையில் முடிந்தது. இந்த 25 நாள் பயணத்தின்போது வழி நெடுகிலும் மக்கள் அவரது பயணத்தில் இணைந்துகொண்டார்கள். ஆங்கிலேய அரசின் சட்டத்தை மீறி தண்டி கடற்கரையில் காந்தியடிகள் உப்பு எடுத்தது நாடெங்கிலும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பெரும் திரளாகச் சென்று கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தார்கள். ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். இத்தனை பேர் இந்த இயக்கத்தில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஆங்கிலேய அரசு எதிர்பார்க்கவில்லை.

உப்புச் சத்தியாக்கிரகம் நடந்ததற்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் வன்முறைப் பரிமாணங்களைக் கைக்கொண்ட பிறகு காந்தியே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு வேறு எந்தப் போராட்டமும் பெரும் அளவில் வெகுஜனப் போராட்டமாக உருப்பெறவில்லை. உப்புச் சத்தியாக்கிரகம்தான் அதைச் சாதித்தது. அதன் பிறகும் வேறு எந்தப் போராட்டமும் அந்த அளவு வெற்றி பெறவில்லை என்பதோடு, வெகுமக்கள் தன்மையையும் பெறவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு தன் உப்பு வரிச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. 1946இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசுதான் அந்தச் சட்டத்தை நீக்கியது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகத்தின் வெற்றி ஆங்கில அரசை உலுக்கியது. வரலாறு காணாத இந்த வெகுமக்கள் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் செய்தியாகப் பரவியது. இதற்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவைக் கண்டு அயர்ந்த ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்கு வருமாறு காந்தியை அழைத்தது. தண்டி யாத்திரை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக மாறியது.

***

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை சுதேசி உணர்வினின்றும் தனித்த ஒன்றாகக் காந்தியடிகள் பார்க்கவில்லை. அவரது போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அடக்கு முறை எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தை மறுத்துப் பன்முகத்தமையுடன் ஆழமான மாற்றங்களை விழைந்தது. அவரது போர் முறை, சுதேசி, தன்னிறைவு, சுய மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகவும் இலக்காகவும் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை மேற்கொண்டது. சுதேசி உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இயல்பாக ஒருங்கிணைத்த காந்தியடிகளுக்கு உப்பு வரியை எதிர்த்து உப்பின் மீதான உரிமையை நிலைநாட்டுவது என்பது மிகவும் பொருத்தமானதொரு போராட்டமாக அமைந்தது. உப்பு ஒரே சமயத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆயுதமாகவும் சுதேசி உணர்வின் வெளிப்பாடாகவும் மக்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டமாகவும் விளங்கியது காந்திக்கு மிகவும் வசதியாக அமைந்துவிட்டது.

ஆங்கில அரசு, திடீரென்று உப்புக்கு வரி விதித்துக் காந்தியின் போராட்டத்துக்கு வசதியான ஒரு ஆயுதத்தை வழங்கிவிடவில்லை. சொல்லப்போனால் காந்தியடிகள் அந்தப் போராட்டத்தைத் தொடங்கும்போது உப்பு வரிச் சட்டத்துக்குக் கிட்டத்தட்ட 100 வயது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி 1835இல் இந்தியாவில் தயாராகும் உப்புக்குச் சிறப்பு வரி விதித்தது. இது இங்கிலாந்தில் உற்பத்தியான உப்பை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் உப்பை இங்கே எடுத்து வந்து விற்ற கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அபரிமிதமான லாபம் கிடைத்தது.

சிப்பாய்க் கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சொல்லப்படும் ராணுவப் போராட்டம் 1857இல் நடந்தது. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட பிறகு 1858இல் இந்தியாவை ஆளும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசே ஏற்றுக்கொண்டது. அதன் பிறகும் உப்பு வரிச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் உப்புக்கு அதிக வரி கட்டிவந்தார்கள். பலர் அன்னிய உப்பை மலிவு விலைக்கு வாங்கிவந்தார்கள். எனவே திடீரென்று இந்தப் பிரச்சினை உருவாகிவிடவில்லை என்பது வெளிப்படை.

கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், சுதந்திரமாக வணிகம் செய்வதைத் தடுத்தல் என்று பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களும் பல முனைகளில் சுரண்டல்களும் நடைமுறையாக இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் உப்பைப் போராட்டக் கருவியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் காந்திக்கு எப்படித் தோன்றியது? அந்தக் கருவி வெற்றிகரமாகத் தன் இலக்கை அடையும் என்ற உறுதி அவருக்கு எப்படி ஏற்பட்டது?

போராட்டம் என்று வரும்போது நேரடியான ஆயுதப் போராட்டம் என்பது மிகவும் எளிமையானது. பலத்தைத் திரட்டு, பலத்தைப் பெருக்கு. எதிரியுடன் மோது. வெல் அல்லது வீர மரணம் அடை. இதுதான் நேரடி மோதலின் எளிமையான இலக்கணம். ஆனால் வன்முறை அல்லது உடல் சார்ந்த மோதல் தவிர்த்த போராட்டம் என்பது அத்தனை எளிமையானதல்ல. அகிம்சை என்பதை வெறும் போராட்ட வழிமுறையாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாகவே கண்ட காந்தியடிகள் வன்முறை தவிர்த்த போராட்டங்களின் மூலம்தான் இந்தியா விடுதலை பெற முடியும் என்று ஆழமாக நம்பினார். வன்முறை என்பது இரு புறமும் கூரான கத்தி என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. அது மனிதத் தன்மைக்கே எதிரான ஒரு அம்சம் என்பதிலும் அவருக்கு ஆழ்ந்த தெளிவு இருந்தது. அகிம்சை முறை என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் போராட்ட உத்தி அல்ல. மோதினால் ஆங்கிலேயனை வெல்ல முடியாது என்னும் கணிப்பிலிருந்து பிறந்த மாற்று வழியும் அல்ல. மாறாக, எதிரியையும் நேசிக்கும் ஆன்மீக அணுகுமுறை. விடுதலை என்பதை இரத்தக் கறை படியாத, வெறுப்பின் நிழல் அண்டாத மானுட விடுதலையாகக் காந்தி உருவகித்தார். எதிரியின் மனசாட்சியைத் தொடுவதாகவும் போராடுபவர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் தன் போராட்ட வழிமுறைகள் அமைய வேண்டும் என்று விரும்பியதுதான் காந்தியின் தனித்தன்மை. இப்படிப்பட்ட அணுகுமுறையுடன் ஒரு போராட்டக் கருவியைக் கண்டுபிடிப்பது எளிமையான செயலல்ல. ஆனால் அதில் அசாத்தியமான எளிமையைப் பின்பற்றியது காந்தியின் மேதைமை என்று சொல்லலாம்.

கத்தி, கம்பு, துப்பாக்கி, அடிதடி போன்ற வெளிப்படையான போராட்டக் கருவிகளை விலக்கிய காந்தி, மக்களின் உணர்வில் கலந்த பண்பாட்டுக் கூறுகளின் புற அடையாடங்களைப் போர்க் கருவிகளாக மாற்றினார். நாட்டில் நிலவிய நடைமுறைப் பிரச்சினைகளை இந்தக் கருவிகளின் துணையுடன் எதிர்கொண்டார். தவிர, விடுதலை என்பது அதன் சாரத்தில் சுய தன்மையைக் காப்பது, எல்லா விதங்களிலும் சுய சார்பை எய்துவது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இந்த அம்சங்களையெல்லாம் அவர் மிக இயல்பாகவும் மிகத் திறமையாகவும் ஒருங்கிணைத்தார். இதை மக்களிடையே கொண்டுசெல்லப் பல்வேறு குறியீடுகளை அவர் உருவாக்கி, தன் இடையறாத முயற்சிகளின் மூலம் மக்களிடையே அவற்றைப் பிரபலப்படுத்தினார். இந்த ஒருங்கிணைவிலும் குறியீடுகளின் தேர்விலும் இருந்த எளிமையும் கலாபூர்வமான அழகும் ஈடு இணையற்றவை.

ராட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அன்னியத் துணிப் புறக்கணிப்பு என்பது ஒரு அணுகுமுறை. உனக்கு வேண்டிய உடையை ஏன் நீயே நெய்துகொள்ளக் கூடாது என்பது இன்னொரு அணுகுமுறை. காந்தி முன்வைத்த இந்த அணுகுமுறை மக்களை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம் அது மிக எளிமையானதும் நேரடியானதுமான குறியீடாக இருந்தது என்பதுதான். இந்தக் குறியீட்டை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த அவரால் முடிந்தது. அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு. பிறரிடம் கையேந்தாத நிலை. நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்வது. அதாவது சுய வழிமுறைகள், சுய மரியாதை. இதன் சாரம் சுதந்திரம்.

உணவு, மருந்து என்று வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இந்த எளிய சூத்திரத்தைப் பொருத்திக் காட்ட ராட்டை என்ற குறியீடு காந்திக்கு உதவியது. ராட்டை என்பது மலிவாக ஆடைகளைத் தயாரித்துக்கொள்ளும் உத்தி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதே சமயம் தன்னிறைவின், விடுதலையின் குறியீடு. ஹரிஜன ஆலயப் பிரவேசம், விதவையர் மறுமணம், கிராமத் தன்னிறைவு ஆகியவையும் அப்படிப்பட்டவைதாம்.

இதே போன்றதொரு குறியீடுதான் உப்பு. முன்பே குறிப்பிட்டதுபோல், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உப்புக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது. உப்பு மட்டுமல்ல. கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இதர ஆங்கிலேய வர்த்தகர்களுக்கும் பலன் தரும் வண்ணம் இந்தியச் சட்டங்களில் பல அம்சங்கள் ஆங்கிலேயரால் புகுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கையில் எடுக்காமல் காந்தி உப்பைத் தன் போராட்டக் கருவியாக மாற்றினார். விடுதலைப் போரின் குறியீடுகளில் ஒன்றாக மாற்றினார். மிக வெற்றிகரமான குறியீடுகளில் ஒன்றாகக் காலம் அதை மாற்றிக் காட்டியது என்றால் அதற்குக் காரணம், காந்தியின் தேர்வில் இருந்த எளிமையும் மக்களின் ஆன்மாவோடு உறவாடும் தன்மையும்தான்.

வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்ற வேகத்தோடு ரத்தக் கொதிப்பு ஏறியிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலரை அகிம்சாவாதிகளாக மாற்றிய காந்திய ரசவாதம் இங்கும் வெற்றிகரமாக இயங்கியது. காரணம், உப்பு என்னும் குறீயீட்டின் எளிமையும் வலிமையும். உப்பு என்பது உணவின் இன்றியமையாத அம்சம். அறுசுவைகளில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுவை இது. எனவே இது உணவுக்கே அடையாளமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை. தின்ற சோற்றுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்னும் கருத்தைத் தின்ற உப்புக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதாக வெளிப்படுத்தும் இந்தியச் சமூகத்தை உப்பின் குறியீட்டுத் தன்மை கவர்ந்ததில் வியப்பில்லை. இந்தியாவின் பெஉம்பாலான மொழிகளில் உப்பு என்பது உணவு, நம்றியறிதல், விசுவாசம், சுரணை ஆகியவற்றின் குறீயீடாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது (இந்தியில் துரோகி என்பதை நமக்ஹராம் என்பார்கள்; நமக் என்றால் உப்பு என்று பொருள்).

உப்பைச் சுரணையின் குறியீடாகக் கண்டு பழகிய இந்திய மக்களுக்கு அதைத் தங்கள் சுய மரியாதையின் குறியீடாகப் பார்ப்பது மிக எளிதாக இருந்தது. எனவேதான் அந்நிய அரசுக்கு வரி கொடாமல் உப்பை எடுத்து இந்த நாட்டில் என் உரிமையை நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு முதியவர் சொன்னதும் நாங்களும் வருகிறோம் என்று லட்சக்கணக்கான மக்கள் கூடவே சென்றார்கள். நாங்களும் உப்புப் போட்டுத்தானே சாப்பிடுகிறோம், எங்களுக்கு மட்டும் சுரணை கிடையாதா என்பதே இந்த எழுச்சிக்கு ஆதாரமான உணர்வு நிலை. இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றிய உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் அந்தக் கிழவரின் மேதைமை.

மேதைமை என்பதுகூடச் சரியில்லை. இந்தியாவை, அதன் மரபை, பண்பாட்டின் ஆழத்தைப் புரிந்துகொளவதில் அவருக்கு இருந்த ஆழம் என்று சொல்வதே பொருத்தமானது. எந்த நரம்பை எப்படிச் சுண்டினால் எந்த ஸ்வரம் எப்படி எழும் என்பதைத் துல்லியமாக உணர்ந்த இசைக் கலைஞனின் தேர்ச்சியை ஒத்த திறம் இது. இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு மனிதருக்குத்தான் இது சாத்தியப்படும். காந்தியடிகளுக்கு இது சாத்தியப்பட்டதில் வியப்பு என்ன இருக்கிறது.

***

நீ விரும்பும் மாறுதலாக முதலில் நீ மாறு என்பது காந்தியடிகளின் மிகப் பிரபலமான கூற்றுக்களில் ஒன்று. சபர்மதி ஆசிரமத்தில் நடைப் பயணத்தைத் தொடங்கிய காந்திக்குத் துணையாக இருந்தது தன் போராட்டக் கருவியின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். மக்கள் உப்பை எடுக்கட்டும் என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று அவர் காத்திருக்கவில்லை. விளைவுகளைப் பார்த்துக்கொண்டு வியூகங்களை மெருகேற்றும் தந்திரங்களை அவர் கையாளவில்லை. வரி கொடாமல் உப்பை எடுப்பது சுய மரியாதையின் அடையாளம், விடுதலை உணர்வின் வெளிப்படு என்று நீ கருதுகிறாயா? முதலில் நீ அதைச் செய் என்று காந்தியின் அந்தராத்மா அவருக்குக் கட்டளையிட்டது. அவர் கிளம்பினார். தேசம் அவர் பின்னால் சென்றது. வரலாறு உருவாயிற்று.
***