Tuesday, April 12, 2016

நந்தவனத்தில் பல ஆண்டிகள்!


தேர்தல் குறித்த செய்திகளுக்கு நடுவே திடீரென்று காண நேர்ந்த அந்த ஒரு வரி, சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கூட்டணி பற்றி பாஜக - தமாகா இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அந்தச் செய்தி கூறியது. பல கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த தமாகா, கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் சங்கமமாகிவிட்டது. என்றாலும், பாஜகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது இந்தத் தேர்தலின் விசித்திரங்களில் ஒன்று. தமாகாவுக்கும் அதன் தாய்க் கட்சியான காங்கிரஸுக்கும் கொள்கை ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்நிலையில், தமாகாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் பேச்சுவார்த்தையை நாட்டில் எங்கும் இல்லாத அதிசயமாக, காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாகவே கருத வேண்டியிருக்கிறது.
 
கேலிக்கூத்துகளின் அரங்கம்

விசித்திரங்களுக்குக் குறைவில்லாத தேர்தல் இது. மநகூவில் சேரும் கட்சிகள் சேர்வதற்கு முன்பு மேற்கொண்ட பயணங்கள் தேர்தல் கூட்டணி என்பது பண்டிகைக் காலத் தள்ளுபடி வியாபாரமாகவே மாறிவிட்டதைக் காட்டுகின்றன. திமுகவின் பாத்திரத்தில் விழ வேண்டிய பழம் மநகூவின் கிண்ணத்தில் விழுந்ததையும், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுடனும் பேரம்பேசி அது படியாமல் மநகூவிற்கு தமாகா வந்து சேர்ந்ததையும் மட்டும் வைத்து இந்த முடிவுக்கு நாம் வர வேண்டியதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திமுகவைத் தோற்கடிப்பதையே தன் லட்சியமாக முழங்கிவரும் வைகோவின் மதிமுகவும் திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய நிலை எட்டு மாதங்களுக்கு முன்புவரை இருந்தது. ஆளுமை மோதல்களும் தந்திரமான ஓரங்கட்டல்களும் சேர்ந்துதான் இந்தக் கட்சிகளைக் கரை ஒதுக்கின என்பது பகிரங்க ரகசியம். பல சமயங்களில் அதிமுகவுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் அதிமுகவில் தங்களுக்கான இடம் கிடைக்காமல், திமுகவுடனும் சேர இயலாமல் தனிமரமாய் நின்றன.

மநகூவில் இருக்கும் கட்சிகளுக்குத் தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது அவற்றின் முதல் தேர்வு அல்ல. நிர்க்கதியானவர்கள் சேர்ந்து அமைத்த கூட்டு இது. மாற்றுச் சக்தி என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும்போது அது கேலிக்கூத்தாகத் தோற்றமளிப்பது இதனால்தான். இந்தக் கட்சிகள் திமுக, அதிமுகவின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘அப்படியானால் அவர்களோடு கூட்டணி சேர நீங்கள் ஏன் முயன்றீர்கள்?’ என்ற கேள்வி மக்கள் மனதில் எழும் அல்லவா? அந்தக் கேள்விக்கெல்லாம் பொருள் இல்லை என்னும் அளவுக்கு கேலிக்கூத்துகளின் அரங்கமாக மாறியிருக்கிறது இந்தத் தேர்தல் களம்.

கேலிக்கூத்துகள் ஒருபுறம் இருக்க, அரசியலில் பெரிய ஆளுமைகளாக வலம்வந்த பலர் சிறுத்துப்போய் நிற்கிறார்கள். பல ஆண்டுகளாக ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் கட்டுடைகின்றன. திராவிட இயக்கத்தின் போர்வாளாகப் புறப்பட்ட வைகோ, கூட்டணி பேரத்துக்காக லஞ்சம் வாங்கினீர்களா என்னும் நேரடியான கேள்வியை எதிர்கொள்ள அநாகரிக வார்த்தைகளையும் சாதி ஆணவப் பேச்சையும் நாடுகிறார். எந்தப் பதற்றமும் இல்லாமல் தெளிவாக அவர் முன்வைத்த மோசமான வசைகளுக்கு உலகமே கண்டனம் தெரிவித்த பிறகு, வாழ்நாளில் நான் செய்த பெரிய குற்றம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் புரட்சிப் புயல். உலகையே புரட்டிப்போடும் ஆவேசத்துடன் புறப்பட்ட புயலின் ஆவேசம் தேநீர்க் கோப்பைக்குள் சலனத்தை ஏற்படுத்திவிட்டு அடங்கிவிடுமோ என்று தோன்றுகிறது. விஜயகாந்தை முதல்வராக்குவதைத் தனது லட்சியமாக அறிவிக்கும் இந்த திராவிட மறுமலர்ச்சிச் சிங்கம், விஜயகாந்த் எந்த வகையில் மாற்றுச் சக்தியாக இருப்பார் என்பதைத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

வைகோவின் மன்னிப்பால் கருணாநிதியின் மனதில் பட்ட காயம் மறையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மீது இழிவான சொற்களைப் பயன்படுத்தும் காடுவெட்டி குரு போன்றவர்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருப்பவர்தான் இவர். வைகோவாவது மன்னிப்புக் கேட்டார். அதைக் கூடச் செய்ய இவரோ இவரது கட்சியினரோ தயாராக இல்லாத நிலையில், காடுவெட்டிகளின் பேச்சால் தலித் மக்களின் மனங்களில் சுட்ட வடுக்கள் எப்படி நீங்கும்?
 
சிதையும் பிம்பங்கள்

எல்லாக் கட்சிகளுமே உடலை விறைத்துக்கொண்டு வீராவேசமாகப் பேசினாலும் அவற்றின் கால்கள் நடுங்குவதை உணர முடிகிறது. இந்தத் தேர்தல் எல்லாத் தலைவர்களின் பிம்பங்களையும் கட்டுடைத்து, அவர்களை அம்பலப்படுத்திவருகிறது. கட்சிகள் தமக்கான குழிகளைத் தாமே வெட்டிக்கொள்கின்றன. பாடுபட்டுப் பெற்றுவந்த பொருளைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைக்கும் ஆண்டியை நினைவுறுத்தும் அபத்தத்தின் திருவுருக்களாக நிற்கிறார்கள் அரசியல்வாதிகள். புறக்கணிக்கப்பட்ட உதிரி அமைப்புகள் மாற்றுச் சக்தியாக வேடமிட்டு உலவுகின்றன. வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்பை திமுக இழந்ததற்கு அக்கட்சியே காரணம். அந்தக் கட்சியை உள்ளூர அரித்துவரும் குடும்ப ஆதிக்க அரசியலே ‘அந்நியர்’களை விரட்டியடித்திருக்கிறது. தமிழகத்தின் மகத்தான ராஜதந்திரி தனது அஸ்திரங்களை இழந்து களத்தில் பலவீனப்பட்டு நிற்கிறார். எட்டாக் கனிகளை எண்ணிக் குமைந்துகொண்டிருக்கிறார். யாருமே சீந்தாமல் புறக்கணித்துவிட்ட ஒரு தேசியக் கட்சி, கோட்டையில் தாமரை மலரும் என்று முழங்கி, சுய பரிகாசத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

ஒப்பீட்டளவில் உறுதியான தலைவராகத் தோற்றமளிக்கும் ஜெயலலிதாவின் பிம்பமும் கட்டுடைந் திருக்கிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டுக் கணக்கற்ற முறைகள் அதை மாற்றிக்கொண்டிருப்பது தலைமையின் தடுமாற்றமன்றி வேறென்ன? ஒவ்வொரு மாற்றமும் அதற்கு முந்தைய அறிவிப்பைப் பரிகசிக்கிறது. அப்படியானால், அந்த மாற்றங்களைச் செய்பவர், தன்னைத் தானே பரிகசிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். மதுவிலக்கு கோரி மாநிலமே கதறிக்கொண்டிருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவதும் தன்னைத் தானே பரிகசித்துக்கொள்ளும் செயல்தான்.
ஒவ்வொரு தேர்தலிலும் வலுவான கூட்டணி, தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய பிரச்சினை முதலானவை தேர்தலுக்கு முன்பே அடையாளம் காணப்படும். இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் தெரியவில்லை. சகல அம்சங்களிலும் அடைந்துவரும் ஏமாற்றங்களால் விளைந்த கோபங்களைத் தாண்டி விசுவாச வாக்காளர்கள் பழக்கம் சார்ந்த தெளிவை அடைந்துவிடுவார்கள். ஆனால், புதிய வாக்காளர்களான இளைஞர்களின் கோபம் அப்படியல்ல. எந்த அளவுக்குப் பிம்பங்களை ஆவேசமாகப் பின்பற்றுகிறார்களோ அதே அளவுக்கு விரைவாக அந்தப் பிம்பங்களை உடைத்தெறியும் உத்வேகமும் கொண்ட இளைஞர்கள் எடுக்கும் முடிவு, இந்தத் தேர்தலின் ஆகப் பெரிய வியப்பாக அமையக்கூடும். பழம் பெருமைகளின் பீற்றல்கள், காலாவதியான முழக்கங்கள், பொய்கள், பசப்பல்கள் ஆகியவற்றை நம்பாத தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் உலகத்தில் எந்தப் பிம்பமும் புனிதப் பிம்பம் அல்ல. எல்லாமே பரிகசிப்புக்குரியவை. அரசியல் தலைவர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பங்கள் உண்மையில் மாய பிம்பங்கள் என்பதை மெய்நிகர் உலகில் இவர்கள் நிரூபித்துவருகிறார்கள்.

நாள்தோறும் சிதைந்துவரும் பிம்பங்களே இந்தத் தேர்தலின் மகத்தான சாட்சி. தேர்தல் செய்திகளும் முழக்கங்களும் பிம்ப உருவாக்கங்களும் வழிபாடுகளும் நகைச்சுவை விருந்தாகவே பார்க்கப்படும் இந்தத் தேர்தலின் முடிவுகள் வருங்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். குழப்பத்தின் உச்சியில் தெளிவு பிறந்தே ஆக வேண்டும். ஆகப் பெரிய குழப்பமான 2016 சட்டமன்றத் தேர்தல் தெளிவுக்கான முன்னோட்டமாக விளங்கினால் இந்தக் குழப்பங்களையும் ஆளுமைச் சிதைவுகளையும் வரலாற்றின் வரப்பிரசாதமாக நாம் கருதிக்கொள்ளலாம். ஆண்டிகளின் பானைகள் உடையலாம். ஆனால், நந்தவனம் சீரழிந்துவிடக் கூடாது என்பதுதான் வாக்காளர்களின் ஆகப் பெரிய பொறுப்பு.

ஏன் இந்தப் பதற்றம் தோனி?


இந்தியா உலகக் கோப்பை அரை இறுதியில் தோற்று வெளியேறிய போது கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். தோனி கேள்வி கேட்டவரை மேடைக்கு அழைத்து உரையாடினார். நான் நன்றாக ஓடுகிறேனா, நான் நல்ல உடல் திறனுடன் இருக்கிறேனா என்றெல்லாம் தோனி கேட்க, அவரும் ஆஹா உங்களைப் போல வருமா என்று பதில் சொன்னார்.

அண்மையில் நான் எவ்வளவு ரன் எடுத்தேன், எத்தனை போட்டிகளை வெற்றி கரமாக முடித்துக்கொடுத்தேன் என்றெல் லாம் ஏன் நீங்கள் கேட்கவில்லை தோனி அவர்களே? பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலோ நெருக்கடியான கட்டத்தில் மட்டை வரிசையில் செய்த மாற்றங்களிலோ எந்தக் குறையாவது கண்டீர்களா என்று ஏன் கேட்கவில்லை? கடந்த ஓராண்டில் நீங்கள் எடுத்த மொத்த ரன்கள் எவ்வளவு? சராசரி எவ்வளவு? அணியின் வெற்றியில் உங்கள் மட்டையின் பங்களிப்பின் விகிதம் என்ன? இந்தக் கேள்விகளைக்கூட நீங்கள் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.

ஆனால் உலகம் கேட்கிறது. 2004-ல் நீண்ட முடியுடன் களம் புகுந்து கவலை யற்ற மனிதனாக நீங்கள் மட்டையைச் சுழற்றிய அழகைக் கண்டு வியந்த அதே உலகம்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கி றது. 2007-ல் டி 20 உலகக் கோப்பையை வென்றபோது உங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய அதே உலகம்தான் கேட்கிறது.

மூத்த வீரர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, அடுத்த நிலையில் இருந்தவர்களுக்குப் பொறுப்பளிக்க அணி நிர்வாகம் தயங்க, தலைமைப் பொறுப்பு உங்கள் தோள்களில் வந்து அமர்ந்தது. காற்றில் அழகாகப் பறக்கும் உங்கள் முடி காலப்போக்கில் குறையத் தொடங்கியது. ஆடுகளத்தில் உங்கள் மதிப்போ வளரத் தொடங்கியது.

உங்கள் ஆட்டத்தைவிடவும் உங்கள் முகத்தில் தவழும் புன்னகை, அலட்டிக்கொள்ளாத இயல்பு, நெருக்கடியில் பதறாத நிதானம், மூத்த வீரர்களைக் கையாளும் பக்குவம் ஆகியவை உங்களை நல்லதொரு தலைவனாக அடையாளம் காட்டின. விக்கெட் கீப்பிங்கில் குறை சொல்ல முடியாதபடி செயல்பட்ட நீங்கள், மட்டை வீச்சில் அலாதியான புகழை அடைந்தீர்கள். பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியே அடிப்பதையே இலக்காகக் கொண்டிருந்த உங்கள் ஆட்டம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. சந்தர்ப்பத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டீர்கள். அணியின் நிலையைப் பொறுத்து வெவ்வேறு நிலை களில் களம் இறங்கவும் வெவ்வேறு வேகங் களில் ரன் அடிக்கவுமான திறமையும் வளர்ந்தன. உங்களது இந்தத் திறமையின் உச்சத்தை 2011 உலகக் கோப்பையில் உலகமே பார்த்து வியந்தது.

அதன் பிறகு உங்களால் மட்டை வீச்சின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. உங்கள் மட்டை அவ்வப் போது பிரகாசித்தாலும் ஒப்பீட்டளவில் அது மவுனம் சாதிக்கிறது. குறிப்பாக, இந்திய மண்ணுக்கு வெளியே உங்கள் மட்டைக்கு அதிக வேலை இருப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அதற்கு முன்பு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளிலும் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு வங்க தேசத்திலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவிலும் நடந்த ஒருநாள் போட்டித் தொடர் களிலும் உங்கள் பழைய வேகத்தையோ போட்டியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தையோ பார்க்க முடியவில்லை.

இப்போதும் நீங்கள் ரன் எடுக்கும்போது நன்றாகத்தான் ஓடுகிறீர்கள். விக்கெட் கீப்பிங்கிலும் உங்கள் வேகம் குறைய வில்லை. ஆனால், ஆடுகளத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற இவை மட்டும் போதாது. இன்று ஒரு மட்டையாளராக உங்கள் நிலை என்ன? நீங்கள் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரைப் போல இடைநிலையில் ஆடி இன்னிங்ஸை வலுப்படுத்துவீர்களா? அல்லது மார்லன் சாமுவேல்ஸ், ஃபாக்னர் போலக் கீழ் இடைநிலை மட்டை வரிசையைப் பலப் படுத்துவீர்களா? எது உங்கள் இடம்? அதில் அண்மையில் நீங்கள் செய்த சாதனை என்ன?

ஆடுகளத்தில் வேகமாக ஓடுவது முக்கியம்தான். ஆனால் அதுவே ஒரு மட்டையாளரின் தனிப் பெரும் தகுதியாகி விடும் என்றால் உசைன் போல்ட்டை கிரிக்கெட் ஆடச் சொல்லலாமே? கிரிக்கெட் கண்ட சிறந்த மட்டையாளர்களில் ஒருவர் வி.வி.எஸ். லட்சுமணன். அவர் எந்தக் காலத்திலும் உங்களைப் போல ஓடும் திறமை பெற்றவராக இருந்ததே இல்லை. பாகிஸ்தானின் இன்ஸமாம் உல் ஹக்கும் அப்படியே. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆட ஓட்டம் மட்டும் போதாது தோனி.
நீங்கள் அணியின் தலைவராகவும் இருப்பதால் உங்கள் ஆட்டத்தை மட்டு மல்ல, அணியில் உள்ள பிறரது ஆட்டத் தையும் சிறப்பான முறையில் வெளிக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு உங்க ளுக்கு இருக்கிறது. தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் மட்டையாளரால் எப்படி மற்றவர்களுக்கு உத்வேகம் தர முடியும்?

உங்கள் தலைமையில் அண்மைக் காலத்தில் இந்தியா ஒரு நாள் போட்டி களில் பல தோல்விகளைச் சந்தித்துள் ளது. டி 20 போட்டிகளில் அண்மையில் இந்தியா பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக் கவைதான். ஆனால், அது உங்கள் தலை மையின் திறமையால் வந்தவைதானா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பிக்கொள் ளுங்கள். பந்து வீச்சாளர்களின் தேர்வு, அவர்களைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடைசி ஓவர்களைக் கையாள்வதில் உங்கள் திறன் வற்றிவரு வது கண்கூடு. குறிப்பாக, டி 20 அரையிறு தியில் கடைசி இரண்டு ஓவர்களை நீங்கள் பயன்படுத்திய விதம் இந்தியா தோற்பதற் கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஒரு மட்டையாளராக நீங்கள் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக் கிறீர்கள். உங்கள் தலைமை அஸ்திரங் கள் வலிமை இழந்துவருகின்றன. கிரிக் கெட்டின் ஆகப் பெரிய சோதனையான டெஸ்ட் அரங்கிலிருந்து ஏற்கெனவே நீங்கள் வெளியேறிவிட்டீர்கள். தற்போ தைய டெஸ்ட் கேப்டன் கோலியின் அணுகு முறை மாறுபட்டதாக இருக்கிறது. அப்படித் தான் இருக்க வேண்டும். தலைமை விஷயத் தில் கங்குலி, டிராவிட் பாணியிலிருந்து நீங்கள் மாற்றம் கொண்டுவந்தீர்கள். இன்று கோலியின் முறை. புதிய தலைமை, புதிய அணுகுமுறை என்று இந்திய கிரிக்கெட் எல்லா வடிவங்களிலும் அடுத்த கட்டத் துக்கு நகர வேண்டிய தருணம் வந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கிரிக்கெட்டுக்குச் சிறப்பான சேவை ஆற்றிவரும் நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு, பத்திரிகையாளர்களைக் குறுக்கு விசாரணை செய்வது உதவாது. உங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Friday, April 1, 2016

கையிலிருந்து நழுவியது கோப்பை


லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கினார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

அஜிங்க்ய ரஹானேக்கும் இந்தத் தொடரில் இதுதான் முதல் ஆட்டம். இதே மும்பை ஆடுகளத்தில் பலமுறை களம் கண்ட அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. 35 பந்துகளில் 40 ரன் எடுத்த அவர், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அணியின் ரன் விகிதத்தைக் கூட்ட வேண்டியதன் தேவையை உணர்ந்து ஆடியதாகத் தெரியவில்லை. இன்னொரு மும்பை ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 43 ரன் எடுத்து அணி பெரிய இலக்கை எட்டுவதற்கு ஓரளவு உதவினார். ஆனால் 8-வது ஓவரில் இவர் ஆட்டமிழக்க, பொறுப்பு மீண்டும் விராட் கோலியின் மீது விழுந்தது.

விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் சேர்ந்து 192 ரன்களை இந்தியா எட்டுவதற்கு உதவினார்கள். இது பெரிய ஸ்கோர்தான். ஆனால், மட்டை வீச்சுக்குச் சாதகமான மும்பை ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுவதே சாதகமானது. இரண்டாவதாகப் பந்து வீசும்போது பனிப்பொழிவால் ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதம் பந்து வீச்சாளர்களுக்குப் பந்தின் மீதான இறுக்கமான பிடியைப் பாதிக்கும். எனவே இரவு நேர ஆட்டத்தில் இந்தக் களத்தில் இரண்டாவதாகப் பந்து வீசுவது கடினம். ஆடுகளத்தின் தன்மையைத் துல்லியமாகக் கணித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி 192-ஐக் கண்டு அஞ்சவில்லை. இந்தியா தேவையை விடப் பத்து ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது என்று தன் அணியினரிடம் சொன்னார். அவர் சொன்னதை அவரது மட்டையாளர்கள் நிரூபித்தார்கள்.

பெரிய இலக்குகளைக் கேலிக்கூத்தாக மாற்றக்கூடிய வலிமையும் வல்லமையும் படைத்த கெய்ல் ஆட்டமிழந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்கள் அஞ்சவில்லை. ஒவ்வொருவரும் தனக்கான பொறுப்பை உணர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திய அணியினர் செய்த தவறுகளும் அவர்களுக்கு உதவின. ரவிச்சந்திரன் அஸ்வினும் ஹர்திக் பாண்டியாவும் வீசிய நோ பால்களால் தப்பிப் பிழைத்த சிம்மன்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தில் அவர் கொடுத்த கடினமான கேட்சை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார். இந்த பந்து பிடிக்கப்பட்டிருந்தாலும் ஆட்டம் திசைமாறியிருக்கலாம்.

நோ பால்களும் எல்லைக் கோட்டுக்கு அருகே நழுவவிடப் பட்ட கேட்சும் ஆட்டம் இந்தியாவை விட்டுக் கைநழுவிப் போன தற்கு முக்கியமான காரணங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியில் அதிக ரன் குவித்த கோலியும் இரண்டு முறை ரன் அவுட் ஆகாமல் தப்பிப் பிழைத்தார். இந்தியா இன்னும் பத்து ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 35 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே தன் ஆட்டத்தில் இன்னும் வேகம் காட்டியிருக்க வேண்டும். இந்தியா இந்தத் தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை எடுக்கவில்லை. முதல் முறையாக ரோஹித்தின் மட்டை உரக்கப் பேசியது. ஆனால், பெரிய ஷாட்களை அனாயாசமாக ஆடும் ரோஹித், சுழல் பந்தைக் கணிக்க முடியாமல் ஆட்டமிழந்தது அவரது ஆட்டத்தில் உள்ள போதாமையையே காட்டுகிறது. நன்கு பழக்கமான ஆடுகளத்தில் அவர் மேலும் அதிக நேரம் நின்று பெரிய இலக்கை எட்ட உதவியிருக்க வேண்டும்.

47 பந்துகளில் 89 ரன் அடித்த கோலி, ரன் விகிதத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்காவிட்டால் அணி யின் நிலை என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது. கோலி ரன் அவுட் ஆகியிருந்தால் மற்றவர்களால் இந்த அளவுக்கு அணியைக் கொண்டுவந்திருக்க முடியாது என்று நினைக்கும் நிலையிலேயே இன்றைய மட்டை வலு இருக்கிறது. மாறாக, மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தபோதும் பிறர் அசராமல் நின்று ஆடினார்கள்.

இரண்டாவதாக பந்து வீசும் போது மைதானத்தில் இருந்த ஈரப்பதமும் இந்தியா தோற்ற தற்கு ஒரு முக்கியமான காரணம். இந்தக் களத்தில் இரண்டா வதாகப் பந்து வீசுவது சுலபமல்ல. பந்தைக் கையில் இறுக்கமாகப் பிடிக்க முடியாது. நழுவிக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஆட்டமும் நழுவியது என்று சொல்லலாம். எனினும் தோனி தன் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலும் பிரச்சினை இருந்தது. இருப்பதிலேயே மோசமாக வீசிய ஜடேஜாவுக்கு 19-வது ஓவர் வீசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வின் இரண்டே இரண்டு ஓவர்கள்தான் வீசினார்.

கோலியின் முதல் ஓவரில் விக்கெட் விழுந்திருந்தாலும் பந்து வீச்சில் அனுபவமற்ற அவரைக் கடைசி ஓவர் வீசச் சொன்னது நல்ல யோசனை அல்ல. மிகச் சிறப்பாகப் பந்து வீசிய ஆஷிஷ் நெஹ்ராவைக் கடைசி ஓவருக்குப் பயன்படுத்தி யிருந்திருக்கலாம். நெஹ்ரா வீசிய 17-வது ஓவரை அல்லது ஜடேஜா வீசிய 19-வது ஓவரை அஸ்வின் வீசியிருக்கலாம்.

ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்த நெஹ்ராவைத் தவிர வழக்கமான பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்குப் பத்து ரன்களுக்கு மேல் கொடுத்த நிலையில் கேப்டனின் தேர்வுகள் சுருங்கிவிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அனைவரிலும் அதிகமாக ஓவருக்கு 12 ரன்களைக் கொடுத்திருந்த ஜடேஜாவுக்குப் பதில் அஸ்வினைப் பயன்படுத்தியிருக்கலாம். ஜடேஜாவின் பந்துகளை மட்டையாளர்கள் கஷ்டப்பட்டெல் லாம் அடிக்கவில்லை. அடிப்ப தற்குத் தோதான பந்துக ளையே அவர் வீசிக்கொண்டி ருந்தார். இந்நிலையில் அவர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்தது ஏன்?

கோலி கடைசி ஓவர் வீச வந்தபோது 1993-ல் தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் வீசிய கடைசி ஓவர் பலரது நினைவுகளிலும் நிழலாடியிருக்கும். அந்தப் போட்டியில் இந்தியா நம்ப முடியாத வகையில் வென்றது. கோலியும் அப்படிப்பட்ட வரலாற்றை நிகழ்த்துவார் என்ற எண்ணம் பலர் மனதிலும் தோன்றியிருக்கலாம். மட்டை வீச்சில் டெண்டுல்கரின் வழித்தோன்றலாகப் பிரகாசிக்கும் கோலி பந்து வீச்சிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. சச்சின் மட்டையாளர்தான் என்றாலும் அவர் வழக்கமாகப் பந்து வீசியும் வந்தார். ஆனால் கோலி அப்படி அல்ல. அனைத்துப் பந்து வீச்சாளர்களும் தடுமாறும்போது திடீர் திருப்பமாக கோலியை 14-வது ஓவர் வீச வைத்தது நல்ல உத்தி. அதற்குக் கை மேல் பலனும் கிடைத்தது. 4 ரன்களை மட்டுமே கொடுத்து சார்லஸின் விக்கெட்டை எடுத்தார். ஆனால் அவரையே கடைசி ஓவர் வீச வைத்தது தேவையற்ற சாகசமாகவே படுகிறது.

கெய்லை மட்டும் நம்பி இல்லை என்பதை இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் காட்டிவிட்டார்கள். கோலியை மட்டும் நம்பியில்லை என்பதை இந்திய மட்டையாளர்கள் எப்போது உணர்த்தப்போகிறார்கள்? ஜடேஜா போன்றவர்களுக்கு அளிக்கப்படும் அளவுக்கதிகமான வாய்ப்புகளுக்கு யார் விளக்க மளிக்கப்போகிறார்கள்? ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆட்டத்தையும் உத்திகளையும் தகவமைத்துக்கொள்ளும் திறனை இந்திய அணியினர் எப்போது வளர்த்துக்கொள்ளப் போகிறார்கள்?