Saturday, June 11, 2011

தமிழ்த் திரையில் வித்தியாசமான சலனங்கள்

தமிழ்த் திரையுலகில் அகிரோ குரோசவாக்களோ சத்யஜித் ராய்களோ அடூர் கோபாலகிருஷ்ணன்களோ என்றுமே இருந்ததில்லை. அத்தகைய கலைஞர் ஒருவர் இங்கே தோன்றினாலும் அவர் செயல்படுவதற்கான களம் இங்கு இல்லை. அந்த அளவு வணிக விதிகளால் கட்டமைக்கப்பட்ட திரையுலகம் இது. விதிவிலக்காகச் சில முயற்சிகள் (உதாரணம்: ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்) ஒரு காலத்தில் வந்ததுண்டு. ஆனால் இன்று அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள விரும்பும் ஒரு கலைஞர் குறைந்தது ஒரு கோடி ரூபாயை இழக்கத் தயாராக இருந்தால்தான் அவரால் அந்த முயற்சியில் இறங்க முடியும். அல்லது அவருக்குப் பதில் புரவலர் யாரேனும் அந்தக் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டும். அந்தப் படம் தற்செயலாக வெற்றியடைவதுகூடச் சாத்தியம்தான். ஆனால் அந்த முயற்சியில் இறங்கும் துணிச்சல்தான் இங்குச் சாத்தியமாகாமலேயே இருக்கிறது. திரை விமர்சகர்கள் தமிழ் என்று வரும்போது மட்டும் தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவதற்குக் காரணம் இந்தச் சூழல்தான். கலைப் பெறுமானம் கொண்ட படங்கள் வந்தால்தான் அதைப் பற்றி எழுதுவேன் என்று ஒருவர் முடிவு செய்தால் அவரால் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் படங்களைப் பற்றி எழுத முடியாமலேயே போகலாம். இந்நிலையில் தமிழின் வணிக விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்படும் சில வித்தியாசமான முயற்சிகள் (அல்லது அப்படியான பாவனைகள்) பற்றித்தான் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கியம் பற்றி எழுதும்போது கறாரான அளவுகோல்களைப் பிரயோக்கிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் விஷயத்தில் அது இல்லை.

வெகுஜன வணிக சூத்திரத்துக்குள் செயல்படும் படமாக இருந்தாலும் திரைப்படம் என்பது அடிப்படையில் இயக்குநரின் ஊடகம் என்ற பிரக்ஞையுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்த மிகச் சில இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன். பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான இவர் தன் முதல் படமான ‘பொல்லாதவ’னை பாவனைகள் அற்ற நேர்த்தியான வணிகப் படமாக உருவாக்கியிருந்தார். நேர்த்தியான வணிகப் படங்களே அருகிவிட்ட சூழலில் இவரது முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வட சென்னையில் நிலவும் ரவுடிகளின் வலைப்பின்னல், மோட்டார் சைக்கிள் திருட்டின் சிக்கலான வரைபடம் ஆகியவற்றின் பின்னணியில் அசலான சில பாத்திரங்களைப் படைத்து அவர்களது இணக்கங்களையும் முரண்பாடுகளையும் வைத்து நேர்த்தியான திரைகதையை அமைத்திருந்தார் வெற்றி மாறன். அந்தப் படத்தின் வெற்றி தந்த தெம்பு புதிய களத்தினுள் பிரவேசிக்கும் துணிச்சலை அவருக்குத் தந்திருக்கிறது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தென் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் ஓர் அம்சத்தை மையமாக வைத்துத் தன் இரண்டாம் படத்தை எடுத்துள்ளார்.

மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் குழுக்களின் பின்னணியில் அமைந்த படம் ஆடுகளம். சேவல்களைச் சண்டைக்குப் பழக்குவதன் வழிமுறைகளையும் அதில் ஊடாடும் மனித இயல்புகளையும் விரிவாகவும் நுட்பமாகவும் சொல்கிறது படம். எந்தச் சண்டையையும்போலவே இந்தச் சண்டையும் எப்படி மனிதர்களின் சுய படிமம் சார்ந்த அதிகாரப் போட்டியாக உருவெடுக்கிறது என்பதும் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகிறது. பேட்டைக்காரன் என்று அழைகப்படும் ஒரு பெரியவரின் குழு சேவல் சண்டையில் எப்போதும் வெல்வதையும் காவல்துறை அதிகாரி ரத்னத்தின் குழு தொடர்ந்து தோற்பதையும் வைத்து பெரும் மோதலுக்கான களத்தை அமைக்கிறார் வெற்றி மாறன். ரத்னத்தின் அம்மா படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ஆனாலும் அவருக்குத் தான் கண்ணை மூடுவதற்குள் ஒரு முறையாவது தன் குடும்பம் சேவல் சண்டையில் வென்றுவிட வேண்டும் என்ற ஆதங்கம். கை நழுவிப்போகும் அந்த வெற்றியைக் குடும்பத்தின் மானத்தோடும் குடும்பத் தலைவன் ரத்தினத்தின் ஆண்மையோடும் இணைத்து அந்த அம்மா பேசுவது ரத்தினத்தின் மிருக வெறியைத் தூண்டிவிடுகிறது. ஆட்டத்தின் விதிமுறைகளை மீறியேனும் இந்த முறை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு களம் இறங்குகிறார் ரத்னம்.

விதிமுறைகளுக்குட்பட்ட ஆட்டத்துக்குப் பழக்கப்பட்ட பேட்டைக்காரருக்கு இது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அவரது குழுவில் இருக்கும் கறுப்பு தன் சேவல் சண்டையில் வெல்லும் என்று கூறி அவரைத் தேற்ற முயல்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் சேவல், சண்டைக்கு உதவாது என்று சொல்லிப் பேட்டைக்காரரால் நிராகரிக்கப்பட்ட சேவல். சண்டைக்குப் பயனற்ற சேவலை அறுத்துவிடுவது அந்தக் குழுவின் மரபு. ஆனால் பேட்டைக்காரரின் கட்டளையைச் சேவல் மீதுள்ள கறுப்புவின் பாசம் வெல்கிறது. அந்தச் சேவலைக் களம் இறக்க முனைகிறான். பேட்டைக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பேச்சை மீறிக் கறுப்பு செயல்படுகிறான். போட்டியில் வென்று தன் குருவின் மானத்தைக் காப்பாற்றுகிறான். கிடைக்கும் பரிசுப் பணத்தைக் கொண்டுவந்து அவர் காலடியில் சமர்ப்பிக்கிறான். ஆனால் தன் பேச்சை மீறிய சிஷ்யனை மன்னிக்க அவர் தயாராக இல்லை.

இந்த முரண்பாடு வளர்ந்து, தன் முனைப்பு, ஆங்காரம், பொறாமை, துரோகம் எனப் பல்வேறு பரிமாணங்களை எடுக்கும் விபரீதமே மீதிக் கதை. தான் என்னும் உணர்வு சார்ந்த கற்பிதங்கள் சீண்டப்பட்ட ஒரு மனிதனின் இயல்பு எதிர்பாராத மாற்றங்களுக்குள்ளாகும் இயற்கையை வெற்றி மாறன் சித்தரிக்கிறார். விசுவாசத்துக்கும் மன்னிப்பை ஏற்கத் தயாராக இல்லாத அவமான உணர்வுக்கும் இடையிலுள்ள முரண்கள் புதிய முரண்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியபடி செல்வதில் மனித இயல்பின் விபரீதங்கள் அம்பலப்படுகின்றன. நட்பு, அன்பு, பாசம் ஆகிய ஓடுகள் கழன்று தெறிக்கின்றன. தன் முனைப்பின் ஆங்காரமும் பிழைத்திருத்தலுக்கான வேட்கையும் வேட்டையின் ஆவேசமாக மாறி மனித உறவுகளைப் பரிகசிக்கின்றன. சேவலை வளர்த்து அவற்றுக்கு ரத்த வெறி ஊட்டும் மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் விலங்குத் தன்மைகள் வெளிப்படுகின்றன. அன்பைப் போலவே வெறுப்பும் யார் மீதும் செலுத்தப்படக்கூடியதுதான் என்ற உண்மை தன் முகதைக் காட்டும்போதே அதற்கு விதிவிலக்கான தூய அன்பின் கீற்றும் வெளிப்படுவதைக் காட்டி ஆடுகளத்தின் கோர ஆட்டத்தை முடிக்கிறார் இயக்குநர்.

சேவல் சண்டையின் விவரணைகளையும் மனித உறவுகளின் ஊடு பாவுகளையும் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறார் வெற்றி மாறன். சேவல்களைத் தயார்ப்படுத்தும் விதம் இதுவரை தமிழ்த் திரையில் காட்டப்படாதது. சேவல்களைச் சண்டைக்காகவே வளர்க்கும் மனிதர்கள் அந்தச் சேவல்களுடன் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாகக் கொள்ளும் உறவைக் காட்சிப்படுத்தும் விதம் சேவல் என்பதை மனிதர்களின் சுயம் சார்ந்த புறப் படிமமாக உணரவைக்கிறது. கதைப் போக்கில் நாடகீயத் தன்மை இருந்தாலும் செயற்கையான திருப்பங்கள் அதிகம் இல்லை.

சேவல் சண்டை என்று வரும்போது அந்தச் சண்டையின் தன்மைகளை ஆவணப்படுத்துவதற்கான மெனக்கெடலைப் பாராட்டலாம். ஆனால் களத்தில் நடக்கும் சேவல் சண்டையின் சித்தரிப்பை வணிகப் படத்துக்கான நாடகமாகவே பார்க்க முடிகிறது. எதிரணியினர் எத்தனையோ தகிடுதத்தங்களைச் செய்தும், தர்க்கப்படி வெல்ல முடியாத கதாநாயகனின் சேவல் திரும்பத் திரும்ப வெல்வது தமிழ்த் திரையின் மிகை நாயக பிம்பத்தின் அஃறிணைப் படிமமாகவே தெரிகிறது. படத்தின் ஆகப் பலவீனமான பகுதியான காதல் அத்தியாயமும் வெகுஜன சூத்திரத்துக்குட்பட்ட செயற்கை நாடகம்தான்.

வணிகப் படம் என்னும் வரையரையை மனத்தில் கொண்டு இத்தகைய சமரசங்களை மன்னிக்கலாம். தமிழ்ல் காமிரா இல்லாமல்கூடப் படம் எடுக்கலாம். காதல் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பதால் படத்தோடு அதிகம் ஒட்டாத காதல் நாடகத்தையும் பொறுத்துக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், படத்தை ‘வித்தியாசமான’ படமாகக் காட்ட இயக்குநர் மேற்கொள்ளும் முயற்சிகள். உதாரணமாக, ஐரினைக் கூட்டிக்கொண்டு கறுப்பு இரவில் ஊர் சுற்றும் காட்சிகள். வேல் ராஜின் ஒளிப்பதிவில் ஒரு கவிதைபோலத் திரையில் விரியும் அந்தக் காட்சி தன்னளவில் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த பின்புலத்தில் நம்பகத்தன்மையோ தேவையோ இல்லாமல் துருத்திக்கொண்டிருக்கிறது. படம் முடிந்த பிறகு திரையில் ஓடும் நீண்ட பட்டியலில் ஃபில்மோகிராஃபி என்னும் தலைப்பில் இயக்குநர் பல படங்களைக் குறிப்பிடுகிறார். அந்தப் படங்களிலிருந்து உத்வேகம் பெற்ற காட்சிப் படிமங்களுக்கான நன்றியறிதல் என்னும் வகையில் இயக்குநரின் நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் காட்சிப் படிமங்களைக் கதைக் களம், கதை மாந்தரின் போக்கு சார்ந்த உத்வேகத்திலிருந்து பெறுவதுதானே பொருத்தமானதாக இருக்க முடியும் என்னும் கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. வெகுஜன தளத்தில் நேர்த்தியான வணிகப் படங்களை எடுப்பதில் பாசாங்கற்று வெளிப்பட்ட ஒரு இயக்குநருக்கு இது தேவையா என்ற கேள்வியும் இதை ஒட்டி எழுகிறது.

பேட்டைக்காரர், அவரது குழுவினர், கறுப்புவின் அம்மா, பேட்டைக்காரரின் மனைவி முதலான பாத்திரங்களைக் கவனமாக வடிவமைத்திருக்கிறார் வெற்றி மாறன். கறுப்புவின் அம்மா சாகும் தருணம், பெரியவரின் மன மாற்றம் ஆகியவையும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. பெரியவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது என்பதால் கொலைப் பழியைச் சுமந்துகொண்டு கறுப்பு கிளம்பிச் செல்லும் இடம் கனமாக உள்ளது. கறுப்புவும் அவன் அம்மாவும் பேசும் இடங்களில் அவர்களது ஆளுமைகள் சார்ந்த வித்தியாசங்கள் வசனங்களிலும் பாவனைகளிலும் கச்சிதமாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. துரைக்கும் (கிஷோர்) கறுப்புவுக்கும் இடையில் உள்ள நட்பு இயல்பாகச் சித்தரிக்கப்படுள்ளது. அவர்களுக்கிடையே வரும் சண்டை அவ்வளவு இயல்பாக இல்லை. அதுபோலவே இரண்டாம் பாதியில் கதையின் மீதான இயக்குநரின் பிடி நழுவிப் போவதாகவே தோன்றுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாமே எதிர்பார்க்கக்கூடிய தடத்தில் பயணிப்பது ஆயாசமூட்டுகிறது.
வசனங்களில் கூர்மையும் கச்சிதமும் உள்ளது. பல விஷயங்களை வசனத்தின் துணையின்றிச் சொல்வதும் வெற்றி மாறனுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. உதாரணமாகக் காவல் நிலையக் காட்சி. தனக்கு உதவிய ரத்னத்தின் தந்திரத்தைத் துரை புரிந்துகொள்ளும் இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். முன் பகுதியில் சேவல்களின் சீற்ரத்தைக் காட்டும் இயக்குநர், பின் பகுதியில் சேவல்கலை வளர்க்கும் மனிதர்களின் உக்கிரங்களிலும் பாய்ச்சல்களிலும் சேவல்களின் தன்மைகளைப் பிரதிபலிக்க வைத்திருப்பது நுட்பமான உத்தி. உச்சக் காட்சியில் குருவின் துரோகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இடத்தில் தனுஷின் பேச்சும் ஜெயபாலனின் அமைதியும் வலுவாக அமைந்துள்ளன.
இசையும் (ஜி.வி. பிரகாஷ் குமார்) ஒளிப்பதிவும் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. பாடல்களில் மட்டுமின்றிப் பின்னணி இசையிலும் பிரகாஷ் குமார் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்சிகளின் காலப் பின்னணியைக் கச்சிதமாகப் புலப்படுத்தியுள்ளார். இரவுக் காட்சிகளும் மதுரையின் சந்து பொந்துகளைக் காட்சிப்படுத்தியுள்ள விதமும் அருமை.

பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் வியக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்துகிறார். பல களம் கண்ட அனுபவஸ்தரின் அனாயாசம், தன் வித்தையிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட கம்பீரம், கர்வ பங்கமுற்ற பின் ஏற்படும் பொறாமை, அவமானம், சந்தேகம், வன்மம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் அவரது முகத்தில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

தனுஷ் மிகவும் உழைத்திருக்கிறார். சென்னைத் தமிழுக்குப் பழகிய நாக்கை மதுரை வழக்குக்கேற்ப மாற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார். குருவிடம் காட்டும் கண்மூடித்தனமான விசுவாசம், அப்பாவித்தனம், தேவதை போன்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் அழகில் கரைந்து உருகும் விதம், சண்டைக் களத்தில் வெளிப்படும் எகத்தாளம், சண்டையில் ஆக்ரோஷம் என்று பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சேவலைத் தூக்கிக்கொண்டு போகும்போது தனுஷின் உடல் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சேவல் வெல்லும்போதும் அது அடிவாங்கும்போதும் அதை அவரது முக பாவங்களும் உடல் மொழியும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. அம்மாவின் மரனம், குருவின் துரோகம் ஆகிய தருனங்களில் உணர்ச்சி நடிப்பு வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. பாடல்களுக்கு அவர் ஆடும் ஆட்டம் பார்வையாலர்களைப் பெரிதும் கவர்கிறது. நடனத் திறனுக்குப் பெயர் போன நாயகர்களின் நடனங்களுக்கு இல்லாத அளவில் இவரது நடனங்களுக்குத் திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதற்குக் காரணம், இவரது நடனம் திறமையின் பிரகடனமாக அல்லாமல் காட்சிக்கேற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதுதான் என்று தோன்றுகிறது.
தப்ஸியின் தோற்றத்தையே இயக்குநர் பெரிதும் நம்பியிருப்பது அவரது பாத்திரப் படைப்பிலிருந்து தெரிகிறது. தப்ஸியும் தன் பொலிவான தோற்றத்தால் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிரார். அதற்கு மேல் அவருக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

பார்வையாளர்களின் மூளையையும் சொரணையையும் இழிவுபடுத்தாமலேயே பொழுதுபோக்கைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் இயக்குநர்களின் வரிசையில் தன் அடையாளத்தை வெற்றி மாறன் அழுத்தமாகப் பதித்திருக்கிறார். கதைக் களத்துக்கும் கதை சார் வாழ்நிலைக்கும் நேர்மையாகச் செயல்பட்டிருக்கிறார். பின்னாளில் சமரசங்கள் அதிகமற்ற தீவிரமான படத்தை உருவாக்க இவரால் இயலும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

*

எழுத்து - இயக்கம்: வெற்றி மாறன்
நடிப்பு: தனுஷ், வ.ஐ.ச. ஜெயபாலன், கிஷோர், தப்ஸி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்

*

புத்துயிர் பெறும் ஒருநாள் போட்டிகள்

எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த அந்தப் பையன் கோட்டைத் தாண்டி வந்த பந்துகளை ஆர்வமாகப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தான். அதை விட ஆர்வமாகப் போட்டியைக் கவனித்துக்கொண்டிருந்தான். 1983இல் தனக்குப் பத்து வயதாக இருக்கும்போது இந்திய அணி உலகக் கோப்பையை வாங்குவதை ஆவலுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்போதும் அதுபோல நடக்கும் என்ற நம்பிக்கை. அவன் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியுடன் அரை இறுதிப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. 83இலும் இதே அணிகள் அரை இறுதியில் மோதின. இந்திய அணியின் முகம்மது அசாருத்தீன் (65), கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (31), கபில்தேவ் (30) ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினர். இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த அந்தப் பையன் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினான்.

இருபத்து மூன்றரை ஆண்டுகள் கழித்து அந்தப் பையன் அதே மைதானத்தில் கோப்பையை ஏந்தியபடி நின்றான். அணியினர் அவனைத் தோளில் தூக்கிச் சுமந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வழிய, “என் வாழ்க்கையின் பெருமை மிகுந்த தருணம் இது” என்றான்.

87இல் தன் கண் முன்னால் நிகழ்ந்த அந்தத் தோல்வியைக் கண்டு வேதனைப்பட்ட அந்தப் பையன் - சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டான். அதிலிருந்து இந்தியாவின் கிரிக்கெட் கனவுகளின் அடையாளமாகத் திகழ்கிறான். குறிப்பாக உலகக் கோப்பைப் போட்டிகளில். 1992முதல் தற்போதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் ஆடியிருக்கிறார். 2007ஆம் ஆண்டு தவிர ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பைப் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். இருமுறை தொடர் நாயகன் விருதும் வாங்கியிருக்கிறார். இந்த முறையும் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த திலகரத்னே தில்ஷனைவிட (இலங்கை அணி) 18 ஓட்டங்கள் மட்டுமே குறைவாக எடுத்திருக்கிறார் (482). கடந்த 22 ஆண்டுகளில் இந்தியக் கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்கள் அனைத்தும் சச்சினோடு பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கின்றன. இந்தக் கோப்பை சச்சினுக்காக என்று அணியின் இளம் வீரர்கள் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு உத்வேகம் அளித்துவரும் நாயகனைச் சுமந்தபடி அணியினர் வெற்றிக் கூத்தாடினார்கள். “20 ஆண்டுகளாக நாட்டின் எதிர்பார்ப்பு என்ற சுமையை அவர் சுமந்துவருகிறார். இப்போது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய நேரம் இது” என்று விராட் கோஹ்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறினார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியிடம் வந்து சேர்ந்திருக்கும் அந்தக் கோப்பை சச்சின் டெண்டுல்கரின் கனவு மட்டுமல்ல. இந்திய தேசத்தின் கனவு. 83இலிருந்து ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியின்போதும் இந்த முறை கோப்பை இந்தியாவுக்குத்தான் என்ற கனவு புதுப்பிக்கப்படும். தேசம் பரபரப்புக் கொள்ளும். அதற்கேற்ப இந்திய அணி 87, 96, 2003 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை வந்தது. 2003இல் இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் கோப்பை வசப்படவில்லை. ஏப்ரல் 2ஆம் தேதியன்று வரலாறு திரும்பியது. கோப்பை இந்திய அணியின் கைக்கு வந்தது.

**

இந்தியா உலகின் சிறந்த அணி என்று சொல்லத்தக்க நிலையில் என்றைக்குமே இருந்ததில்லை. கறாராகப் பார்த்தால் இப்போதும் இல்லை. ஆனால் உலகின் சிறந்த அணிகளை வலுவாக எதிர்த்து நிற்கக்கூடிய அணி என்று சொல்லலாம். பந்து வீச்சிலும் தடுப்பு அரண் செயல்பாட்டிலும் இந்தியாவுக்கு இருக்கும் பலவீனங்கள் அந்த அனியைத் தலை சிறந்த அணி என்று சொல்ல விடாமல் தடுக்கின்றன. ஆனால் மட்டையின் வலுவால் இந்த பலவீனங்களைத் தாண்டிவரும் திறனும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்தத் திறமைதான் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் முதல் இடத்தில் நிறுத்தியிருக்கிறது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இது கண்கூடாகத் தெரிந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 370 ஓட்டங்களை எடுத்தது. ஆனால் பங்களாதேஷ் போன்ற ஒப்பீட்டளவில் பலவீனமான அணியை 284 ஓட்டங்கள் எடுக்க அதன் பலவீனமான பந்து வீச்சு அனுமதித்தது. இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் 338 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் தடுப்பு அரணில் விழுந்த ஓட்டைகளாலும் பந்து வீச்சின் போதாமைகளாலும் இங்கிலாந்து 338 ஓட்டங்களைத் தொட்டது. யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றிப் போட்டி முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 296 ஓட்டங்களைக் குவித்தது. மீண்டும் பந்து வீச்சு கைவிட்டது. இந்தியா தோற்றது. ஆக, இந்தியாவின் ஆதாரமான பிரச்சினைகள் - மோசமான தடுப்பு, பலவீனமான பந்து வீச்சு - இன்னமும் தீரவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

இப்படிச் சில தடுமாற்றங்களைத் தாண்டிக் கால் இறுதிக்கு வந்த இந்தியா வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவின் பந்து வீச்சு பலவீனமானதுதான். ஆனால் ஜாகீர் கானும் ஹர்பஜன் சிங்கும் நல்ல வீச்சாளர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் துணையாகப் பந்து வீச யாரும் இல்லாமல் இருந்தது. முதல் சுற்றுப் போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் என்னும் சுழல் பந்து வீச்சாளர், சிங்குக்குத் தேவையான துணையை வழங்கினார். பகுதி நேர வீச்சாளரான யுவராஜ் சிங்கும் நல்ல முறையில் வீசினார். தடுப்பு ஆட்டத்திலும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி ஆகியோர் புதிய வரையறைகளை உருவாகினர். இந்தியாவின் பலவீனங்கள் மறைய ஆரம்பித்தன. அதன் தன்னம்பிக்கை கூட ஆரம்பித்தது. வலுவான மட்டையாளர்களைக் கொண்ட ஆஸி அணியை 260 ஓட்டங்களுக்குள் முடக்கியது. பிறகு அந்த ஓட்டங்களைப் பதற்றமில்லாமல் எடுத்து முடித்தது.

அடுத்து அரை இறுதி என்னும் சவால். ஆகிவந்த எதிரியான பாகிஸ்தான் புதிய உத்வேகத்துடன் களத்தில் நிற்கிறது. சூறாவளி வேகத்தில் ஆட்டத்தைத் தொடங்கிய வீரேந்திர சேவாக் விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். ஓட்டங்களை வேகமாக எடுத்தாலும் சச்சின் சரளமாக ஆடவில்லை. ஆனாலும் அணியினரின் ஒட்டுமொத்த முயற்சியும் பாகிஸ்தானின் மோசமான தடுப்பு ஆட்டமும் சேர்ந்து 260 ஓட்டங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தன. மட்டை வீச்சு சோபிக்காத நாட்களில் ஒன்றாகவே இதைக் கருத வேண்டும். ஆனால் பாகிஸ்தானால் இந்த ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. துல்லியமான பந்து வீச்சு மற்றும் தடுப்புத் திறனின் மூலம் இந்தியா வென்றது. அதன் பலவீனங்கள் மறைய ஆரம்பித்ததன் இன்னொரு அடையாளம் இது. 85 ஓட்டங்கள் எடுத்த டெண்டுல்கர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்னும் வரலாறு மாற்றப்படாமல் நிற்கிறது. டெண்டுல்கர் கொடுத்த பிடிகளை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தால் இந்தியா இந்த அளவுக்கு ஓட்டங்களை எடுத்திருக்காது என்று வாதிடலாம். ஆனால் அவருக்குப் பதில் கௌதம் காம்பீரோ யுவராஜ் சிங்கோ மகேந்திர சிங் தோனியோ அந்த ஓட்டங்களை எடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், இப்போதெல்லாம் சச்சின் விரைவில் அவுட் ஆகும்போது அணியின் பொறுப்புணர்வு அதிகமாகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இதைப் பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியிலும் சச்சின் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தபோது அணி பாதுகாப்பான இடத்தை எட்டியிருக்கவில்லை. காம்பீர், கோஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகியோர் மிகவும் பொறுப்புடன் ஆடி வென்றனர்.

இறுதிப் போட்டியிலும் அதுதான் நடந்தது. மிக அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் - அதிலும் அந்த ஸ்ட்ரெய்ட் டிரைவ் இன்னும் கண்ணில் நிற்கிறது - 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆனால் காம்பீர், கோஹ்லி, தோனி ஆகியோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி முடித்தார்கள். வரலாறு திரும்பியது. கோப்பை வசமானது. உலகக் கோப்பைப் போட்டிகளில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இதுவரை துரத்தி எடுத்த ஓட்டங்களில் இதுதான் (275) அதிகபட்ச ஓட்டம் என்னும் புதிய வரலாறு எழுதப்பட்டது. போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்னும் வரலாறும் திருத்தி எழுதப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை இந்தியாவின் வசமானது. தேசமே இதைக் கொண்டாடியது. எந்த வாங்கடே மைதானத்தில் இந்தியா பெற்ற தோல்வியை எண்ணி சச்சின் சிறு வயதில் வருந்தினாரோ அதே மைதானத்தில் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.

வென்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய தோனி, இந்த வெற்றிக்குக் காரணம் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, சௌரவ் கங்கூலி, ராகுல் திராவிட் ஆகிய நால்வர் போட்ட விதைதான் என்று மறக்காமல் குறிப்பிட்டார். அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் பங்கை டெண்டுல்கர் பாராட்டினார். ஒரு ஆண்டுக்கு முன்பே அணி இந்த இறுதிப் போட்டிக்கு மனத்தளவில் தயாராக இருந்ததை அணியின் உளவியல் ஆலோசகர் பாடி உப்டன் குறிப்பிட்டார். இந்த முறை கோப்பையைத் தவறவிடுவதில்லை எனற உறுதி ஒவ்வொருவரிடத்திலும் தெரிந்தது. அணியின் முன்னேற்பாடுகள் நன்றாகவே இருந்தன. பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியையும் நியூஸிலாந்து அணியையும் எளிதாகத் தோற்கடித்தது. ஒரு நாள் போட்டிகளில் துல்லியமான வீச்சின் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்தக்கூடிய பிரவீண் குமாருக்குக் காயம் பட்டு அவர் அணியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை பின்னடைவை ஏற்படுத்தினாலும் அணி சோர்ந்துவிடவில்லை. தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஸ்ரீஷாந்த் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் முனாஃப் படேல் ஓரள்வு அதை ஈடுகட்டினார். சுழலர் பியுஷ் சாவ்லா ஏமாற்றம் அளித்தாலும் யுவராஜ் ஆறுதல் அளித்தார். மட்டைகளும் உற்சாகமாகச் சுழன்றன.

**

வெற்றி பெருமைக்குரியதுதான். கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால் அது சில குறைபாடுகளை மறைத்துவிடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஆஷிஷ் நெஹ்ராவுக்குக் கொடுத்தது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அஸ்வினைச் சேர்க்காதது தவறு என்றும் விமர்சகர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். முதல் சுற்றின் முடிவில் களம் இறக்கப்பட்ட அஸ்வின் கால் இறுதிப் போட்டியிலும் அணியில் இடம்பெற்றார். சிறப்பாகப் பந்து வீசிய அவரை மொஹாலியில் அரை இறுதியில் களம் இறக்கவில்லை. அவருக்குப் பதில் வேகப் பந்து வீச்சாளர் நெஹ்ரா சேர்க்கப்பட்டார். நெஹ்ரா அந்தப் போட்ட்யில் நன்றாகவே போட்டார் என்றாலும் பாகிஸ்தான் சுழலர்களுக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்தபோது இந்தியா அஸ்வினை விலக்கியது தவறு என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆடுகளத்தைத் தவறாக எடை போட்டுவிட்டோம் என்று தோனி பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் அதே தவறை இறுதிப் போட்டியிலும் செய்தார். மீண்டும் அஸ்வின் விலக்கப்பட்டு ஸ்ரீஷாந்த் சேர்க்கப்பட்டார். அவர் தன்னால் முடிந்தவரை மோசமாகப் பந்து வீசினார். அவருக்கான பத்து ஓவர்களை முழுமையாகப் போட தோனி அனுமதிக்கவில்லை. அவ்வளவு மோசமாக வீசினார். தோனி 91 ஓட்டங்கள் எடுத்து வென்றுவிட்டதால் இந்தத் தவறை நியாயப்படுத்திவிட முடியாது. வெற்றிக்கான செயல்பாடு என்பது போட்டிக்கான தயாரிப்புகளிலிருந்தே தொடங்குகிறது. மிக முக்கியமான போட்டியில் தவறான முடிவுகளை எடுத்தது அணி நிர்வாகம் செய்த தவறு. வெற்றி என்னும் ஜிகினாத் தாளை வைத்து இந்தத் தவறுகளை மூடி மறைக்காமல் இருப்பது அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.

அணி பெருமை கொள்வதற்கான காரணங்களும் இருக்கின்றன. இறுதிப் போட்டியில் 6ஆவது ஓவரிலேயே 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பு என்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் மன உறுதியும் விடா முயற்சியும் பாராட்டத்தக்கவை. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரே ஒரு முறைதான் தோற்றிருக்கிறது என்பதும் பாராட்டத்தக்கதுதான். தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுப்போன அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் இடத்திற்கு எளிதாகப் போய்ச் சேர்ந்துவிட்டது. தான் செய்த சில தவறுகளாலேயே அந்த நிலையிலிருந்து சறுக்கியது. வெற்றி தோல்வியின்றி முடிந்த போட்டியிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஒரு சில தவறுகளே அதன் நிலையைப் பலவீனமாக்கின. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகள் மோசமான தோல்விகளைத் தழுவின. ஆனால் இந்திய அணியை எந்த அணியும் நிமிர முடியாமல் அடிக்கவில்லை. இலங்கை அணியின் நிலையும் அதுவே.

20-20 போட்டிகள் வரவேற்புப் பெற்றுவரும் இன்றைய சூழலில் ஒரு நாள் போட்டிகளின் வசீகரத்தை மீட்டுத் தந்த போட்டித் தொடர் இது என்று சொல்லலாம். சில பிசிறுகளை விட்டுவிட்டுப் பார்த்தால் இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆளுமையை அழுத்தமாகவே பறைசாற்றியிருக்கிறது. அரை இறுதியில் ஆடிய நான்கு அணிகளில் மூன்று ஆசிய அணிகள் என்பதை வைத்துப் பார்க்கும்போது கிரிக்கெட்டின் மையம் இடம் மாறுவதை உணரலாம்.

இந்தியா கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தேசத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு ஆட்டத்துக்கு இது பெரிய அனுகூலம் என்பதிலும் சந்தேகமில்லை.

*

டெஸ்ட் கிரிக்கெட்: நிலை கொள்ளும் அழகியல்

ஒரு நாள் ஆட்டங்கள் பிரபலமடையத் தொடங்கியபோது இனி டெஸ்ட் போட்டிகளின் நிலை அவ்வளவுதான் என்று சொன்னார்கள். 20-20 போட்டிகள் வந்தபோதும் அதையேதான் சொன்னார்கள். விரைவு உணவு போல, மூன்று மணி நேர சினிமா போல, கால்பந்து முதலான ஆட்டங்கள் போல, விறுவிறுப்பாக நடக்கும் மூன்று மணிநேரப் பரபரப்புக்கு முன் ஐந்து நாள் ஆட்டம் எடுபடாது என்று சில பண்டிதர்கள் ஆரூடம் சொன்னார்கள். சூறாவளிபோலத் தாக்கிய 20 ஓவர் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடித்துச் சென்றுவிடுமோ என்று மரபார்ந்த கிரிக்கெட்டின் காதலர்கள் பயந்தார்கள். ஆனால் கிரிக்கெட்டின் செவ்வியல் வடிவமான டெஸ்ட் போட்டியின் மதிப்போ வசீகரமோ குறையவில்லை என்பதைக் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவரும் போட்டிகள் நிரூபிக்கின்றன. அதுவும் அண்மையில் நடந்து முடிந்த ஆஷஸ் (ஆஸ்திரேலியா - இங்கிலாந்து) டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் தொடர் ஆகியவை டெஸ்ட் போட்டிகளின் வசீகரம் கூடியிருப்பதை உணர்த்தியிருக்கின்றன.

அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகும் விரைவு உணவுகள் விரைவான வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் தலை வாழை இலை போட்டிப் பரிமாறப்படும் விஸ்தாரமான உணவு தன் சுவையையும் வசீகரத்தையும் இழந்துவிடவில்லை. உடனடி காப்பி வந்த பிறகும் வடிகட்டியில் பொறுமையாக இறங்கும் ஃபில்டர் காப்பிக்கான மதிப்பும் வசீகரமும் குறைந்துவிடவில்லை. வாழ்வின் எல்லா அம்சங்களையும்போலவே கிரிக்கெட்டும் காலத்திற்கேற்ப மாறிவருகிறது. ஒரு காலத்தில் இரண்டு இன்னிங்ஸ்களும் முடியும்வரை எத்தனை நாளானாலும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த கிரிக்கெட் பிறகு ஆறு நாட்களுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற வரையறைக்கு உட்பட்டது. ஆறு பிறகு ஐந்தாயிற்று. இடையில் விடப்பட்டுவந்த ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டது. எகிறு பந்துகளின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டது. மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சொல்வதே இறுதி என்ற நிலை இன்றும் தொடர்ந்தாலும் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் தொழில்நுட்பத்தின் உதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரன் அவுட், ஸ்டெம்பிங் முதலான தருணங்களில் தொழில்நுட்ப உதவியுடன் மூன்றாவது நடுவர் தரும் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு நாளில் குறைந்தது இத்தனை ஓவர்கள் போடப்பட வேண்டும் என்னும் விதிகளும் விதி மீறல்களுக்கு அபராதமும் வழங்கப்படுகின்றன. இப்படி எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் மரபார்ந்த டெஸ்ட் போட்டியின் அடிப்படைக் குணம் மாறவில்லை. அதன் அழகியல் சிறப்பும் அது தரும் பரவசமும் மாறவில்லை.

ஆஷஸ் போட்டியும் தெ.ஆ. - இந்தியப் போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமையைப் பறைசாற்றுகின்றன. முதல் போட்டியில் டிரா செய்த ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் தோற்றாலும் பெர்த் மைதானத்தில் வீறு கொண்டு எழுந்து இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்விக்கு ஆளாக்கியது. இங்கிலாந்தின் சவால் வலுவிழந்துபோகுமோ என்று தோன்றியபோது அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வசதியான வெற்றியைப் பெற்று 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்த வெற்றி ஆஷஸ் கோப்பை இந்த முறை ஆஸிக்கு இல்லை என்பதையும் உறுதி செய்தது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் தோற்றால்தான் கோப்பை அவர்கள் கையை விட்டுப் போகும். ஆனால் நான்கு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்ததால் ஐந்தாவது டெஸ்டில் வென்றாலும் ஆஸியால் தொடரைச் சமன் செய்யத்தான் முடியும் என்ற நிலை. சமன் செய்தால் கோப்பையைத் திரும்பப் பெற முடியாது என்பதால் நான்காவது டெஸ்டிலேயே ஆஸியின் கனவு தகர்ந்தது என்று சொல்லலாம். ஆட்டத்தில் தன் பிடியை இழந்து தவிக்கும் ஆஸி அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்குக்குக் கை விரலில் அடியும் பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐந்தாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி கண்டு ஆஸி அணி பெரும் சரிவைக் கண்டது. சர்வதேசத் தர வரிசையில் முதல் முறையாக ஐந்தாம் இடத்துக்குச் சறுக்கியது.

டெஸ்ட் ஆட்டங்களின் முதல்வனாக நெடுங்காலம் கம்பீரமாக உலவிவந்த ஆஸ்திரேலிய அணிக்கு என்ன ஆயிற்று? ரிக்கி பாண்டிங்கும் ஆஸியின் பிற கிரிக்கெட் ஜாம்பவான்களும் சொல்வதுபோல, ஸ்டீவ் வா, ஷேன் வார்ன், க்லென் மெக்ரா, மேத்யூ ஹேடன், கில் க்றிஸ்ட், ஜஸ்டின் லேங்கர் ஆகிய மாபெரும் திறமைசாலிகள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஓய்வு பெற்றதுதான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மையும் இல்லை. ஷேன் வார்ன் ஆடிக்கொண்டிருந்தபோதே பல போட்டிகளில் ஆஸி அணி மண்ணைக் கவ்வியிருக்கிறது. மெக்ரா தன் உச்சத் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சமயத்தில்கூட ஆஸி அணி பல போட்டிகளில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உதாரணமாக, 2003-04 ஆண்டில் இந்திய அணி ஆஸியில் சுற்றுப் பயணம் செய்தபோது இவர்கள் அத்தனை பேரும் அணியில் இருந்தார்கள். ஆனாலும் இந்தியாவால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடிந்தது. பிரிஸ்பேனில் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து டிரா செய்ய இந்திய அணியால் முடிந்தது. சிட்னியிலும் அடிலெய்டிலும் இந்திய அணி அபாரமாக ஆடியது. கடைசி டெஸ்டை டிரா செய்ய அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வா (அவருக்கும் அது கடைசி டெஸ்ட்) கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதுபோலவே தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் சர்வ வல்லமை பொருந்திய ஆஸிக்குப் பல சமயங்களில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் ஆஸி அணி நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம் யாராவது ஒருவர் அணியைக் காப்ப்பாற்றிவிடுவார். முன்னிலை மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்காதபோது கடை நிலை ஆட்டக்காரர்கள் அந்தப் பணியை ஏற்றுக்கொள்வார்கள். ஒரு முறை (1999-2000 தொடர்) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 100 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து ஆஸி அணி தத்தளித்தது. ஆனால் ஆடம் கில் கிறிஸ்டும் பந்து வீச்சாளர் ஷேன் வார்னும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அந்தப் போட்டியில் ஆஸி வென்றது. அதுபோலவே பங்களாதேஷுக்கு எதிரான ஒரு போட்டியில் (2004) ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி தடுமாறியபோது பந்து வீச்சாளர் கில்லெஸ்பி தன் மட்டை வீச்சின் மூலம் அணியைக் காப்பாற்றினார். முன்னிலைப் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் விழாதபோது மைக்கேல் கிளார்க் போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். இதுபோலப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

திறமைசாலிகள் எல்லா அணிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்போது அவர்களின் தனித் திறன் கணிசமாக உயர்கிறது. இந்த அணுகுமுறைதான் ஆஸியின் கூடுதல் பலம். தவிர, வெற்றியின் மீது அவர்களுக்கு இருக்கும் அசாத்தியமான வெறி, எம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற மிதமிஞ்சிய தன்னம்பிக்கை ஆகியவையும் அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கின்றன. இவையும் ஆஸி அணி பல ஆண்டுகள் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணங்களாக அமைந்தன.

ஆனால் காலப்போக்கில் இந்த அம்சங்கள் மெல்ல மெல்ல மற்ற அணிகளுக்கும் தொற்றிக்கொண்டன. இங்கிலாந்து போன்ற அணிகளில் புதிய திறமைசாலிகள் இடம்பெற்றார்கள். இந்தியா போன்ற அணிகளில் ஆட்டக்காரர்கள் தங்கள் திறமைக்கு நியாயம் செய்யும் வகையில் ஆடிவருகிறார்கள். அதே சமயத்தில் ஆஸி அணியில் திறமையாளர்கள் குறையத் தொடங்கினார்கள். இந்த எல்லாக் காரனங்களும் சேர்ந்து ஆஸியின் ஆதிக்கத்துக்கு வேட்டு வைத்துவிட்டன.

ஆனால் இன்றும்கூட ஆஸி அணியைப் புறக்கணித்துவிட முடியாது. அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கும் இதே அணிதான் பாகிஸ்தான் அணியைச் சென்ற ஆண்டில் மூன்று டெஸ்ட்களிலும் மண்ணைக் கவ்வ வைத்தது. இதே அணிதான் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கிட்டத்தட்ட வெல்லும் நிலையில் இருந்தது. வி.வி.எஸ். லட்சுமணனின் அற்புதமான மட்டை வீச்சும் கொஞ்சம் அதிருஷ்டமும் சேர்ந்துதான் இந்தியாவால் வெல்ல முடிந்தது. ஆஷஸ் தொடரிலும் பெர்த்தில் ஆஸி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இன்னிங்ஸ் வெற்றி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாவிட்டாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டது. ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரது ஆட்டங்களும் திறன்மிகு நிலையில் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. டக் பொலிஞ்சர், மிட்செல் ஜான்சன் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் சோபிக்காதது அல்லது இங்கிலாந்து மட்டையாளர்கள் மிகச் சிறப்பாக ஆடியது ஆஸியின் வெற்ரி வாய்ப்பைப் பறித்துவிட்டது. பாண்டிங், கிளார்க், ஜான்சன், பொலிஞ்சர் ஆகிய நால்வரில் இருவர் தங்கள் ஆட்டத்தின் திறன்மிகு நிலையை எட்டினால்கூட ஆஸி அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்.

அணித் தலைவர் பாண்டிங் மோசமாக ஆடுவதும் பந்து வீச்சின் பலவீனமும் சேர்ந்து ஆஸியைத் தலை குனிய வைத்திருக்கிறது. அண்மைக் காலங்களில் ஆஸி அணித் தலைவர் யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடியை பாண்டிங் எதிர்கொண்டிருக்கிறார். தலைவன் பலவீனமாக இருப்பதும் அணியின் பலவீனமாகத் தலைவனை எதிரணியினர் அடையாளம் காண்பதும் களத்தில் மிக எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. ஆஸியின் மிகப் பெரிய பிரச்சினையே இதுதான். ஒன்று பாண்டிங் தேறிவர வேண்டும். அல்லது அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் ஆஸி அணி இந்த நெருக்கடியை இப்போதைக்குக் கடக்காது.

*

மறுபுறம் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா தன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா முதலிடம் பெற்ற பின் அது ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய மண்ணில் நடந்தவை. எல்லா ஆட்டங்களும் துணைக்கண்டத்து ஆடுகளங்களில் நடந்தவை. எனவே இந்தியாவின் முதன்மை நிலை கடுமையான சோதனைக்கு ஆளாகவில்லை என்றே சொல்லலாம். இதனாலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் அதன் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. அதற்கேற்றாற்போல முதல் போட்டியின் முதல் நாளில் மட்டை பிடித்த இந்தியா 131 ஓட்டங்களுக்குள் சுருண்டது. டேல் ஸ்டெயின், மோர்னி மார்க்கல் ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய மடையாளர்கள் சரிந்தனர். இந்தியாவின் திறமையின் மீது எப்போதும் ஐயம் கொள்ளும் விமர்சகர்களின் முகங்களில் மந்தகாசப் புன்னகை அரும்பியது.

அன்றைய நாளில் எந்த அணி ஆடியிருந்தாலும் 200 ஓட்டங்களைத் தாண்டியிருக்க முடியாது என்பதே அன்றைய ஆடுகளத்தின் நிலை என்பதை வசதியாக மறந்துவிட்டுப் பலரும் எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். ஆனால் அடுத்த இன்னிங்ஸிலும் அதற்கடுத்து ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் இந்தியா தெ.ஆ.வின் வேகப் பந்துக் கணைகளைத் திறமையாகவே எதிர்கொண்டு ஆடியது. இரண்டாவது போட்டியை வென்றது. அதில் தெ.ஆ. அணியை ஒரு முறை 150 ஓட்டங்களுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டியின் பெரும் பகுதியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மூன்றாம் போட்டியின் நான்காம் நாளில் கூடுதல் தீவிரமும் சிறிது அதிருஷ்டமும் இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியையும் தொடரையும் வென்று சாதனை படைத்திருக்கும். இந்த மாற்றம் விமர்சகர்களின் முகங்களில் தோன்றிய மந்தகாசப் புன்னகையை மங்கச் செய்தது. இனியும் இந்தியாவைச் சொந்த ஊரில் மட்டும் சூரப் புலிகள் என்று சொல்லிவிட முடியாது என்பதை உலக கிரிக்கெட் விமர்சகர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றம் சும்மா வந்துவிடவில்லை. யாரோ ஒருவர் அல்லது இருவரின் உழைப்பால் வந்துவிடவில்லை. அணியின் அனைத்து உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு தருணத்தில் அணியின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஜாகீர் கானும் ஹஜ்பஜன் சிங்கும் தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இஷாந்த் ஷர்மா சில நெருக்கடியான கட்டங்களில் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குப் பெரும் ஆறுதலைத் தந்தார். உணர்ச்சிவசப்படும் ஸ்ரீஷாந்தும் சில சமயங்களில் பெரும் பங்காற்றியிருக்கிறார். தெ.ஆ.வில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவர் எடுத்த விக்கெட்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக ஜாக் காலிஸுக்கு அவர் வீசிய எகிறு பந்து ஒரு அற்புதம். வீரேந்திர சேவாக், கௌதம் காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், மகேந்திர சிங் தோனி ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியா இப்போதுதான் ஓர் அணியாக உணரத்தக்க வகையில் ஆடிவருகிறது. அனைவரும் பொறுப்பேற்கிறார்கள். ஆஸியின் கில்லெஸ்பி, ஜான்சன் ஆகியோரைப் போல ஹர்பஜன், ஜாகீர், இஷாந்த் ஆகிய பந்து வீச்சாளர்கள் மட்டையிலும் சில சமயம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்தியா முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூடுவதற்கும் தன் பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அழகு, நுட்பம், அதில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான போராட்டம் ஆகியவற்றை இந்தியா ஆடும் போட்டிகளில் அனுபவிக்க முடிகிறது. குறிப்பாக, தெ.ஆ. அணிக்கெதிரான போட்டிகளில் டெஸ்ட் போட்டியின் தீவிரத்தையும் பரவசத்தையும் அனுபவிக்க முடிந்தது. மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் காலையில் டேல் ஸ்டெயின் சச்சினுக்கு வீசிய ஓவர்கள் டெஸ்ட் போட்டியின் பொன்னான தருணங்கள். அவ்வளவு துல்லியமான அளவில் அத்தனை வேகத்தில் அவரால் வீச முடிந்தது ஒரு ஆச்சரியம் என்றால் வீசிய பந்துகளில் பாதிக்கும் மேல் ஸ்விங் ஆனது அதை விடப் பெரிய ஆச்சரியம். சச்சினின் அனுபவம், திறமை, கவனம், கொஞ்சம் அதிருஷ்டம் எல்லாம் சேர்ந்துதான் அவரது விக்கெடைக் காப்பாற்றின. சச்சினும் ஹர்பஜனும் சேர்ந்து காற்றை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்கள். அதைத் தொடர்ந்து இந்தியப் பந்து வீச்சாளர்கள் 140க்குள் 6 விக்கெட்டை வீழ்த்தி அந்தக் காற்றை மேலும் வலுவாக வீசச் செய்தார்கள். ஆனால் காலிஸ், மார்க் பவுச்சர், டேல் ஸ்டெயின் ஆகியோரின் மட்டை வீச்சு இந்தியாவின் சாதகத்தை மழுங்கச் செய்தது. இந்தியாவின் கைக்கு எட்டிய வெற்றி கை நழுவிப் போனது. டிராவுடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. தீவிரமாகப் போரிடப்பட்ட ஒரு அற்புதமான தொடர் சம நிலையில் முடிவுக்கு வந்தது இரு அணிகளின் தகுதிக்கும் நியாயம் செய்வதாக இருந்தது.

ஆஷஸ் தொடரிலும் தெ.ஆ. - இந்தியத் தொடரிலும் ஆடப்பட்ட போட்டிகள் கிரிக்கெட்டின் சாதனைகளின் எல்லைகளை விஸ்தரிப்பதுடன் அதன் அழகையும் மதிப்பையும் கூட்டுவதற்குப் பங்காற்றியிருக்கின்றன. இந்தத் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்தான் அசல் கிரிக்கெட் என்ற உண்மையை அழுத்தமாகப் பறைசாற்றுகின்றன.