Tuesday, April 12, 2016

ஏன் இந்தப் பதற்றம் தோனி?


இந்தியா உலகக் கோப்பை அரை இறுதியில் தோற்று வெளியேறிய போது கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். தோனி கேள்வி கேட்டவரை மேடைக்கு அழைத்து உரையாடினார். நான் நன்றாக ஓடுகிறேனா, நான் நல்ல உடல் திறனுடன் இருக்கிறேனா என்றெல்லாம் தோனி கேட்க, அவரும் ஆஹா உங்களைப் போல வருமா என்று பதில் சொன்னார்.

அண்மையில் நான் எவ்வளவு ரன் எடுத்தேன், எத்தனை போட்டிகளை வெற்றி கரமாக முடித்துக்கொடுத்தேன் என்றெல் லாம் ஏன் நீங்கள் கேட்கவில்லை தோனி அவர்களே? பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலோ நெருக்கடியான கட்டத்தில் மட்டை வரிசையில் செய்த மாற்றங்களிலோ எந்தக் குறையாவது கண்டீர்களா என்று ஏன் கேட்கவில்லை? கடந்த ஓராண்டில் நீங்கள் எடுத்த மொத்த ரன்கள் எவ்வளவு? சராசரி எவ்வளவு? அணியின் வெற்றியில் உங்கள் மட்டையின் பங்களிப்பின் விகிதம் என்ன? இந்தக் கேள்விகளைக்கூட நீங்கள் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.

ஆனால் உலகம் கேட்கிறது. 2004-ல் நீண்ட முடியுடன் களம் புகுந்து கவலை யற்ற மனிதனாக நீங்கள் மட்டையைச் சுழற்றிய அழகைக் கண்டு வியந்த அதே உலகம்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கி றது. 2007-ல் டி 20 உலகக் கோப்பையை வென்றபோது உங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய அதே உலகம்தான் கேட்கிறது.

மூத்த வீரர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, அடுத்த நிலையில் இருந்தவர்களுக்குப் பொறுப்பளிக்க அணி நிர்வாகம் தயங்க, தலைமைப் பொறுப்பு உங்கள் தோள்களில் வந்து அமர்ந்தது. காற்றில் அழகாகப் பறக்கும் உங்கள் முடி காலப்போக்கில் குறையத் தொடங்கியது. ஆடுகளத்தில் உங்கள் மதிப்போ வளரத் தொடங்கியது.

உங்கள் ஆட்டத்தைவிடவும் உங்கள் முகத்தில் தவழும் புன்னகை, அலட்டிக்கொள்ளாத இயல்பு, நெருக்கடியில் பதறாத நிதானம், மூத்த வீரர்களைக் கையாளும் பக்குவம் ஆகியவை உங்களை நல்லதொரு தலைவனாக அடையாளம் காட்டின. விக்கெட் கீப்பிங்கில் குறை சொல்ல முடியாதபடி செயல்பட்ட நீங்கள், மட்டை வீச்சில் அலாதியான புகழை அடைந்தீர்கள். பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியே அடிப்பதையே இலக்காகக் கொண்டிருந்த உங்கள் ஆட்டம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. சந்தர்ப்பத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டீர்கள். அணியின் நிலையைப் பொறுத்து வெவ்வேறு நிலை களில் களம் இறங்கவும் வெவ்வேறு வேகங் களில் ரன் அடிக்கவுமான திறமையும் வளர்ந்தன. உங்களது இந்தத் திறமையின் உச்சத்தை 2011 உலகக் கோப்பையில் உலகமே பார்த்து வியந்தது.

அதன் பிறகு உங்களால் மட்டை வீச்சின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. உங்கள் மட்டை அவ்வப் போது பிரகாசித்தாலும் ஒப்பீட்டளவில் அது மவுனம் சாதிக்கிறது. குறிப்பாக, இந்திய மண்ணுக்கு வெளியே உங்கள் மட்டைக்கு அதிக வேலை இருப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அதற்கு முன்பு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளிலும் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு வங்க தேசத்திலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவிலும் நடந்த ஒருநாள் போட்டித் தொடர் களிலும் உங்கள் பழைய வேகத்தையோ போட்டியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தையோ பார்க்க முடியவில்லை.

இப்போதும் நீங்கள் ரன் எடுக்கும்போது நன்றாகத்தான் ஓடுகிறீர்கள். விக்கெட் கீப்பிங்கிலும் உங்கள் வேகம் குறைய வில்லை. ஆனால், ஆடுகளத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற இவை மட்டும் போதாது. இன்று ஒரு மட்டையாளராக உங்கள் நிலை என்ன? நீங்கள் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரைப் போல இடைநிலையில் ஆடி இன்னிங்ஸை வலுப்படுத்துவீர்களா? அல்லது மார்லன் சாமுவேல்ஸ், ஃபாக்னர் போலக் கீழ் இடைநிலை மட்டை வரிசையைப் பலப் படுத்துவீர்களா? எது உங்கள் இடம்? அதில் அண்மையில் நீங்கள் செய்த சாதனை என்ன?

ஆடுகளத்தில் வேகமாக ஓடுவது முக்கியம்தான். ஆனால் அதுவே ஒரு மட்டையாளரின் தனிப் பெரும் தகுதியாகி விடும் என்றால் உசைன் போல்ட்டை கிரிக்கெட் ஆடச் சொல்லலாமே? கிரிக்கெட் கண்ட சிறந்த மட்டையாளர்களில் ஒருவர் வி.வி.எஸ். லட்சுமணன். அவர் எந்தக் காலத்திலும் உங்களைப் போல ஓடும் திறமை பெற்றவராக இருந்ததே இல்லை. பாகிஸ்தானின் இன்ஸமாம் உல் ஹக்கும் அப்படியே. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆட ஓட்டம் மட்டும் போதாது தோனி.
நீங்கள் அணியின் தலைவராகவும் இருப்பதால் உங்கள் ஆட்டத்தை மட்டு மல்ல, அணியில் உள்ள பிறரது ஆட்டத் தையும் சிறப்பான முறையில் வெளிக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு உங்க ளுக்கு இருக்கிறது. தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் மட்டையாளரால் எப்படி மற்றவர்களுக்கு உத்வேகம் தர முடியும்?

உங்கள் தலைமையில் அண்மைக் காலத்தில் இந்தியா ஒரு நாள் போட்டி களில் பல தோல்விகளைச் சந்தித்துள் ளது. டி 20 போட்டிகளில் அண்மையில் இந்தியா பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக் கவைதான். ஆனால், அது உங்கள் தலை மையின் திறமையால் வந்தவைதானா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பிக்கொள் ளுங்கள். பந்து வீச்சாளர்களின் தேர்வு, அவர்களைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடைசி ஓவர்களைக் கையாள்வதில் உங்கள் திறன் வற்றிவரு வது கண்கூடு. குறிப்பாக, டி 20 அரையிறு தியில் கடைசி இரண்டு ஓவர்களை நீங்கள் பயன்படுத்திய விதம் இந்தியா தோற்பதற் கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஒரு மட்டையாளராக நீங்கள் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக் கிறீர்கள். உங்கள் தலைமை அஸ்திரங் கள் வலிமை இழந்துவருகின்றன. கிரிக் கெட்டின் ஆகப் பெரிய சோதனையான டெஸ்ட் அரங்கிலிருந்து ஏற்கெனவே நீங்கள் வெளியேறிவிட்டீர்கள். தற்போ தைய டெஸ்ட் கேப்டன் கோலியின் அணுகு முறை மாறுபட்டதாக இருக்கிறது. அப்படித் தான் இருக்க வேண்டும். தலைமை விஷயத் தில் கங்குலி, டிராவிட் பாணியிலிருந்து நீங்கள் மாற்றம் கொண்டுவந்தீர்கள். இன்று கோலியின் முறை. புதிய தலைமை, புதிய அணுகுமுறை என்று இந்திய கிரிக்கெட் எல்லா வடிவங்களிலும் அடுத்த கட்டத் துக்கு நகர வேண்டிய தருணம் வந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கிரிக்கெட்டுக்குச் சிறப்பான சேவை ஆற்றிவரும் நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு, பத்திரிகையாளர்களைக் குறுக்கு விசாரணை செய்வது உதவாது. உங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment