Thursday, August 10, 2017

சிறுகதை: பொறி




மாற்றுச் சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது வீடு இருளில் மூழ்கியிருந்தது. படுக்கையறையில் மட்டும் ஜீரோ வாட் பல்ப் எரிந்துகொண்டிருந்தது. நந்தினி தூங்கிப் போயிருந்தாள். முன் அறையில் விளக்கைப் போடாமல் - தூங்கிக்கொண்டிருக்கும் நந்தினி எழுந்துவிடக்கூடும் - படுக்கையறையிலிருந்து கசியும் மெல்லிய வெளிச்சத்தின் துணையோடு சுதாகர் காலணிகளைக் கழற்றி அவற்றுக்குரிய இடத்தில் வைத்துவிட்டுப் படுக்கையறைக்குள் வந்தான். கையோடு கொண்டுவந்திருந்த லேப்-டாப் கம்ப்யூட்டரைப் படுக்கை மீது நந்தினிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு - இவள் ஏன் புடவை கட்டிக்கொண்டு தூங்குகிறாள் - உடைகளைக் கழற்றிவிட்டுத் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான்.


கூட்டங்கள், விவாதங்கள், திட்டங்கள், திட்ட முன்வரைவுகள், திட்டச் செலவு மதிப்பீடுகள், கடந்த மூன்று மாத நிலவரம் குறித்த பரிசீலனைகள், உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கான ஆலோசனைகள், கணக்கு வழக்குகள், நீண்ட தொலை பேசி உரையாடல்கள், கருத்தரங்கத் தொலைபேசி உரையாடல்களில் நடந்த விவாதங்கள், தலைமை அலுவலகத்தின் கேள்விகளுக்கான பதில்களைத் தயாரித்தல் என்று நாள் முழுவதும் வாட்டி எடுத்த சுமைகளெல்லாம் குளிர்ந்த நீரில் கரைவதுபோல் இருந்தது. மனம் லேசானதுபோல் இருந்தது. சற்று உற்சாகம்கூட எட்டிப் பார்த்தது. நந்து ஏன் இவ்வளவு சீக்கிரம் தூங்கிவிட்டாள் என்று தோன்றியது - பதினொன்றரை என்பது சீக்கிரம் அல்ல என்று நன்றாகத் தெரிந்த போதிலும். வீட்டுக்குள் வரும்போது இருந்த இறுக்கம் குளியல் அறையைவிட்டு வரும்போது குறைந்திருந்தது. சுவரைப் பார்த்து ஒருக்களித்தபடி படுத்திருந்த நந்தினியின் பின்புறத் தோற்றம் வசீகரமாக இருந்தது. இவள் ஏன் இன்றைக்குப் புடவையுடன் தூங்குகிறாள் என்று மறுபடியும் தோன்றியது. அதுவும் புதுப் புடவைபோல் இருக்கிறதே என்றும் தோன்றியது. அவளைத் தொட வேண்டும் என்று எழுந்த உத்வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான். தூங்கும்போது எழுப்புவது அவனுக்குப் பிடிக்காது.

உள்ளாடையையும் அரை நிஜாரையும் மாட்டிக் கொண்டு குளிர்பதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு மறுபடியும் படுக்கையறைக்குள் நுழைந்தபோது “சாப்டாச்சா?” என்ற குரல் கேட்டது.

சுதாகர் விசில் அடித்தான். “நீ இன்னும் தூங்கலயா?” என்று கேட்டான். நந்து முழித்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் அவன் உற்சாகத்தைக் கூட்டியது. பக்கத்தில் சென்று அவள் அருகில் சரிந்து உட்கார்ந்தபடி அவள் தோளைத் தொட்டு, “இன்னிக்கு என்ன இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்ட?” என்றான்.

நந்தினி நகைச்சுவையை ரசிக்கும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. “எங்க சாப்டீங்க?” என்றாள்.

“மீட்டிங்லயே சாப்பாடு. சரவண பவன்ல ஆடர் பண்ணியிருந்தோம்.”

நந்தினி வேறு எதுவும் பேசவில்லை. சுதாகரின் விரல்கள் அவள் தோள்மீது கோலமிட்டன. அப்படியே மெதுவாக எந்த இடத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பது அந்த விரல்களுக்குத் தெரியும். நந்தினி இன்னொரு கையை நீட்டி அந்த விரல்களைத் தட்டிவிட்டாள். சுதாகர் மேஜையில் கால் சுண்டுவிரல் இடித்துக்கொண்டது போன்ற வலியை உணர்ந்தான். அவன் கை அவள் முழங்கைமீது அசையாமல் இருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்து தன்னைச் சுதாரித்துக் கொண்டான். பிறகு, “ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான். உடம்பு சரியில்லாவிட்டால் கோபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிந்தும் உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பதற்காக அப்படிக் கேட்டான்.

நந்தினி பதில் பேசவில்லை. சுதாகரும் சிறிது நேரம் பேசவில்லை. பிறகு அவளது கையை லேசாக அசைத்தபடி, “கேக்கறேன்ல?” என்றான். “ப்ச” என்ற பதில்தான் வந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது. என்ன கோபம் என்று சொல்லாமலேயே கோபப்பட்டால் என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. பேச ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அவளை எப்படிப் பேச வைப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் புடவை மறுபடியும் கண்ணை உறுத்தியது. வழக்கமாகக் கை இல்லாத நைட்டியை அணிந்திருப்பவள் இன்றைக்கு ஏன் புடவை, அதுவும் புதுப் புடவை அணிந்துகொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. இதையே உரையாடலைத் துவக்கும் உத்தியாகப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது.

“ஏன் பொடவ கட்டிண்டு தூங்கற? அதுவும் புதுப் பொடவ?”

“பரவாயில்லயே. நா பொடவ கட்டிண்டு இருக்கறதும் உங்க கண்ணுக்குத் தெரியுது. அது புதுசுன்றதும் தெரியுது. ரொம்ப இம்ப்ரூவ் ஆயிட்டீங்க.”

சுதாகர் சற்று நிம்மதி அடைந்தான். உரையாடல் தொடர்ந்ததற்காக மட்டும் அல்ல; அவள் கோபம் எதை முன்னிட்டு என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. மெதுவாக அவள் கையை வருடியபடி, “இங்கே பார்” என்றான்.

நந்தினி வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டாள். அவன் கை இப்போது அவள் இடுப்பின் மீது படிந்தது. அவள் அந்தக் கையைத் தள்ளிவிட்டு நகர்ந்து படுத்துக்கொண்டாள். சுதாகரின் உற்சாகம் முற்றிலுமாக வடிந்துவிட்டது.

“இப்படிக் கோச்சிண்டா எப்படி?” என்றான்.

“எனக்கென்ன கோவம்? உங்க மொதல் பொண்டாட்டிய கவனிக்கவே உங்களுக்கு நேரமில்ல. இதுல என்ன எப்டி கவனிக்க முடியும்? நா எந்தப் பொடவய கட்டிண்டா என்ன, எப்ப கட்டிண்டா என்ன?”

“ஃபஸ்ட் க்வார்ட்டர் கணக்கு முடிக்கற நேரம் நந்து. அக்கவுண்ட்ஸ் உட்பட மூணு டிபார்ட்மெண்ட்ஸ கோஆடினேட் பண்ற பொறுப்புல நா இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல எல்லாம் முடிஞ்சிடும்.”

நந்தினி அவனைப் பார்த்துத் திரும்பினாள். “ரெண்டு வருஷமா இதே எழவெடுத்த பதிலத்தான் கேட்டுண்ட்ருக்கேன். எதுக்கு ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்றீங்க?” என்றாள். ஆழமான ஆதங்கமும் பொறுமையின்மையும் அவள் குரலில் வெளிப்பட்டன. அவள் கண்கள் சிவந்து வீங்கியிருப்பது அந்த மங்கலான வெளிச்சத்திலும் தெரிந்தது. சுதாகர் கலங்கிப்போனான்.

“என்ன நந்து, இதுக்குப் போய் அழற” என்றபடி அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான். அவன் குரலும் தழுதழுத்தது. அவளைச் சற்று அசைத்திருக்க வேண்டும். இந்த முறை அவன் கைகளைத் தட்டிவிடவோ அவன் ஸ்பரிஸத்திலிருந்து விடுபடவோ அவள் யத்தனிக்கவில்லை. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, “இன்னிக்கு என்ன தேதி தெரியுமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இருபத்தி மூணு” என்றான். இந்த இருபத்தி மூன்றாம் தேதி சுதாகருக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தத் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டிய அறிக்கையின் அழுத்தம் கடந்த ஒரு மாதமாக அவன் மனத்தில் பெரும் சுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சொன்னபடி முடிக்க முடியாமல் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் பெற வேண்டியிருந்ததும் அந்த மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும் என்பதும் நினைவுக்கு வந்தது. இவனால் இந்த அறிக்கையை இந்தத் தேதிக்குள் சமர்ப்பிக்க முடியாது என்று இவன் பதவிக்குக் குறி வைத்துக்கொண்டிருக்கும் தீபக் மேத்தா எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. “ட்வென்டி தேர்டுக்குள்ள இவன் இன்னா புடுங்கிர்றான்னு நான் பாக்றேன்” என்று அவன் சொன்னது வேறொரு வாய் மூலம் இவன் காதுகளை எட்டியிருந்தது. வேற்று மொழிக்காரர்கள் எப்படி உள்ளூர்க் கெட்ட வார்த்தைகளை மட்டும் விரைவில் தெரிந்துகொண்டுவிடுகிறார்கள் என்ற ஆச்சரியத்துடன் இருபத்து மூன்று என்ற கெடுவை சவாலாக எடுத்துக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. ஆனால் சவாலில் வெற்றி கிடைக்கவில்லை. எம்.டி.யிடம் கெஞ்சி இன்னும் மூன்று நாள் அவகாசம் பெற வேண்டியதாயிற்று. அந்த மூன்று நாளில் சனி, ஞாயிறும் அடக்கம். ஆக, இந்த வாரமும் நந்தினியை எங்கும் கூட்டிக்கொண்டு போக முடியாது. சுதாகர் மிகவும் ஆயாசமடைந்தான்.

“இருபத்து மூணு என்ன விவேஷம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் நந்தினி.

எனக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ண இதுதான் டெட்லைன் என்ற வார்த்தைகள் இயல்பாக எழுந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தி உள்ளே அனுப்பிவிட்டு, “என்ன விசேஷம்?” என்று குழப்பத்துடன் கேட்டான் சுதாகர்.

“இந்தப் பொடவ எப்ப வாங்கினதுன்னு ஞாபகம் இருக்கா?”

நேராக விஷயத்துக்கு வராமல் ஏன் சுற்றி வளைக்கிறாள் என்ற எரிச்சலுடன், “இல்லயே. . .” என்றான்.

“எதுக்காக வாங்கினதுன்னாவது ஞாபகம் இருக்கா?”

சுதாகர் பொறுமையிழந்தான். “என்ன சொல்ல வர்றயோ அத நேரடியா சொல்லிடு நந்து” என்றான்.

பெரிய குமுறலுடன் நந்தினி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். சுதாகர் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான். அவள் தோள்களைப் பற்றி உலுக்கியபடி “என்ன நந்து, என்ன ஆச்சு?” என்று பதறினான்.

“இன்னிக்கு நமக்கு வெட்டிங் டே” என்று கேவல்களுக்கு மத்தியில் நந்தினி சொன்னாள். சுதாகரின் பிடி தளர்ந்தது.

கையால் நெற்றியில் அறைந்துகொண்டான். “மை காட். . .” என்ற வார்த்தைகள் அவன் அடி வயிற்றிலிருந்து புறப்பட்டு வந்தன. போன மாதம், இந்த 23ந் தேதி கெடு குறிக்கப்படுவதற்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை கஷ்டப்பட்டு நேரம் ஒதுக்கி இருவரும் கடைக்குப் போய் தங்களது இரண்டாவது திருமண நாளுக்கான உடைகளை வாங்கிக்கொண்டு, சினிமாவுக்குப் போய்விட்டு, பாலிமரில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியது நினைவுக்கு வந்தது. எல்லாம் போன வருடமோ அல்லது அதற்கு முந்திய வருடமோ நடந்தது போல மங்கலாக இருக்கிறது. திருமண நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றெல்லாம் பேசியதுகூட கலங்கலாக நினைவில் இருக்கிறது. நந்தினிக்குத் திருமண நாள், பிறந்த நாள் எல்லாம் மிக மிக முக்கியம். அவற்றைக் கொண்டாடாமல் இருப்பது பற்றி அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. போன வாரம்கூட திருமண நாளைக் கொண்டாடுவது பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது (என்ன சொன்னாள் என்பது சுத்தமாக நினைவில்லை). ஆனால் இப்போதெல்லாம் காலையில் அவள் எழுந்திருப்பதற்குள் சுதாகர் கிளம்பிப் போய்விடுகிறான். தொலைபேசியிலும் பேசிக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.

“நீ ஞாபகப்படுத்தியிருக்கலாமே நந்து” என்று பரிதாபமாகக் கேட்டான்.

“வெட்டிங் டேகூட உங்களுக்கு மறந்துபோகும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று அழுகைக்கு மத்தியில் சொன்னாள். இப்போது அவள் அழுகை விசும்பலாக மாறியிருந்தது. சுதாகர் அவள் கண்களைத் துடைத்துவிட்டு, “ஸாரி நந்து. நா ரொம்ப சொரணகெட்டத்தனமா நடந்துண்ட்டேன். . . ஸாரிம்மா. . . ரொம்ப ஸாரி . . . அழாத . . . ப்ளீஸ். . .” என்று கெஞ்சினான். ப்ளீஸ் என்ற வார்த்தையைச் சொல்லும் போது அவன் குரலும் உடைந்துபோனதை உணர்ந்த நந்தினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. கொஞ்ச நேரம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று அவன் மடியில் சரிந்தாள். தன் முகத்தை அவன் மடியில் புதைத்துக்கொண்டாள். இருவரும் எதுவும் பேசவில்லை. சுதாகரின் கை நந்தினியின் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து நந்தினி பேச ஆரம்பித்தாள்.

“ஆஃபீஸ்லேந்து லேட்டா வர்றதுகூட பரவாயில்லை சுதா, ஆனா இருபத்து நாலு மணி நேரமும் ஆஃபீஸ் நெனப்பாவே இருக்கணுமா? உங்களுக்குன்னு ஒரு லைஃப் இல்லையா?” இப்போது அவள் குரல் சற்றுத் தெளிவாக இருந்தது. அவள் பொறுமையாகக் கேட்டது ஆறுதலாக இருந்தது. இதுபோன்ற மனநிலையில் இருக்கும்போதுதான் உரையாடல் சாத்தியம் என்பதால் இப்போது அவளக்குத் தன் நிலையை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். அவன் கை இப்போது அவள் முதுகைத் தடவிக் கொண்டிருந்தது.

“இப்பல்லாம் ஆஃபிஸ் வேலன்றது வெறும் உடம்ப மட்டும் பிழியற வேல இல்ல நந்து. சொல்லப்போனா உடம்புக்கு அதிக சிரமமே இல்ல. எல்லாம் மனசுக்கும் மூளைக்கும்தான். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப அலர்ட்டா இருக்கணும். இல்லன்னா கோட்டை விட்ருவோம். போட்டி கம்பெனிக்காரன் நம்மள தூக்கிச் சாப்டுருவான். தோக்கக் கூடாது. சறுக்கக் கூடாது. சறுக்கினா ஆஃபீஸ்ல நமக்கு மேல இருக்கறவன் நம்மள ஒரு மாதிரி நடத்துவான். நாம கொஞ்சம் குனிஞ்சா நமக்குக் கீழே இருக்கறவன் முதுகு மேல கால வெச்சு ஏறி நம்மத் தாண்டிப் போயிடுவான். கொஞ்சம்கூட ரிலாக்ஸ் பண்ண முடியாது. ரிலாக்ஸ் பண்ணக் கூடாது.”

“இவ்ளோ கஷ்டப்பட்டு என்னத்த சாதிக்கப் போறோம்?”

“தோ. .  இந்த வீடு வாங்கியிருக்கேனே. முப்பது வயசுக்குள்ள நானா சாம்பாதிச்சு வாங்கின வீடு இது. எங்கப்பாவாலயோ உங்கப்பாவாலயோ நெனச்சுப் பாக்க முடியாத விஷயம் இது. பெட் ரூம்ல நமக்கு ஏ.சி. தேவப்படுது. வீக் எண்ட்ல வெளிய போக கார் தேவப்படுது. புதுசா நகைல ஒரு டிசைன் வந்தா வாங்கத் தோணுது. ட்ரெஸ்ல புதுசா ஒரு ஃபாஷன் வந்தா வாங்காம இருக்க முடியல. இதெல்லாம் எங்கேந்து வரும் நந்து? ஆஃபீஸ். இந்த ஆஃபீஸ்தானே எல்லாத்துக்கும் ஆதாரம்? இத வெச்சுதானே எல்லா ப்ளானும் பண்றோம்?”

“எல்லாமே ரொம்ப காஸ்ட்லின்னு படுது சுதா.”

“எல்லாத்துக்குமே ஒரு வெல இருக்கு நந்து.”

நந்தினி திரும்பிப் படுத்துக்கொண்டாள். பெருமூச்சு விட்டதில் அவள் மார்பு உயர்ந்து தாழ்ந்தது. சுதாகரின் கை இயல்பாக அவள் மார்பை நாடிற்று. நந்தினி அந்தக் கையைப் பிடித்து மார்போடு அழுத்திக்கொண்டாள். அவள் பார்வை பல்பின் மீது நிலைகுத்தியிருந்தது. அவள் வார்த்தைகள் மிக மெதுவாக வெளிவந்தன.

“சின்ன வயசுல நாங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம் சுதா. ஆனா தினமும் ராத்ரி வீட்ல எல்லாரும் சேந்து சாப்டுவோம். ஒரே கும்மாளமா இருக்கும். சிரிப்பு சத்தம் கேட்டுண்டே இருக்கும். இங்க நாம ரெண்டே பேர்தான் இருக்கோம். நாம சேந்து சாப்ட்டு பல நாள் ஆச்சு. சேந்து சிரிச்சு பல நாள் ஆச்சு.”

“எல்லாம் கொஞ்ச நாள்தான் நந்து. எனக்கு பிரமோஷன் கெடச்சிட்டா இதுல பாதி டென்ஷன் போயிடும்.”

நந்தினி விரக்தியாகச் சிரித்தாள். “ரெண்டு வருஷமா கேக்கற பல்லவிதான இது?” என்றாள். சுதாகர் பதில் பேசவில்லை. நந்தினி தொடர்ந்து பேசினாள். “நீங்க புக் ஷெல்ஃப் பக்கம் போய் எவ்வளவு நாளாச்சு ஞாபகமிருக்கா?” சுதாகர் பதில் சொல்லவில்லை. உண்மைதான். எவ்வளவோ செலவு செய்து தேடித் தேடி வாங்கிய புத்தகங்கள். நந்தினி அதோடு விடவில்லை. “அம்மாவைப் பார்க்கப் போய் எத்தனை மாசமாச்சு?” என்றாள்.

அடுத்தடுத்து தனது குற்ற உணர்ச்சியைக் கிளறிக்கொண்டிருக்கும் நந்தினியைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சுதாகர். மங்கலான ஒளியில் சற்றே அலங்கோலமான உடையில் தன் மடியில் மல்லாந்து படுத்திருந்த அவளது தோற்றம் சுதாகரைக் கிளர்ச்சியடைய வைத்துக் கொண்டிருந்தது. கிளர்ச்சி குற்ற உணர்ச்சியை வென்று கொண்டிருந்தது. அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. மெதுவாகக் கீழே குனிந்து அவள் உதட்டின் மேல் முத்தமிட்டான். “வெட்டிங் டே கிஃப்ட்” என்றான். நந்தினி சிரித்தாள். அவன் கழுத்தைப் பிடித்து இழுத்தாள். பேச்சு அவர்களை விட்டுப் பிரிந்தது. பேச்சின் சாரமும் மறந்தது. வெகு சீக்கிரமே அவர்கள் வெறும் உடல்களாக மாறினார்கள். உடல்கள் தங்களது பிரத்யேக மொழியில் பேசிக்கொண்டன. தன் மன இறுக்கமெல்லாம் வெளிப்பட்டு உடல் முழுவதும் பரவியிருப்பதை சுதாகர் உணர்ந்தான். உடலின் இறுக்கம் - வில்லில் ஏற்பட்ட நாண்போல விண்ணென்று முறுக்கேறி நிற்கும் அதன் தன்மை - கூடக்கூட மனம் லேசாவதை உணர்ந்தான். மனம், புத்தி எல்லாவற்றையும் துறந்து உடல் மட்டுமேயாக மாறி நிற்கும் இந்தத் தருணம் அவனுக்குப் பேரானந்த அனுபவமாகத் தோன்றியது. உடலின் தன்னிச்சையான செயல்பாட்டில் நிகழ்ந்த வேகமான அசைவொன்றின் போது தன் கால் எதன் மீதோ பலமாகத் தட்டியதை உணர்ந்தான். அதை உணர்ந்த மாத்திரத்தில் மனமும் மூளையும் விழித்துக்கொண்டன. காலில் பட்டது லேப்-டாப் கம்ப்யூட்டர் என்பது மூளைக்கு உறைத்தது. வான்வெளியில் திடீரென்று சிறகுகள் வேரோடு அறுக்கப்பட்ட பறவை போல சுதாகர் வேகமாகத் தரையில் மோதி விழுந்தான். உடல் குளிர்ந்து தளர்ந்தது.

இரவு குளித்துவிட்டு லேப்-டாப்பைத் தூக்கிக்கொண்டு உட்கார வேண்டும் என்ற திட்டத்தை மறந்துவிட்டோமே என்ற எண்ணம் முதலில் தோன்றியது. இன்னும் மூன்று நாட்களில் முடித்தாக வேண்டிய வேலையின் கணிசமான பகுதியை இன்று இரவு முடிக்க வேண்டும் என்று மேற் கொண்ட உறுதி அதன் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தது. நாளை பகலில் வேறொரு கூட்டம் இருக்கிறது. இதில் உட்கார முடியாது. கூட்டம் இருக்கிறது என்று எம்.டியிடம் சொல்ல முடியாது. கூட்டத்தையும் தவிர்க்க முடியாது. இன்று இரவு விட்டுவிட்டால் ஒரு நாள் போய்விடும். மூன்று நாள் அவகாசமே மிகவும் குறைவு. அதிலும் ஒரு நாள் போய்விட்டால் நிச்சயம் முடிக்க முடியாது. மறுபடியும் தோல்வி. மறுபடியும் அவமானம். தலைக்குனிவு. அற்ப ஜந்துவைப் பார்ப்பது போன்ற எம்.டி.யின் பார்வையைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் தீபக் மேத்தாவின் இளக்காரமான சிரிப்பைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. மூன்று நாளில் வேலை முடியாவிட்டால் இந்தப் பொறுப்பு அவனுக்குப் போகும். அவன் ஒண்டிக்கட்டை. இராப்பகலாக உட்கார்ந்து முடித்துவிடுவான். அதன் பிறகு அடுத்த ஏப்ரலில் அவன் எனக்கு சமமாக வந்துவிடுவான். சமமாக வந்து விட்டால் பிறகு தாண்டிச் செல்வது சாத்தியமாகிவிடும். அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

திடீரென்று அவன் உடலும் அதன் இயக்கமும் தளர்வதைக் கண்டு நந்தினி குழப்பமடைந்தாள். தன் மேல் படுத்திருந்த அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் உடலை மறுபடியும் பேசவைக்க முயன்றாள். ஆனால் அவன் உடல்மொழி மாறிவிட்டிருந்ததைத் தெளிவாக உணர்ந்தாள். ஆயினும் இழப்பின் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த இழப்பை எப்படியாவது தவிர்க்க, பரிதவிப்போடு சில முயற்சிகள் செய்து பார்த்தாள். அந்த முயற்சிகளின் வியர்த்தத்தை உணர்ந்தபோது மனத்தில் கசப்பும் வெறுப்பும் பொங்கி எழ ஆரம்பித்தன. அவள் கை சுதாகரைத் தன் மேலிருந்து சரித்தது.

தன் உடல் விடுபட்டதும் சுதாகர் லேப்-டாப்பைப் பத்திரமாக எடுத்து வைக்க யத்தனித்தான். அவன் கை லேப்-டாப்பை நாடுவதைக் கண்ட நந்தினியின் மனத்தில் புயல் மூண்டது. அவளது ஆவேசம் கால் வழியாக வெளிப்பட்டது. அவள் கால் வேகமாக லேப்-டாப்பை நோக்கிச் சீறுவதைப் பார்த்த சுதாகர் தாவி எழுந்து லேப்-டாப்பை வாரி எடுத்துக்கொண்டான். உதை அவன் இடுப்பில் விழுந்தது. உடலில் பொட்டுத் துணி இல்லாமல் லேப்-டாப் கம்ப்யூட்டரை அணைத்தபடி, தன் மனைவியின் ஆடையற்ற காலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்தியா டுடே இலக்கிய மலர், 2001