Friday, March 25, 2016

தப்பிப் பிழைத்த இந்திய அணி

பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு மகேந்திர சிங் தோனி ஓடும்போது அரங்கிற்குள்ளும் வெளியிலும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் மானசீ கமாக அவருடன் ஓடியிருப்பார்கள். தோனி ஸ்டெம்பைச் சாய்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இதயம் பலவீனமான பலர் மாத்தி ரையோ சிகிச்சையோ எடுத்துக்கொண்டி ருக்கவும் கூடும். புதிதாகச் சிலருக்கு ரத்தக் கொதிப்பு வந்திருக்கலாம். இப்படி ஒரு முடிவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று கிரிக்கெட்டின் காதலர்கள் பலர் நினைத்திருப்பார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை என்று சொல்வார்கள். அதுதான் புதன்கிழமை பெங்களூருவில் நடந்தது. எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டுக் கடைசிக் கணத்தில் மீட்டெடுத்தது. எளிய சவாலை இமாலய முயற்சி எடுத்துச் சாதித்தது. அதுவும் எதிரணியின் அபத்தமான தவறினால். கடைசி ஓவரைப் போட்ட ஹர்திக் பாண்டியா தேவையான 11 ரன்களில் 9 ரன்களை முதல் 3 பந்துகளிலேயே கொடுத்து எதிரணியை ஆசுவாசப்படுத்தினார். இந்திய அணியினரும் இந்திய ஆதரவாளர்களும் பதற்றத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.
 
வங்கதேசம் செய்த தவறு

இன்னும் 3 பந்துகளில் 2 ரன். ஏற்கெனவே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த முஷ்பிகுர் ரஹீம் இன்னும் 2 ரன்களைப் பதற்றமில்லாமல் எடுத்திருக்கலாம். இதே 2007 உலகக் கோப்பையில் மார்ச் 23-ம் தேதியன்று வங்கதேசம் இந்தியாவை வெளியேற்றியது. அதேபோல் இந்த மார்ச் 23-லிலும் செய்திருக்கலாம். பாண்டி யாவின் அடுத்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப நினைத்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். அளவு குறைவாகவும் சற்றே மெதுவாகவும் வந்த அந்தப் பந்தை அவரால் எல்லைக் கோட்டுக்கு அனுப்ப முடியவில்லை. அது கேட்சாக மாறியது. ஜஸ்ப்ரித் பும்ராவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் எளிய கேட்சுகளைக் கோட்டைவிட்டது போல ஷிகர் தவண் விடவில்லை.

அடுத்த பந்தை எதிர்கொண்ட மொஹமதுல்லா, முஷ்ஃபிகுர் செய்த தவறையே தானும் செய்தார். அவருக்கும் ஆறு அல்லது நான்கு அடித்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை போலும். பந்தைத் தூக்கி அடித்தார். இந்த முறை ஜடேஜா பந்தை ஏந்திக்கொண்டார். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள். பாண்டியா அருமையாக வீசினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்து. ஷுவாகதா ஹோம் மட்டையைக் காற்றில் வீச, பந்து தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ஷுவாகதா ரன் எடுக்க ஓட, தோனி பந்தை வீசி எறியாமல் அசுர வேகத்தில் ஓடி வந்து ஸ்டெம்பைச் சாய்த்தார். வங்க தேசத்தவரின் மனங்களும் சாய்ந்தன. ஒருவழியாக இந்தியா வென்றது. அரை இறுதி செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வென்றிருக்க வேண்டிய போட்டியே அல்ல இது. ஐ.சி.சி. தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு அணி 10-ம் இடத்தில் இருக்கும் அணியிடம் இவ்வளவு போராடி வெல்வது அதன் வலிமைக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய அணி தன் திறனில் பாதியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பதே யதார்த்தம். 

இப்படிச் சொல்வது வங்கதேசத்தைக் குறைத்துச் சொல்வதாக ஆகாது. கச்சிதமான பந்து வீச்சு, கூர்மையான தடுப்பரண், அச்சமற்ற மட்டை வீச்சு ஆகியவற்றுடன் வங்கதேசம் அற்புதமாகப் போராடியது. கடைசி மூன்று பந்துகளில் கொஞ்சம் பக்குவமாக ஆடியிருந்தால் அணி வென்றிருக்கும். அதன் கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பொருத்தமான பரிசாக அது இருந்திருக்கும். இந்தியா போட்டியை வென்றது. வங்கதேசம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
 
சொதப்பிய மட்டைகள்

இந்தியாவின் நிகர ரன் விகிதம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்துட னான ஆட்டத்தில் ரன் விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்ன தோனி, அணியின் அதிரடி மட்டையாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டிக்கு முன் வெளிப்படையாகவே கூறினார். அணியில் சிலர் தடுமாறிவந்தாலும் எந்த மாற்றமுமின்றி அதே அணியைக் களமிறக்கியது இந்தியா. ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் முதல் 6 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன் என்னும் விகிதத்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் சர்மா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரின் முடிவில் தவண் நடையைக் கட்டினார்.

அதன் பிறகு இன்னிங்ஸின் வேகம் குறைய ஆரம்பித்தது. 23 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அடித்த 30 ரன்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. தோனி, யுவராஜ் சிங், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. தோனி சொன்ன அந்த அதிரடி மட்டையாளர்கள் எங்கே என்று தேட வேண்டியிருந்தது.

இந்தியா அதிக ரன் எடுக்க முடியாததற்கு அதன் மட்டையாளர்களின் தயக்கமும் தவறுகளும் மட்டும் காரணமல்ல. வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக ஷாகிப் அல் ஹஸன் 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தடுப்பு அரண் வலுவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் கள வியூகமும் தடுப்பாளர்களின் முனைப்பும் சிறப்பாக இருந்தன. இன்னும் குறைந்தது 20 ரன் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை மட்டையாளர்களின் தவறும் எதிரணியின் கூர்மையும் சேர்ந்து குலைத்தன.
 
நழுவ விடப்பட்ட வாய்ப்புகள்

146 ரன்களைக் காப்பாற்றும் முயற்சி யில் இந்தியா தொடக்கத்திலிருந்தே சொதப்ப ஆரம்பித்தது. ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த எடுப்பில் கால் திசையில் பந்து வீச, தமிம் இக்பால் அதை ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். கைக்கு வந்த பந்தை நழுவவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுண்டரியைப் பரிசளித்தார். அதன் பிறகும் தடுப்பாளர்கள் நிறைய சொதப்பினார்கள். நெஹ்ரா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆளுக்கு ஒரு கேட்சை நழுவ விட்டார்கள். துடிப்புடன் ஆடிய வங்கதேசம் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ஆடும்போது மட்டைக்கு வராமல் சண்டித்தனம் செய்த பந்து வங்கதேச மட்டையாளர்கள் ஆடும்போது சமர்த்தாக நடந்துகொண்டது. ஷாகிப், சபிர் ரஹ்மான் ஆகியோர் அனாயாசமாக அடித்த ஷாட்டுகள் இதற்குச் சான்று.

அவ்வப்போது விக்கெட்களும் விழுந்துகொண்டிருந்ததால் இந்தியாவின் நம்பிக்கையும் உயிர்ப்போடு இருந்தது. அஸ்வினின் அருமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்) இந்தியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது என்றும் சொல்லலாம். பும்ரா 19-வது ஓவரை நன்றாக வீசினார். 2 ஓவர்களில் 17 ரன்கள் என்னும் நிலையில் 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

கடைசி ஓவரை வீசிய பாண்டியாவுக்கு தோனி, கோலி, நெஹ்ரா உள்ளிட்டோர் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். என்றாலும் நெருக்கடி பாண்டியாவைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இலக்கில்லாமல் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். நான்காவது பந்து அளவு குறைவான, சற்றே மெதுவாக வந்த பந்து. அதை புல் ஷாட் அடித்த முஷ்பிகுர் ரஹீம் பிடி கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடிக்க முயன்ற மொஹமதுல்லாவும் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் முஸ்தாஃபிஸுர் ரன் அவுட் ஆக, ஒரு ரன்னில் இந்தியா வென்றது.
நான்காவது அல்லது ஐந்தாவது பந்தை மட்டையாளர் தூக்கி அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும். தேவைப்படும் ரன் 2 என்னும்போது சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் முனைப்பே வங்கதேசத்தைக் காவு வாங்கியது. பல தவறுகளும் செய்த இந்தியா தப்பிப் பிழைத்தது. ரன் விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியைக் காலிறுதிப் போட்டிபோல எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

வெற்றியிலும் தோல்வியிலும் கிடைக் கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய அணி தன் நெருக்கடி யைத் தானே உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. அணியிலோ ஆடும் முறை யிலோ மாற்றம் எதுவும் இல்லையென்றால் பெங்களூருவில் கிடைத்த அதிருஷ்டம் இந்தியாவுக்குப் பலனில்லாமல் போகலாம்.

No comments:

Post a Comment