Monday, November 2, 2015

லா.ச.ரா. என்னும் அபூர்வ ராகம்

படம்: நன்றி தளவாய் சுந்தரம்
நவீன தமிழ் எழுத்து பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. கேளிக்கையை முதன்மைப்படுத்தாத எந்த வெளிப்பாடும் சிறிய குழுவுக்குள் மட்டுமே புழங்குவது தவிர்க்க இயலாததுதான் என்பதால் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நவீன எழுத்தின் சில பகுதிகள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒன்றாகவே லா..ரா. அடையாளம் காணப்படுகிறார். சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? “கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலிஎன்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் சாதாரண வாசகருக்கு எப்படி இருக்கும்? “கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறதுஎன்று சொன்னால் அதை அவர் ப்படிப் புரிந்துகொள்வார்? கேளிக்கை சார்ந்த எழுத்தின் இலகுத்தன்மைக்குப் பழகிப்போன வாசிப்புக்கு இதுபோன்ற சொற்பிரயோகங்களும் வாக்கியங்களும் ஆயாசமூட்டத்தான் செய்யும்.

ஆனால் இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா..ரா.வைப் புரியாமலும் பலரைப் படிக்கவைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பு தன் அழகால் கவர்வதுபோல, கடலைலைகளும் காட்டருவியும் பள்ளத்தாக்குகளும் அச்சத்தை மீறி மலைக்கவைப்பதுபோல லா..ரா.வின் எழுத்தும் அதன் புரியாமையை மீறிப் பலரையும் ஈர்க்கிறது

லா.ச.ரா. மீதான படிமங்கள்

சில படிமங்கள் அழியாமல் ஒட்டிக்கொள்ளும். லா..ரா. சௌந்தர்ய உபாசகர், லா..ரா. புரியாத எழுத்தாளர், லா..ரா., நனைவோடை உத்தியில் கதை சொல்பவர் போன்ற படிமங்களும் அப்படித்தான். இவை அனைத்துமே சரிதான். ஆனால் இவை மட்டுமல்ல லா..ரா. கிட்டத்தட்ட 200 சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொடர்கள் என இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா..ரா.வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப்படைத் தமிழ் அறிவு கொண்ட எவரும் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும்பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக்கூடியவை. ரசித்துப் படிக்கக்கூடியவை. “இது இருளின் நரம்பு. எண்ணத்தின் மணிக்கயிறு. வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடுஎன்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொவதைவிடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம். புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக்கொள்ளும் மாயமே லா..ரா.வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள் ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால் லா..ரா.வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.  

கதை தரும் அனுபவங்கள்

மலையுச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். ஆவேசம் கொண்ட காட்டருவி, தெள்ளிய ஓடை, சலசலக்கும் ஆறு என அது செல்லும் இடத்திற்கேற்ப அதன் தன்மையும் வேகமும் தோற்றமும் மாறும்.  அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா..ரா.வின் எழுத்தும் அத்தகையதுதான். குறிப்பிட்ட எந்த வகைமைக்குள்ளும் அடக்க முடியாது. நனவோடை உத்தி என்று சிலர் சொல்வார்கள். ஆனால் புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். மிஸ்டிக் எனப்படும் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கதையாக்குபவர் என்று சொல்லலாம் என்று பார்த்தால் வலுவான தர்க்கம் அவரது பல படைப்புகளில் அடிச் சரடாக ஓடிக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஆராதகர் என்று சொல்லச் சிலர் முனைந்தால் குடும்பத்திலிருந்து முரண்படும் தனி நபர் உணர்வை முன்னிறுத்தும் கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். பிராமணக் குடும்பங்களைப் பற்றியே மிகுதியும் எழுதினார் என்றாலும் பிற சாதி, மதத்தவரைப் பற்றிய சித்தரிப்பிலும் வலுவாகவே வெளிப்பட்டார்சௌந்தர்ய உபாசகர் என்று சொல்லலாம். ஆனால் வேதனைகளின் கதையையும் இவர் எழுதிவைத்திருக்கிறார். அன்பின் உன்னதம் பேசும் இவர் சுயநலத்தின் தவிர்க்கவியலாத் தன்மையையும் அனாயாசமாகக் காட்டிவிடுகிறார். பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்க்கிறார். அதேசமயம் பெண்களின் சுயநலத்தையும் வன்மத்தையும் கண்டு பாராமுகமாக இருப்பதில்லை.

லா..ரா.வுக்குக் கதை என்பது அவரது தேடலின் கருவிதான். கதையம்சம் என்பதைவிடவும் கதையின் வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர் பாணி. மனித உணர்வுகள் அவருக்கு மிக மிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். கூந்தலில் தன் சுயத்தைக் கண்டுணரும் ஒரு பெண்ணின் வீம்பு அந்தக் கூந்தலுக்காகவே உயிர் துறக்கும் அளவுக்குப் போகிறது. குறிப்பிட்ட சில தருணங்களில் வாழ்வின் ரகசியம் தன் தரிசனத்தைக் காட்டும் என்று நம்பும் லா..ரா.வின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, படுக்கையறை என எல்லா இடங்களிலும் இந்த உண்மையின் தரிசனத்தைக் காண்கிறார்கள். புலன் சார் அனுபவங்களோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதைத் தீர்மானமாக நம்பும் ராமாமிர்தம், புலன்களைத் தாண்டிய அனுபங்களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங்களையும் மிக நெருக்கமாகக் கண்டு நமக்கும் காட்டுகிறார்.

இந்த வேட்கையில் கதையம்சமும் கதையின் கட்டமைப்பும் பின்னுக்குப் போய் தரிசனத்தைக் கண்டுணரும் சத்திய வேட்கையே படைப்பாக மாறுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் வழமையான கதை கூறும் போக்கிலிருந்து இயல்பாகத் தன்னை விடுவித்துக்கொண்டு தன் தேடலின் பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறார். குடும்ப உறவுகள், மனித விழுமியங்கள், தெய்விகம் ஆகியவற்றைப் பற்றி எழுதத் தொடங்கும் இவர் இந்த ஆதார முடிச்சுகளை மீறிக் கதை செல்லும்போது படைப்பின் போக்குக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அதைப் பின்தொடர்ந்து செல்கிறார். கச்சிதமான கட்டமைப்பு கொண்ட யதார்த்தமான பச்சைக் கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர் பல சமயங்களில் படைப்பின் கட்டற்ற போக்கிற்கு வழிவிட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.

தரிசனங்கள்

லா..ரா.வைப் பொறுத்தவரை எழுத்து என்பது தொழில்நுட்பம் அல்ல. அதில் எந்த அமைப்புக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய கடப்பாடு எதையும் இவர் தனக்கு விதித்துக்கொவதில்லை. ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர். அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின்தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால் கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். வாழ்வின் மகத்தான தருணங்களை அடையாளம் காட்டும். ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர் ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சம், புரிந்துகொள்ளுதல், கதை தரும் செய்தி என்னும் எல்லைகளைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளி மேற்கொள்ளும் பயணத்துக்கு இணையான பயணமாகிப் படைப்பின் தரிசனத்தை விரிவுபடுத்துகிறது.

காமம் என்பதை மனிதத் தேடலின் ஆதார வடிவமாகக் காண்பவர் லா..ரா. ஆன்மிகத் தேடலையும் காம வேட்கையோடு இணைத்துப் பார்க்கும் துணிச்சல் அவருக்கு உண்டு. எத்தகைய கதையிலும் அபூர்வமானதொரு அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது லா..ரா.வின் சிறப்புக்களில் ஒன்று. பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய கதைகள் அழகியலும் வாழ்வனுபவமும் தத்துவ தரிசனமும் கூடி முயங்கும் படைப்புத் திறனின் சிறப்பான வெளிப்பாடுகள்.

சொல்லின் அழகும் வலிமையும்

லா..ரா.வின் சொல்லழகையும் சொல்லின் வலிமையையும் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிய எந்தப் பேச்சும் நிறைவுபெறாது. “உன் எழுத்துத் திமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால் அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்என்று ஒருமுறை எழுதிய லா..ரா. தன் கதைகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். “வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா..ரா.” என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.

லா..ரா. கவிதை எழுதியதில்லை. ஆனால் அவரது படைப்ப்புகளில் இருக்கும் கவித்துவப் படிமங்கள் நவீன கவிஞர்கள் எவருடனும் ஒப்பிட்டுப் பேசப்படக்கூடியவை. இவர் வாழ்க்கையையும் அதன் அனுபவங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் அழகுணர்ச்சியும் தத்துவப் பார்வையும் கலந்திருப்பதால் இவரது வெளிப்பாடுகளும் அப்படி ஆகிவிடுகின்றன. “கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்என்னும் வாக்கியங்கள் தரும் படிமங்களில் லா..ரா.வின் சொல்லழகு மட்டுமின்றி அவருக்கே உரித்தான தரிசனமும் இணைந்திருப்பதை உணரலாம்.

சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் என்று லா..ரா.வின் கதைகளை ஒருவாறாக வரையறுக்கலாம். பாற்கடல், கஸ்தூரி போன்ற யதார்த்த வாழ்க்கைச் சித்திரங்கள்; புரிந்துகொள்ள முடியாத ஆளுமை விசேஷங்களை மையப்படுத்தும் அபூர்வ ராகம், தாட்சாயணி போன்ற சொல்லோவியங்கள்; யோகம், புற்று போன்ற கால, இட எல்லைகளை மீறி வெளிப்படும் தரிசனங்ககள் எனப் பல தளங்களில் பல பாதைகளில் பயணிப்பவை லா..ரா.வின் கதைகள். உறவுகளின் மேன்மையையும், அவற்றின் சிக்கல்களையும், இணைந்து வாழும் விழைவையும், பிரிந்து செல்லும் வேட்கையையும், தனிமையின் சுமையையும் அதன் மகத்துவத்தையும் பேசுபவை இவரது கதைகள். மரபில், மரபின் விழுமியங்களில் அழுந்தக் காலூன்றி நிற்பவை இவரது கதைகள். அவற்றையும் தனக்கே உரிய பார்வையுடன் ஊடுருவிப் புதிய தரிசனங்களையும் அனுபவங்களையும் சாத்தியப்படுத்துகிறார்.  

கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும் ராமாமிர்தத்தின் எழுத்தில் அதிக அழுத்தம் பெறுகின்றன. அந்தத் தருணங்களில் தோய்ந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது அவரது எழுத்து. படைப்புகளில் அனுபவிக்கக் கிடைக்கும் மாயத் தருணங்களுக்காகவும் அவை முன்வைக்கப்படும் கவித்துவச் சொல்லழகின் வசீகரத்துக்காகவுமே இவரது கதைகள் என்றென்றும் படிக்கப்படும். சம கால யதார்த்த வாழ்வில் வேரூன்றிய கதைகள் பல சமயம் கால வெள்ளத்தில் நிற்காமல் போய்விடலாம். ஆனால், காலம், இடம் ஆகியவற்றைத் தாண்டிய தருணங்களைப் படைப்பாக்கும் எழுத்து காலம் தாண்டியும் வாழும். லா..ரா.வின் எழுத்து காலம், இடம் ஆகியவற்றை மட்டுமல்லாமல், புலன்களை மீறிய அனுபவங்களையும் சாத்தியப்படுத்துபவை. அதனாலேயே அவர் தரும் மந்திரத் தருணங்கள் நித்தியத்தன்மை பெற்றிருக்கின்றன.

அபூர்வ ராகம் கதையை இப்படித் தொடங்குகிறார்:வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.

லா..ரா.வும் இந்தப் பெண்ணைப் போலத்தான். இலக்கிய உலகில் முன்னும் பின்னும் யாருமற்ற அபூர்வ ராகம்.


(2014ஆம் ஆண்டில் லா.ச.ரா.வின் பிறந்த நாளை ஒட்டி தி இந்து (தமிழ்) நாளிதழில் எழுதப்பட்ட கட்டுரையின் விரிவான வடிவம்.) 

No comments:

Post a Comment