Wednesday, January 13, 2010

சச்சின் 20 ஒரு தலைமுறையின் கனவு

கிரிக்கெட் வாழ்வில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரிடம் அப்படி என்ன சிறப்பு? அவர் ஏன் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுகிறார்? ஆட்ட நுணுக்கங்கள் அதிகம் தெரியாத சாமானிய மக்கள் மட்டுமல்ல, ஆழமான கிரிக்கெட் அறிவு கொண்ட பீட்டர் ரூபோக் போன்ற விமர்சகர்கள், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், ஸ்டீவ் வா, வாசிம் அக்ரம் போன்ற சம காலத்துத் திறமையாளர்கள் ஆகியோரும் அவரை ஆராதிக்கிறார்கள். டெண்டுல்கரைப் போல இன்னொருவர் பிறப்பது அரிது என்கிறார் உலகிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்திய முத்தையா முரளீதரன்.

அப்படி என்ன சிறப்பு அவரிடம்? அவர் அடித்த சதங்களா? குவித்த ரன்களா? பெற்றுத் தந்த வெற்றிகளா? வென்ற ஆட்ட நாயகன் விருதுகளா? இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவதா? எத்தனையோ விழுப்புண்களைத் தாண்டித் தன் உடல் திறனைப் பேணிவருவதா? காலத்துக்கும் காயங்களுக்கும் மதிப்புக் கொடுத்துத் தன் பேட்டிங் முறையில் நுட்பமான மாற்றங்களைச் செய்துவருவதா? இன்றைக்கும் பந்து வீச்சாளர்களின் பிரதான சவாலாக இருப்பதா? இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதா? கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கும் ஆராதனைக்கும் உரியவராக இருப்பதா? வீரேந்திர சேவக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்ற புதிய நட்சத்திரங்கள் மத்தியில் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பதா? ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற மூத்த வீரர்களும் மதிக்கும் அளவில் ஆடிவருவதா? இவ்வளவு திறமை இருந்தும் தன்னடக்கத்தின் வடிவமாகத் திகழுவதா?

இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம். சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 16 வயதில் வாயில் அடிபட்டுப் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டிய பிறகும் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களை உறுதியுடன் எதிர்கொண்டு இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியவர் சச்சின். அதற்குச் சில மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் சொற்ப ரன்னுக்கு மூன்று விக்கெட்கள் விழுந்த நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்தின் வலுவான பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடிச் சதம் அடித்து இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டவர்.

இன்னும் பல சம்பவங்களைச் சொல்லலாம். ஷார்ஜாவில் மணல் புயலுக்கு நடுவில் பிரகாசித்த சம்பவத்தை நினைவுகூரலாம். இந்தப் பையன் ஆடுவதைப் பார்க்கும்போது நானே ஆடுவதுபோல இருக்கிறது என்று கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேன் கூறியதைச் சுட்டிக்காட்டலாம். உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னைத் துவம்சம் செய்ததைக் காவியமாகப் பாடலாம்.

சிறந்த ஆட்டக்காரர்கள் எல்லோரது வாழ்விலும் இதுபோன்ற கதைகள் இருக்கும். சச்சினின் சிறப்பு என்னவென்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை நெடுகிலும் இத்தகைய கதைகள் நிரம்பியிருப்பதுதான். தன் ஆட்ட வாழ்வின் பெரும் பகுதியில் அவ்வளவு வலுவில்லாத ஒரு அணியின் உறுப்பினராக இருந்து ஆடும் நிலை சச்சினுக்கு வாய்த்ததுபோல வேறு யாருக்கும் வாய்த்ததில்லை. மார்க் வா, இன்சமாம் உல் ஹக், ரிக்கி பாண்டிங், ஆகியோர் சிறந்த பந்து வீச்சு என்னும் பக்க பலத்தோடு களம் இறங்கினார்கள். பிரயன் லாராவின் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரது அணியின் பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால் முதல் பத்து ஆண்டுகளில் வால்ஷ், அம்புரோஸ், போன்ற சிறந்த வீச்சாளர்கள் இருந்தார்கள். அந்த வாய்ப்பு சச்சினுக்குப் பெரும்பாலும் கிடைக்கவில்லை. அது அவர் சுமையை இன்னமும் கூட்டியது.

பந்து வீச்சில் மட்டுமின்றி, மட்டையிலும் இந்தியாவின் வலிமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 2000ஆவது ஆண்டுக்குப் பிறகுதான் லட்சுமணன், திராவிட், சேவாக் போன்றோர் அவரது சுமையைக் குறைத்தார்கள். அதுவரை இந்தியாவை சச்சின் என்னும் ஒரு நபர் கொண்ட படை என்று சற்றே மிகைப்படுத்திச் சொல்லிவிடலாம். “சச்சினை அவுட் ஆக்கிவிட்டால் மேட்சை வென்றுவிடலாம் என்பதே எங்கள் கணக்கு” என்று வாசிம் அக்ரம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இன்றும்கூட எல்லாப் பந்து வீச்சாளர்களும் பிரதானமாகக் குறிவைப்பது சச்சினின் விக்கெட்டுக்குத்தான்.

நெருக்கடி, எதிர்பார்ப்பு, திறமையான எதிரணி ஆகியவற்றுக்கு மத்தியில் ஆடிப் பழகிய சச்சினுக்கு சவால்கள் அதோடு முடிந்துவிடவில்லை. காலில், முதுகில், முழங்கையில், தோள் பட்டையில் என்று அடுக்கடுக்காய்க் காயங்கள். பெரும் பொறுப்பைச் சுமந்து போராடியதன் அடையாளங்களாகப் பல விழுப்புண்கள். வேறொருவராக இருந்திருந்தால் எப்போதோ காணாமல் போயிருக்கக்கூடிய நெருக்கடிகள் இவை. ஆனால் சச்சின் இவற்றையும் தாண்டிவந்தார். ஒவ்வொரு காயத்துக்குப் பிறகும் புதிய உத்வேகத்துடன் மீண்டு வந்தார். ஆட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்துகொண்டு தொடர்ந்து சீராக ஆடிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றிய விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. இன்னும் அவர் டெஸ்ட் போட்டிகளில் போதிய அளவு சதிக்கவில்லை. பாண்டிங், லாரா, இன்சமாம் அளவுக்கு அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித் தரவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில், குறிப்பாக, சேஸிங் செய்யும்போது, அவரது மட்டை அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை என்றெல்லாம் குற்றம் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன நெருக்கடிகளின் பின்னணியில் பார்க்கும்போது இந்தக் குறைகள் மங்கிவிடுகின்றன. தவிர, சச்சின் முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆட்டமே பல சமயங்களில் ஆட்டத்தின் முடிவை இந்தியாவுக்குச் சாதகமாகத் திருப்பியிருக்கிறது. மேலும் அவர் சிறப்பாக ஆடியும் பிறர் செய்த தவறுகளால் போட்டி கைவிட்டுப் போகும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, சச்சின் களத்தில் இருக்கும்வரை நெருக்கடி எதுவும் இருக்காது. அவர் அவுட் ஆன பிறகுதான் நெருக்கடி உருவாகும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியில் சச்சின் ஆடிவருகிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இவையெல்லாம் அற்புதமான அம்சங்கள்தான். ஆனால் டெண்டுல்கரின் பங்களிப்பு இவற்றைக் கடந்தது. எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் இந்தியக் கிரிக்கெட் அணியின் போராட்ட முகத்தின் அடையாளங்களாக முறையே கவாஸ்கர், கபில்தேவ் போன்றவர்கள் இருந்தார்கள். கபில்தேவின் வேகம் ஒரு புதிய கலாச்சாரத்தை இந்தியக் கிரிக்கெட்டில் தொடங்கிவைத்தது. இவர்களது பங்களிப்பு முக்கியமாந்துதான். ஆனால் உலகிற்குச் சவால் விடுமளவுக்கு இவர்களது திறமை விகசிக்கவில்லை. 1983 உலகக் கோப்பைப் போட்டியைத் தவிர வேறு எந்தச் சமயத்திலும் இந்திய அணியோ இந்திய ஆட்டக்காரரோ எந்த அணிக்கும் சிம்ம சொப்பனமாக இல்லை. அப்படிப்பட்ட நிலை வராதா என்று எணபதுகளின் இறுதியில் ரசிகர்கள் ஏங்கினார்கள்.

அப்போதுதான் சச்சின் என்னும் அதிசயப் பிறவி களத்தில் பிரவேசித்தது. கவாஸ்கரின் உறுதி, கபில்தேவின் போர்க்குணம் ஆகியவற்ரை ஒன்று திரட்டிய உருவமக அந்தப் பிரவேசம் நிகழ்ந்தது. உத்வேகத்துடனும் பன்முகத் திறமையுடனும் இந்திய அணியின் வேகத்தை வளர்த்தெடுத்து இந்திய அணியின் அடையாளமாகவே மாற்றியது இந்தப் பிரவேசம். இந்தியாவின் சராசரிக் குடிமக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாக சச்சினின் ஆட்டம் விளங்கியது. பெரிய பேட்ஸ்மேன்களே கவனமாக ஆடும் அப்துல் காதிரின் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்து விரட்டிய 16 வயதுப் பையன் ஒரு தலைமுறையின் கனவுக்கு உயிர் கொடுத்தான். பல மட்டையாளர்களும் சந்திக்க அஞ்சிய ஷேன் வார்னின் பந்துகளை அடித்துத் துவைத்தபோது தேசம் ஆனந்தக் கூத்தாடியது. நெடுங்காலமாக அவர்கள் காண விரும்பிய காட்சி அது. புயல் வேக ஷோயிப் அக்தர்களோ பிரட் லீகளோ அவரை அசைக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான ஆவேசத்துக்குத் தக்க பதிலடி கொடுத்ததும் மக்களின் விருப்பத்துக்கு வடிவம் கொடுத்த செயலாக அமைந்தது. போன மாதம் ஹைதராபாதில் அதிரடியாக எடுத்த 175 ரன்கள் மீண்டும் அந்தக் கனவைப் புதுப்பித்தன. சச்சின் மக்கள் நாயகனாக இருப்பதற்குக் காரணம், மக்கள் எதைப் பார்க்க ஏங்குகிறார்களோ அதை அவர் நிகழ்த்திக் காட்டுவதுதான்.

இந்த வயதிலும், இத்தனை காயங்களுக்குப் பிறகும் வேகப் பந்து வீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஆட அவரால் முடிகிறது. வேகப் பந்தை எதிர்த்து ஆடி லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முடிகிறது. பவுன்சர் பந்துகளை ஹூக் செய்யும் துணிச்சலும் அப்பர் கட் அடிக்கும் துல்லியமும் அவருக்கு இப்போதும் வசப்படுகின்றன. லெக் ஸ்பின்னரின் பந்துகளில் இன்சைட் அவுட் ஷாட்டை அவர் அளவுக்குக் கச்சிதமாக யாரும் ஆடுவதில்லை. அவருக்கு முன்னால் நான் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி சொல்லுமளவுக்கு சச்சினின் ஆட்டத் திறன் இப்போதும் மிளிர்கிறது. வாராது வந்த இந்த மாமணி இன்னும் எவ்வளவு நாள் பிரகாசிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சச்சின் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய வரலாற்றின் வரிகளாக அமையும். அவர் எடுக்கும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு அரை சதமும் இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்குப் போடப்படும் உரமாக அமையும். நவீன கிரிக்கெட் வரலாற்ற்றின் நாயகனான சச்சின் டெண்டுல்கர் வரலாற்றின் பக்கங்களை மேலும் மேலும் அலங்கரிக்கட்டும்.

*

No comments:

Post a Comment