Tuesday, October 27, 2015

நீ ஒரு தனிப்பிறவி




"உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி. ஆனால் அவற்றை நான் பின்பற்றாமல் இருந்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் என் வழியில் ஆடினேன்" என்று சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றபோது சேவாக் கூறினார். சேவாகுக்கு யாராலும் அறிவுரை சொல்ல முடியாது. ஏனென்றால் ஆகிவந்த அத்தனை விதிமுறைகளையும் அடித்து நொறுக்கியவர் சேவாக்.

அடித்து நொறுக்குவது என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். பந்து வீச்சாளரின் திறமை, அனுபவம், தடுப்பு வியூகம் என எதையும் மதிக்காதவர் அவர். முதல் ஓவரா, கடைசி ஓவரா, சதத்தை நெருங்கும் நேரமா என எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். போட்டி எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் பந்தை அடிப்பது மட்டும்தான்.

20 ஓவர் போட்டிகளில் மட்டையாளர்கள் எல்லாப் பந்துகளையும் அடித்து ஆடவே விரும்புவார்கள். ஒரு நாள் போட்டியில் பெரும்பாலான பந்துகளுக்கு இந்தமரியாதைகிடைக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகள் அப்படி அல்ல. அதில் விக்கெட் முக்கியம். சில சமயம் ரன்னே வராவிட்டாலும் பரவாயில்லை, விக்கெட் இழக்காமல் இருந்தால் போதும் என்பது முக்கியமாக இருக்கும். எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் இதெயெல்லாம் அனுசரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் சேவாக் மட்டும் விதிவிலக்கு. அவர் தொடக்கத்திலிருந்தே வீச ஆரம்பித்துவிடுவார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் அப்படித்தான் ஆடுவார். இந்த அணுகுமுறையால் அவருக்கு அதிக ரன்களும் கிடைத்திருக்கின்றன. பல முறை விக்கெட்டும் பறிபோயிருக்கிறது.

மட்டை என்னும் மந்திரக்கோல்

இப்படிப்பட்ட ஒருவரை அணியில் எப்படி வைத்திருந்தார்கள்? இவருக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கிடைத்தது? சேவாக் ஒரு தனிப்பிறவி. அவரை எந்தக் கணக்கிலும் சேர்க்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் விலக்கவும் முடியாது. அதுதான் சேவாக்.

மட்டையை அதிரடியாகச் சுழற்றி ரன் அடிப்பவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் ரன் எடுப்பதில்லை. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு உதாரணம். ஆனால் சேவாக் அப்படியல்ல. சர்வதேச அரங்கில் 38 சதங்களை அடித்திருக்கிறார். அவற்றில் 5 இரட்டைச் சதங்கள், இரண்டு முச்சதங்கள். ஆறு முறை 200 ரன்களைத் தாண்டியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 278 பந்துகளில் அவர் அடித்த 319தான் உலகிலேயே மிக வேகமாக அடிக்கப்பட்ட முச்சதம். உலகின் ஆகச் சிறந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக .சி.சி. இந்தச் சதத்தை அறிவித்துள்ளது. 2008-ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர் என்னும் விருதையும் இவர் பெற்றார்.

சேவாக் முழு வீச்சில் ஆடுவதைப் பார்க்கும்போது அவர் கையில் இருக்கும் மட்டை, மந்திரவாதியின் மந்திரக்கோல்போலத் தெரியும். பல சமயம் அவர் மட்டையில் பட்டதும் பந்து தடுப்பாளருக்கு சிரமம் கொடுக்காமல் எல்லைக் கோட்டை நோக்கி விரையும். பிறர் அடிக்கத் திணறும் பந்துகளை சேவாக் அநாயாசமாக அடித்துவிடுவார். அவருக்கென்று சிறப்பான ஷாட் எதுவும் இல்லை. பிறர் அடிக்கும் கட், ட்ரைவ், புல், ஸ்வீப் முதலான ஷாட்களில்தான் சேவாகும் ரன் அடித்தார். ஆனால் அவரால் மட்டும் பிறரைக் காட்டிலும் அதிகமான பந்துகளில் இத்தகைய ஷாட்களை அடிக்க முடிகிறது? நாடி நரம்புகளில் எல்லாம் கிரிக்கெட் உணர்வு ஊறிய பலர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் அவர்களுக்கு அத்தனையும் அத்துப்படி. ஆனால் அவர்களால்கூட முடியாதபடி சேவாக் மட்டும் எப்படி இந்த ஷாட்களை அதிகமாக அடிக்கிறார்?

சேவாகின் நாடி நரம்புகளில் ஊறியிருப்பது வெறும் கிரிக்கெட் அல்ல. அடிக்கும் வெறி. பந்தை அடித்துத் துவைக்கும் வெறி. இந்த வெறிதான் அவரது ஆளுமை. அதனால்தான் அவரால் எந்தப் பந்து வீச்சாளரையும் எந்தப் பந்தையும் எந்தக் களத்திலும் அடிக்க முடிகிறது.

சேவாக் கண்ணை மூடிக்கொண்டு மட்டையைச் சுற்றும் காட்டடி மட்டையாளர் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஆடும் ஒருவரால் 38 முறை 100 ரன்களைக் கடக்க முடியும் என்றால் அவருக்குக் கண்ணை மூடிக்கொண்டதும் ஞானக் கண் திறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அலாதியான ஆட்ட நுட்பம்

சேவாகின் ஆட்டம் பற்றிப் பேசுபவர்கள் அவருக்குத் தடுப்பு ஆட்டம் அவ்வளவாக வராது என்பார்கள். பந்தை ஏன் தடுக்க வேண்டும், அடித்தால் போதாதா என்று கேட்பவரிடம் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அப்படிச் சொல்வதோடு அடி அடி என்று அடித்தும் காட்டினால் அதன் பிறகு என்ன சொல்ல முடியும்?

சேவாக் ஆட்ட நுட்பம் தெரியாதவர் அல்ல. அவர் காலை நகர்த்தாமலேயே ஆடுவதாகப் பலரும் சொல்கிறார்கள். காலையே நகர்த்தாமல் ஒருவர் இவ்வளவு ரன் அடிக்கிறார் என்றால் அந்தக் காலை எதற்காகத்தான் நகர்த்த வேண்டும் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால், சேவாக் காலை நகர்த்தி ஆடுவார் என்பது மட்டுமல்ல, மிகவும் நுட்பமான முறையில் அதைச் செய்வார். எவ்வளவு நுட்பமாக என்றால், அதைப் பார்த்து இன்னொருவரால் அதைச் செய்ய முடியாது. அவ்வளவு நுட்பமாக. பந்தை அடிப்பதற்குத் தோதான இடத்தில் இருப்பதும் பந்தை எதிர்கொள்ளும் நேரமும்தான் ஒரு ஷாட்டின் வெற்றிக்கு முக்கியம். இவை இரண்டையும் சேவாக் அபாரமான கண் பார்வை, அதைத் துல்லியமாகப் பின்தொடரும் கை அசைவு ஆகியவற்றின் கச்சிதமான ஒருங்கிணைப்பினால் சாதித்துக்கொள்கிறார். கண் - கை ஒருங்கிணைப்புக்குப் பக்க பலமாகக் கால்கள் நகரும் - சிறிய அளவில், வேகமாக, நுட்பமாக.

சுழல் பந்தை ஆடும் நுட்பம் பற்றி அண்மையில் பேசிய ராகுல் திராவிட், "எங்கள் எல்லோரையும்விடச் சுழல் பந்துக்கு ஏற்ற வகையில் காலை நகர்த்தி ஆடுவதில் வல்லவர் சேவாக்" என்று சொன்னார். சுழல் பந்துகளை மிட் ஆன், மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர், மிட் விக்கெட் ஆகிய இடங்களில் எல்லைக் கோட்டைத் தாண்டி சேவாக் அனுப்பும் பந்துகளைப் பார்த்தால் அவர் கால் முன்புறம் நகரும் அழகைக் காணலாம். பாயிண்டிலும் தேர்ட் மேனிலும் அவர் வெட்டி அனுப்பும் பந்துகளைப் பார்த்தால் மின்னலைப் பழிக்கும் வேகத்தில் அவரது பின் கால் நகரும் அதிசயத்தைக் காணலாம். முழு அளவில் வீசப்படும் பந்துகளை அடிக்கும்போது அவர் கால்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவார். பந்து விழும் இடத்தில் துல்லியமான நேரத்தில் மட்டையைக் கச்சிதமாக இறக்குவார்.

அணியின் சுமையைக் குறைத்த சக்தி

அடிக்க முடியாத பந்துகளையும் அடிக்கும் வல்லமை படைத்த சேவாக் சில சமயம் மிகச் சாதாரணமான பந்துக்கு ஆட்டமிழந்துவிடுவார். நல்ல பந்துகளை அடிக்க முயன்று தவறுவதும் அடிக்கடி நடக்கும். குறிப்பாக ஸ்டெம்புக்கு நெருக்கமாக வந்து ஸ்விங் ஆகும் பந்துகளில் ஆட்டமிழப்பார். கணிக்க முடியாத அளவில் எழும்பி அல்லது தாழ்ந்து வரும் பந்துகளிலும் அவர் ஏமாந்துவிடுவார். பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் பிரச்சினைதான் இது என்றாலும் சேவாகுக்கு இவை கூடுதலாக இருக்கும். இதுபோன்ற பந்துகளை எதிர்கொள்வதற்கான முக்கியமான அம்சம் கவனத்துடனும் நிதானத்துடனும் ஆடுவது. இது அவரிடம் சுத்தமாக இல்லை.

ஆனால் அப்படியும் இவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து தன் பாணியிலேயே ஆடிக்கொண்டிருந்தார். இதற்குக் காரணம், இவரது அலாதியான ஆட்டத்தின் தாக்கத்தை அணி நிர்வாகம் உணர்ந்திருந்ததுதான். டெஸ்ட் பந்தயங்களில் நின்று ஆடிப் போட்டிகளை வென்றுதரும் பணியை நிர்வாகம் இவரிடம் எதிர்பார்க்கவில்லை. எதிரணிப் பந்து வீச்சாளர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கக்கூடிய இவரிடம் அதையே அணி விரும்பியது. அவர் அடிக்கும் ஷாட்கள் பந்து வீச்சாளர்களின் சமநிலையைக் குலைக்கக்கூடியவை. அந்நிலையில் அடுத்து வருபவர்களால் தங்கள் திறனை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். சேவாக் ஆடத் தொடங்கிய பின்தான் திராவிட் தனது அபாரமான பல இன்னிங்ஸ்களை ஆடினார். சேவாக் உச்சத்தில் இருந்த 2008-2009-ல்தான் இந்தியா டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றது. சேவாக் வந்த பிறகுதான் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சுமை குறைந்தது. சச்சின், திராவிட், லட்சுமணனுடன் சேவாகை ஒப்பிட முடியாது. அதே சமயம் சேவாக் தந்த அதிரடித் தொடக்கம் இவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்தது.

2008-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியை நினைவுகூர்ந்தால் இதைத் தெளிவாக உணர முடியும். நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின் சிறிது நேரத்தில் இங்கிலாந்து 311-8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இந்தியா வெல்வதற்கான இலக்கு 387. அதுவரை இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெல்ல எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் 276. சென்னையில் நான்கவது இன்னிங்ஸில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு 155. அதே சென்னையில் 387 ரன் இலக்கு. ஆடுகளம் சுழல் பந்துக்குத் தோதாக உள்ளது. இங்கிலாந்தின் பந்து வீச்சு வலுவானது. போட்டி இங்கிலாந்தின் கையில் வந்துவிட்டது என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

எந்தப் பதற்றமும் இல்லாமல் களம் இறங்கிய சேவாக் ஆடுகளம், எதிரணி, ஆட்ட நிலவரம் ஆகிய எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்து வீச்சைச் சிதற அடித்தார். 68 பந்துகளில் 83 ரன் அடித்தார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 131-1. இன்னும் 256 ரன் எடுத்தால் போதும். முழுதாக ஒரு நாள் மிச்சம் இருந்தது. அடுத்த நாள் கணிக்க முடியாத அளவில் எழும்பியும் தாழ்ந்தும் வந்த பந்துகளுக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. காம்பீர், திராவிட், லட்சுமணன் ஆகியோர் ஆட்டமிழந்தார்கள். ஆனால் சச்சின், யுவராஜ் அணியைக் கரைசேர்த்தார்கள். இந்தியா வென்றது. சச்சின் சதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். ஆனால் ஆட்ட நாயகன் விருது 83 ரன் அடித்த சேவாகுக்கே வழங்கப்பட்டது. காரணம் அவ்வளவு விரைவாக அவர் அடித்த அந்த ரன்கள்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஐந்தாம் நாளுக்கான இலக்கை 300 ரன்களுக்குக் கீழே கொண்டுவந்தது மகத்தான பங்களிப்பு.

கண்ணிமைக்கவும் இடம் தராமல் ரசிகர்களை மகிழ்வித்த அந்த மட்டை இன்று ஓய்வுபெற்றுவிட்டது. ஓய்வை அறிவிப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னதாகவே சேவாகின் மட்டையின் திறன் மங்கிவிட்டது. கண் - கை ஒருங்கிணைப்பும் உடலின் வேகமும் சிறிதளவு குறைந்தாலும் பழையபடி ஆட முடியாது. அதுபோன்ற தருணங்களில் தன் ஆட்டத்தில் மாற்றம் செய்துகொண்டு தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள். 35 வயதுக்குப் பிறகு மீண்டும் உச்சம் பெற்ற சச்சின் ஒரு உதாரணம். 38-வது வயதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்னும் .சி.சி. விருதைப் பெற்றார் சச்சின். பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள், வயது ஆகிய தடைகளைத் தாண்டி அவரால் தன்னை மாற்றிக்கொண்டு தன் ஆட்டத்தை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள முடிந்தது. சேவாகால் அது முடியவில்லை. காரணம் உள்ளுணர்வையும் வேகத்தையும் நம்பும் அவரது அலாதியான பாணி. அதுவே அவரது பலம். அதுவே பலவீனம்.

ஆனால், அந்தப் பாணிதான் அவரை சச்சின், திராவிட் ஆகியோரைக் காட்டிலும் அதிக இரட்டைச் சதங்களைக் குவிக்க உதவியது. அவர்கள் அடிக்காத முச்சதங்களை அடிக்க உதவியது. ஒப்பிட யாருமற்ற விதத்தில் ஆடிய சேவாக் கிரிக்கெட் அரங்கில், குறிப்பாக டெஸ்ட் ஆட்டத்தில், தனிப் பிறவியாகவே வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.

மணல்மீது சில சிற்றலைகள்


‘மணல்’ குறுநாவல், அதன் நாயகியான சரோஜினி வீடு திரும்புவதில் தொடங்கி, அவள் வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிகிறது. இடையில் சில மாதங்கள். சில சம்பவங்கள்.
மணலை வைத்துப் பெரிய கட்டுமானங்களை எழுப்பலாம். நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் கட்டிடங்களையும் கோபுரங்களையும் எழுப்பலாம். ஆனால் வெறும் மணலை வைத்து அல்ல. அத்துடன் தண்ணீர், சிமிண்ட், கற்கள் எனப் பல அம்சங்கள் சேர வேண்டும். இவை எதுவுமே இல்லாம மணல் எந்தக் கட்டுமானத்தையும் உருவாக்காது. சரோஜினியின் குடும்பம் வெறும் மணலாகத்தான் இருக்கிறது.

சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு பிராமணக் குடும்பம். செலவுக்குக் கையைக் கடிக்கும் பொருளாதார நிலை. நான்கு பெண்கள், இரண்டு பையன்கள். இரண்டு பெண்களுக்குக் கல்யாணமாகிவிட்டது. பெரியவனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்க்கை சாவி கொடுக்கப்பட்ட கடிகாரம் போல ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருக்கிறது. அம்மாவின் சமையலறைக் கடமைகளுக்கு ஓய்வே இல்லை. காலை, மதியம், மாலை, இரவு என்று சாப்பாட்டுக் கடைகளுக்கு நடுவில் வேறு பல வேலைகளும் உண்டு. புதுப்புதுச் சிக்கல்களுக்கும் குறைவில்லை.

அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் ஏன் அன்னியர்களைப் போல இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்குள் பேச்சுவார்த்தையே அதிகம் இல்லை? அவர்கள் ஏன் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியில் இருப்பதையே விரும்புகிறார்கள்? வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றி இவர்களுக்கு என்ன அபிப்பிராயம் இருக்கிறது? பெரியவன் ஏன் எப்போதும் தன் சைக்கிளைத் தாறுமாறாக நிறுத்துகிறான்? ஏன் தன் காலணிகளை எப்போதும் விசிறி அடிக்கிறான்? அலுவலகத்திலிருந்து வந்ததும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக எங்கே ஓடுகிறான்? இரண்டாம் பையன் எப்படிக் குழந்தைகளிடம் விளையாடுகிறான்? அவனுக்கும் பிறரிடம் பேச எதுவுமே இல்லாமல்போவது ஏன்?

தங்கை படிப்பதற்காக மேசையை எடுத்துப் போடுவது, தங்கையின் குழந்தைகளுடன் விளையாடுவது என்பன போன்ற மிகச் சில தருணங்களிலேயே ஆண்கள் குடும்பத்திற்குள் இயல்பாக இருக்கிறார்கள். மற்ற நேரங்களில் இறுக்கமான அன்னியர்களாகவே புழங்குகிறார்கள்.

இறுக்கங்களுடனும் அவஸ்தையுடனும் ஆண்கள் வந்து செல்லும் அந்த வீட்டில் பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள், பேச்சு, சிரிப்பு, அலுப்பு, வருத்தம் என்று இயல்பு வாழ்க்கையின் கூறுகள் அவர்களிடம் காணக் கிடைக்கின்றன. ஆனால் மணலைக் கட்டுமானமாக்க இந்த ஈரம் மட்டும் போதாது. சிமின்டும் ஜல்லியும் தேவை. ஆண்கள் உறுதியான ஜல்லியை உருவாக்கவில்லை. காற்றில் பறக்கும் மணல் துகள்கள் போல அல்லாடுகிறார்கள்.

அவர்கள் ஏன் அல்லாடுகிறார்கள்? அசோகமித்திரன் எந்த பதிலையும் தருவதில்லை. அவர் தருவது சித்திரங்களை மட்டுமே. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய வாழ்க்கைச் சித்திரங்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்தப் படைப்பு பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து நாமே தெரிந்துகொள்ள வேண்டியதுதான். நாம் தெரிந்துகொண்டதுதான் உண்மையா என்று தெரிந்துகொள்ளவும் தரவுகள் இல்லை. எல்லாம் மணலின் சலனங்கள். மணல் கோடுகள். ஈரமற்ற மணல் சித்திரங்கள்.

உணர்ச்சிகளில் தோயாமல் அவற்றைத் துல்லியமாகக் கையாளும் கலைஞர் அசோகமித்திரன். கதையின் ஒவ்வொரு சம்பவமும் இதுபோல ஏதேனும் ஒரு தருணத்தைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தருணமும் வாசகருள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அசோகமித்திரன் எதையும் தானாக உருவாக்குவதில்லை. அவர் யாரைப் பற்றியும் எந்த அபிப்பிராயத்தையும் முன்வைப்பதில்லை. எல்லோரையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். தன் பார்வைக்குப் படுபவற்றைச் சித்தரிக்கிறார். அந்தப் பார்வையின் தனித்துவம் அந்தச் சித்தரிப்பை நுணுக்கமான இழைகள் கொண்ட கோலமாக மாற்றுகிறது.
அன்றாட வாழ்வின் சமன்பாடுகளும், பயணங்களும் மாறும்போது அதற்கேற்ப வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். நிலம், கோவில், குடும்ப வணிகம் முதலானவை சார்ந்த வாழ்க்கை ஒரு விதமான வாழ்க்கை முறையை உருவாக்கியிருந்தது. நவீன வாழ்வு அந்த வாழ்வின் அடிப்படைகளையே மாற்றியது. இந்த மாற்றத்திற்கேற்ற தகவமைப்பு வாழ்க்கை முறையில் போதிய அளவு நடைபெறாத காலகட்டத்தின் திணறலை மணலின் சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
மணல் கதையைப் படிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. எந்தச் சூழலிலும் பெண்கள் குடும்பத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள். அஸ்திவாரமாகவும் சுமைதாங்கியாகவும் இருக்கிறார்கள். பொருளாதாரம் உறவு நிலைகள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால் பொருளாதாரத்தின் மீது எந்த அதிகாரமும் அற்ற பெண்கள்தாம் பொருளாதார நெருக்கடிகளையும் பொருள் சார் உலகின் இதர பிரச்சினைகளையும் தாண்டிக் குடும்பத்தைத் தாங்குகிறார்கள். இதில் அவர்கள் இழப்பது தங்கள் தனித்தன்மையை. கனவுகளை; ஆசுவாசங்களை; சந்தோஷங்களை; நிம்மதிகளை. புறச் சூழலோடு போராடுவதற்கான உரிமைகளையும் அவர்கள் இழக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பலவீனமானதாக ஆகிவிட்டாலும் குடும்பம் என்ற அமைப்பின் அஸ்திவாரத்தை அவர்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

ஆனால் நவீன வாழ்வின் தாக்கத்திற்கு உட்பட்ட தலைமுறையால் வெளியே தெரியாத அஸ்திவாரக் கல்லாக இருந்து அடையாளமற்று மறைந்துபோக முடியாது. அதன் வியர்த்தம் அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. வெறுமையின் கல்லறையில் பொருளின்மையின் அமைதியில் உறங்க அவர்கள் விரும்பவில்லை. பாதுகாப்பற்றது எனினும் வெளியை அவர்கள் நாடுகிறார்கள். அது தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் தங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையும் வாய்ப்பையும் ஆண்களிடமிருந்து மீட்டெடுக்க அவர்கள் தயாராகி விட்டார்கள். இந்த மாற்றத்தின் அடையாளங்களும் மணல் பரப்பின்மேல் சிற்றலைகளாகச் சலனம் கொள்கின்றன.

பூங்காவிற்குச் செல்லும் சரோஜினியை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. முன்முடிவுகளோ தீர்ப்புகளோ அற்று அவள் பயணத்தைப் பார்ப்பது மட்டுமே நமக்குச் சாத்தியம். சரோஜினி வீட்டை விட்டுச் சிறிது தூரமே வருகிறாள். ஆனால் இந்தப் பயணம் வரலாற்றில் மிகப் பெரிய பயணம். இந்தப் பயணத்தை அவசியமாக்கிய காரணிகளைப் புரிந்துகொள்ளும் தேடலைக் கதையின் முடிவிலிருந்து நாம் தொடங்கலாம்.

நூல்: மணல்
(குறுநாவல்)
ஆசிரியர்: அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம்
ப.எண்.123 ஏ/பு.எண்.243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி
சென்னை-05
தொலைபேசி: 044 28482818
விலை: ரூ.300/-

Monday, October 12, 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா: இதுதான் உங்கள் அடையாளமா?

முதல் படம் என்பது எந்த இயக்குநருக்கும் ஒரு மகத்தான கனவு. அதில் தன் திறமையை, ஆளுமையைக் காட்டிவிட வேண்டும் என்று நினைப்பது இயல்பு. வாய்ப்பே கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் ஆண்டுக் கணக்கில் அல்லாடும் சூழலில் இள வயதிலேயே வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அத்தகைய அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் மனதில் என்ன இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் படம் அவரது கனவின் வெளிப்பாடு என்றால் அவரைக் குறித்து அனுதாபமும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் அவரது முதல் படமான 

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் தரத்தை அலசுவதற்கு முன்பு அதன் கதையை, அதாவது கதை என்ற பாவனையை பார்த்துவிடுவோம். படத்தின் தலைப்பு ஒரு ஆணின் பார்வையின் வெளிப்பாடு. ஆணின் பார்வையில் மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்ப்பது தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. எனவே அதை விட்டுவிடுவோம். தலைப்பின் பொருள் சொல்லும் சேதி முக்கியமானது. பெண்களைப் பண்டங்களைப் போலத் தேர்வுசெய்யும் ஒரு ஆணின் மனப்பான்மையை அது வெளிப்படுத்துகிறது.

படத்தின் கதை அல்லது அதுபோன்ற ஒன்று இதுதான்: விடலைப் பருவத்தில் இருக்கும் ஒரு பையன் தன்னுடைய இரண்டு தோழிகளில் ஒருத்தியைத் தன் காதலியாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். சித்தப்பாவின் வழிகாட்டுதலின்படி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அவளும் காதலை ஏற்கிறாள். அந்தக் காதல் தோல்வியில் முடிய, அவன் உடனே இன்னொரு தோழியைச் சந்தித்துத் தன் காதலைச் சொல்கிறான். அந்தக் காதலும் முறிந்துபோக, அவன் மீண்டும் தன் பழைய காதலியிடம் திரும்புகிறான். அதற்குள் இன்னொரு காதலில் விழுந்து எழுந்திருக்கும் அந்தப் பெண் இவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வர, இந்தப் பையன் முற்றிலும் புதிய பெண்ணிடம் தன் காதல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தயாராகிறான்.


காதல் ஏற்படுவது, பிரிவது, புதிய துணை கிடைப்பது என எதையும் நம்பகமாகவோ நேர்த்தியாகவோ சித்தரிக்க இயக்குநர் துளியும் மெனக்கெடவில்லை. காதல் உணர்வைக் காட்டுவதற்கோ பிரிவின் வலியைச் சொல்வதற்கோ ஒரு வலுவான காட்சியைக்கூட இயக்குநரால் யோசிக்க முடியவில்லை. காதல் சமாச்சாரம் இருக்கட்டும். நாயகனின் சித்தப்பாவின் கடை (மதுக் கடைதான்) அவர் கையை விட்டுப் போகிறது. இதை நாயகன் மீட்டுத் தருகிறான். நாயகன் தன் பழைய காதலியை மீண்டும் நெருங்க, காதலியின் உறவினரின் துணையை நாடுகிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவருக்கு ஒரு உதவி செய்கிறான். இதுபோன்ற காட்சிகளிலும் துளியும் நம்பகத்தன்மை இல்லை.


அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். நேரடியான, நெருக்கமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு ஆபாசப் படம் எடுக்கும் திறமை இயக்குநருக்குக் கைவந்திருக்கிறது. சொல்லப்போனால், பெண் உடலைக் காட்சிப் பொருளாக மாற்றாமலேயே, உறவின் நெருக்கத்தைக் காட்சிப்படுத்தாமலேயே ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலுறவைத் தவிர வேறு எந்த உறவும் சாத்தியமில்லை என்னும் பார்வையை வசனங்கள் மூலமும் காட்சிகளாலும் திரும்பத் திரும்பச் சொல்கிறது இந்தப் படம். பாலுறவைத் தவிர வேறு சிந்தனையற்ற விடலைச் சிறுவனின் பார்வையிலேயே படம் நகருகிறது. திரையரங்கில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பெண்கள் சார்ந்தும் பாலுறவு சார்ந்தும் பல இளைஞர்களுக்கு இருக்கும் ஆழ் மன ஆசைகளுக்கும் பாவனைகளுக்கும் திரையில் ஒரு வடிவம் கிடைக்கும்போது அவர்கள் அதைக் கொண்டாடத்தானே செய்வார்கள்?

நான் கன்னி கழியாதவன், எனக்கு அப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்கிறான் நாயகன். அதெல்லாம் டைனோசர் காலத்திலேயே முடிந்துபோன விஷயம் என்கிறார் சித்தப்பா. திரையரங்கம் அதிர்கிறது! இப்படிப் பல வசனங்களை ஆண்களும் பெண்களும் பேசுகிறார்கள். பெண்களை நம்பாதே, நம்பாதே என்று படம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. பெண்ணை நம்பி உருகும் அப்பாவியாக ஆணைச் சித்தரிக்க முயல்கிறது. ஆனால் படத்தின்படியே பார்த்தாலும் அந்தப் பையன் வாய்ப்புக் கிடைக்காததாலேயே ‘சுத்தமாக’ இருக்கிறான். ஓயாமல் வாய்ப்புக்காக ஏங்குகிறான். இவனை மட்டும் எப்படி நம்புவது? பெண்களை நம்பாதே என்று சொல்ல இவனுக்கும் இவன் சித்தப்பாவுக்கும் என்ன யோக்யதை இருக்கிறது? (மேற்கொண்டு படத்தின் காட்சிகளையோ வசனங்களையோ உதாரணம் காட்டுவது நோய்க் கிருமிகளைப் பரப்புவதற்கு ஒப்பானது என்பதால் அது இங்கே தவிர்க்கப்படுகிறது.)

பாலுறவு விழைவும் பெண்ணின வெறுப்பும் படத்தின் ஆதாரமான அம்சங்கள். கூடவே போதை நாட்டம். போதையிலும் பாலுறவு தொடர்பான பேச்சே இடம்பெறுகிறது. படத்தில் வரும் ஆண்(கள்) விரும்புவது பாலுறவை. ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் சாடுகிறார்கள். பெண் வெறுப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். பாலுறவை நாடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம் என்றால் என்ன பொருள்? பெண்ணின் உடல் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று பொருள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல விரும்பும் செய்தியும் இதுதான் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
படம் தன்னை அறியாமலேயே ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. படம் பார்க்க வரும் ஆண்களின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. பாலுறவு விழைவும் பெண் வெறுப்பும் வெளிப்படும்போதெல்லாம் அவர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்திருக்கும் இயக்குநர், அவர்களது உளவியலை, அடி மன ஆசைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்குத் தீனிபோடுகிறார். இதன் மூலம் பார்வையாளர்களின் மலினமான இயல்புகளை வெட்கமின்றிச் சுரண்டுகிறார்.

பாலுறவு வேட்கை கொண்ட விடலைச் சிறுவனின் கதையைப் படமாக்கக் கூடாது என்பதல்ல. ஆனால் விடலைச் சிறுவன் என்றாலே அவனுடைய ஒட்டுமொத்த உளவியலும் பெண் உடல் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் பிரச்சினை. பாலுறவு சார்ந்த உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பாய்ஸ்’ முதலான பல படங்களில் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கிறது. அந்தப் படங்கள் விடலைச் சிறுவர்களின் வாழ்வின் வேறு பரிமாணங்களையும் காட்டின. இந்தப் படமோ அவர்களை முழுக்க முழுக்கப் பாலியல் பிண்டங்களாகச் சித்தரிக்கிறது.

இதே விடலைப் பருவத்தில்தான் பெரும்பாலான இளைஞர்கள் கல்வியை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதே விடலைப் பருவத்தில்தான் பல இளைஞர்கள் கலை, விளையாட்டு, பயணம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதே விடலைப் பருவத்தில் பல்வேறு துறைகளில் உலக சாதனை செய்தவர்களும் இருக்கிறார்கள். உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக்கின் விடலைகளுக்கோ பாலுறவு, மது ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. முதிரா இளைஞர்களின் அரைவேக்காட்டுத்தனமான குரலையே தன் முதல் படத்தின் அடையாளமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக்.

கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, மணிகண்டன், பிரம்மா போன்ற பல இளைஞர்கள் தங்கள் முதல் படத்தில் தமிழ் சினிமாவின் எல்லைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் அர்த்தபூர்வமாகவும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு நடுவே இப்படி ஒரு முதல் படம் வருவது சூழலை மாசுபடுத்தும் முயற்சி. ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.